திங்கள், 25 நவம்பர், 2013

விளைநிலங்கள் ஊடாக எரிவாயு குழாய் பதிக்க நீதிமன்றம் அனுமதி

7 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் வழியே இயற்கை எரிவாயு குழாயை எடுத்து செல்ல கெயில் நிறுவனத்திற்கு அனுமதி; ஐகோர்ட்டு உத்தரவு இந்தியா முழுவதும் இயற்கை எரிவாயுவை குழாய் மூலம் எளிதில் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசின் கெயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கேரளா-கர்நாடகா இடையே குழாய் பதிக்கும் திட்டத்திற்காக, தமிழகத்தில் சேலம், கோவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய 7 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் கேட்கப்பட்டன. இதற்கு விவசாய சங்கங்கள், நில
உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், தமிழக அரசின் தொழில் துறை முதன்மைச்செயலாளர் கடந்த ஏப்ரல் 2-ந்தேதி கெயில் நிறுவனத்துக்கு உத்தரவு ஒன்றை அனுப்பினார். அந்த உத்தரவில், ஏற்கனவே ஆர்ஜிதம் செய்யப்பட்ட விவசாய நிலங்களை மீண்டும் விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும், நெடுஞ்சாலை ஓரம் வழியாக கெயில் நிறுவனம், குழாய்களை பதித்துக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கெயில் நிறுவனத்தின் மூத்த மேலாளர் (சட்டம்) ஏ.வெங்கடேசன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கோர்ட், கெயில் நிறுவனம் பதித்துள்ள எரிவாயு குழாய்களை அகற்றுவதற்கும், வேறு இடத்தில் மாற்றி குழாய் பதிப்பதற்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்த தடையை நீக்கக்கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.  பதிலாக மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.வில்சன், மத்திய அரசு வக்கீல் சி.கனகராஜ் ஆஜராகி மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. விசாரணையின் போது தீர்ப்பு கூறிய ஐகோர்ட், கெயில் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இயற்கை எரிவாயு குழாயை விளைநிலங்கள் வழியாக எடுத்து செல்ல அனுமதி அளித்துள்ளது.

கருத்துகள் இல்லை: