சனி, 6 டிசம்பர், 2014

மாலைதீவுக்கு தண்ணீர்! அவசரமாக இந்தியா இலங்கை தண்ணீர் அனுப்புகிறது

மாலத்தீவு தலைநகர் மாலேவில் உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, அந்நகரில் வசிக்கும் 100000 குடும்பத்தினர் குடி தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.இதையடுத்து இந்த இக்கட்டான சூழ்நிலை குறித்து இந்தியா, இலங்கை, சீனா மற்றும அமெரிக்கா ஆகிய நாடுகளிடம் உதவி கேட்டுள்ளதாக அந்நாட்டு அமைச்சர் முகமது ஷெரிப் தெரிவித்தார். குடிநீருக்காக அவதிப்படும் மக்கள் தண்ணீர் விற்கும் கடைகளை அடித்து நொறுக்கினர். இந்நிலையில் மாலத்தீவுக்கான இந்திய தூதர் ராஜிவ் சகாரே, இந்தியாவிலிருந்து ஐந்து விமானங்கள் மூலம் தண்ணீர் இன்று கொண்டு வர உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதில் முதல் விமானம் ஐ.எல். 76 குடிநீரை ஏற்றிக்கொண்டு ஏற்கனவே மாலத்தீவில் தரையிறங்கியுள்ளதாக வெளியுறவுத்துறை தொடர்பாளர் சையது அக்பருதீன் டுவிட்டர் இணையதளத்தில் கூறியுள்ளார். தீ விபத்தால் பாதிக்கப்பட்ட தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையில் உள்ள உதிரி பாகங்கள் வெளிநாட்டில் இருந்து தான் வரவேண்டும் என்பதால் நிலைமை சீராக மேலும் சில தினங்கள் ஆகும் என்று ஷெரிப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: