வெள்ளி, 29 நவம்பர், 2013

சுயமின் உற்பத்தியே தீர்வு ! 1.5 லட்சதில் வீட்டிலேயே சூரிய மின்சாரம் .பத்ரி

அரசின் மானியம் பற்றியெல்லாம் யோசித்துக்கொண்டிருக்காதீர்கள். (நானாவது இதைச் சொல்லவேண்டுமல்லவா?) நம்மைக் காப்பாற்றிக்கொள்ள நாம், நமக்காக மின்சாரத்தைத் தயாரித்துக்கொள்கிறோம். அவ்வளவுதான்.
முந்தைய பதிவுக்கு இன்று வந்திருந்த ஒரு பின்னூட்டம் இந்தப் பதிவை எழுதத் தூண்டியது.

ஜூன் 2013-ல் சூரிய ஒளி மின்சார அமைப்பை என் வீட்டில் நிறுவினேன். இன்றுவரை பிரச்னை ஏதும் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. நடுவில் ஒருமுறை என் மகள் பல்ப்-வயர்-ஸ்விட்ச் மின் சர்க்யூட் ஒன்றை உருவாக்கி அதனை நேராக பிளக்கினுள் நுழைக்க, மொத்த மின் இணைப்பும் ட்ரிப் ஆகிப்போனது. அப்போது நான் விட்டில் இல்லை. ஏதோ பள்ளிக்கூடப் பரிசோதனையாம். யாருடைய கண்காணிப்பும் இல்லாமல் ரிஸ்க்கான ஒரு விஷயத்தைச் செய்திருக்கிறாள். அதன்பின், என் வீட்டில் சூரிய ஒளி மின் அமைப்பை நிறிவிய S & S Flow Engineering பொறியாளரைத் தொடர்புகொண்டு என் மனைவியே எந்தெந்த இடங்களில் இருக்கும் ட்ரிப்பரைச் சரி செய்வது என்று கேட்டு, சரி செய்துவிட்டார்.
மூன்று இடங்களில் ட்ரிப்பர் போட்டிருந்திருக்கின்றனர். அனைத்துமே ட்ரிப் ஆகியிருந்தன.

இதுவரை இரண்டு முழுக் கட்டணமும் ஓர் அரைக் கட்டணமும் கட்டியிருக்கிறேன். சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது இதுவரை சுமார் ரூ. 8,000-9,000 சேமிப்பு வந்துள்ளது என்று கணிக்கிறேன். ஓர் ஆண்டு முழுதும் பயன்படுத்தினால்தான் சரியாகத் தெரியவரும். இதுவரை ஒரே ஒருமுறை சோலார் பேனல்களைச் சுத்தம் செய்திருக்கிறோம்.

ஒரு கிலோவாட் சூரிய மின் அமைப்பு என் முழுத் தேவைக்குப் போதாது. தெரிந்துதான், சோதனை அமைப்பாக இது போதும் என்று நிறுவியிருந்தேன். சில நாள்கள் வானம் வேகமூட்டமாக இருக்கும்போது குறைந்த அளவு ஃபோட்டான்கள் மட்டுமே பூமியை அடைவதால் மின் உற்பத்தி குறைவாகவே இருக்கும். அப்போது மெயின்ஸிலிருந்து மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும். பேட்டரியில் மின்சாரத்தைச் சேமிப்பது என்பதே திறன் குறைவானது. உற்பத்தியாகும் ஒவ்வொரு சொட்டு மின்சாரமும் பயனாவதில்லை. வேஸ்டேஜ் இருக்கிறது. நான்கைந்து நாட்கள் நாம் வெளியூருக்குப் போய்விட்டுத் திரும்பினால் அந்த நாள்களில் உற்பத்தியாகும் மின்சாரமெல்லாம் வீண்தான். சில நாட்கள் உற்பத்தி அதிகமாக இருக்கும். அன்று நாம் குறைவாகப் பயன்படுத்துவோம். மறுநாள் வானம் மேகமூட்டமாக இருக்கும். அன்றுதான் எல்லா அறைகளிலும் லைட், ஃபேன், டிவி என்று ஓடிக்கொண்டிருக்கும். ஔவையாரின் ‘இடும்பைகூர் என் வயிறே’ என்ற பாடலைத்தான் மேற்கோள் காட்டவேண்டும்.

ஆனால் இதையெல்லாம் தாண்டி, தன்னிறைவு என்ற நிலை இருப்பதால் திருப்தியாக இருக்கிறது.

இப்போது சென்னை தாண்டிய தமிழகத்தில் கடும் மின் பற்றாக்குறை இருப்பதாக அறிகிறேன். மத்திய அரசு ஏதோ தகிடுதத்தம் செய்கிறது என்பதுபோல் தமிழக முதல்வர் ஓர் அறிக்கை விடுத்திருக்கிறார். உண்மை அதுவல்ல. நமக்குத் தேவையான மின்சாரத்தை நாம் தயாரிப்பதில்லை. வெகு தொலைவில் இருக்கிறோம். எனவே நம் மாநிலத்தைக் காக்க ஒரே வழிதான் இருக்கிறது. யாராலெல்லாம் 1.5 லட்ச ரூபாயை முதலீடு செய்ய முடியுமோ அவர்கள் எல்லாம் தத்தம் வீட்டுக்கு ஒரு கிலோவாட் சூரிய மின் அமைப்பைப் பொருத்திக்கொள்வதுதான் ஒரே வழி. கடைசியாக ஒரு நிறுவனத்திடம் பேசியபோது 1.2 லட்சத்தில் செய்துவிடலாம் என்றார்கள். எனக்கு 1.7 லட்சம் ஆனது (மானியம் இல்லாமல்).

அரசின் மானியம் பற்றியெல்லாம் யோசித்துக்கொண்டிருக்காதீர்கள். (நானாவது இதைச் சொல்லவேண்டுமல்லவா?) நம்மைக் காப்பாற்றிக்கொள்ள நாம், நமக்காக மின்சாரத்தைத் தயாரித்துக்கொள்கிறோம். அவ்வளவுதான். பொதுப் பிரச்னைகளுக்குத் தனித் தீர்வுகளை உருவாக்கிக்கொள்வதில் நாம் வல்லவர்கள். அதையே மின் உற்பத்திக்கும் நீட்டித்துக்கொள்வோம். சென்னையைவிட வெளி இடங்களில் இதனை வசதியாகச் செய்யலாம். ஏனெனில் சென்னையில் அபார்ட்மெண்ட் வாழ்க்கையில் அவரவர்க்குத் தேவையான கூரை கிடைக்குமா என்பதில் சந்தேகம் உள்ளது. ஆனால் பிற நகரங்களில் தனி வீட்டில் வசிக்கும், கையில் காசு உள்ள மக்கள் இதனைச் செய்யுங்கள். நீங்கள் பயன்படுத்தாத ஒவ்வொரு யூனிட் மின்சாரமும் எங்கோ ஒரு தொழிற்சாலைக்குப் போய்ச் சேரும். டீசல் ஜென்செட் மின்சாரத்தைவிட சூரிய ஒளி மின்சாரம் செலவு குறைந்தது, பொல்யூஷன் (பெரும்பாலும்) அற்றது.

இதுகுறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் எனக்கு எழுதவும். பதில் சொல்கிறேன்.

2 கருத்துகள்:

Raja சொன்னது…

Dear Sir,

Can you give Dealer Address and its possible to Installment payment like EMI..?

Then Fridge , Washing Machine , Water Heater all home Items possible to use the Same Solar Power"?

Radha manohar சொன்னது…

badriseshadri.in