சனி, 27 ஜூலை, 2013

. ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் நியமன வழக்கு: ஐகோர்ட் தீர்ப்பு சமூக நீதிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி

மனுதாரர் வசந்தா, 27-7-1995 முதல் இணைப் பேராசிரியராகவும், 18-12-1996 முதல் பேராசிரியராகவும், ஐ.ஐ.டி.யில் பணியாற்றி வருவதாகக் கருதப்பட வேண்டும்” என்று நீதியரசர் எஸ்.நாகமுத்து தீர்ப்பளித்திருக்கிறார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை வருமாறு:- கேள்வி :- போக்குவரத்துக் கழகங்களில் புதிதாக 25 பணிமனைகள் அமைக்க அ.தி.மு.க. அரசு கடந்த ஆண்டு ஒப்புதல் வழங்கியதே, ஆனால் அந்தப் பணிமனைகள் அமைக்கப் பட்டதாகத் தெரியவில்லையே? பதில் :- தற்போது அறிவிக்கப்பட்ட 25 பணிமனைகள் மாத்திரமல்ல; ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 43 பணிமனைகளும் இன்னும் அமைக்கப்படவில்லை. அதன் பணிகள்தான் நடைபெற்று வருகின்றன.
9-5-2012 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் வழக்கம் போல முதலமைச்சர் ஜெயலலிதா படித்த 110வது விதியின் கீழான அறிக்கையில், திருவரங்கம், திண்டுக்கல், தேனி, காரைக்குடி, கரூர், ஈரோடு மற்றும் ஓசூர் ஆகிய ஏழு இடங்களில் புதிய பணிமனைகள் அமைக்கப்படும் என்று “மகிழ்ச்சியோடு” அறிவித்தார். அதே அறிவிப்பில், “கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்ற அளவிற்குப் பணிமனைகள் இல்லாததைக் கருத்தில் கொண்டு, சென்னை, விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், மதுரை மற்றும் திருநெல்வேலி அரசு போக்கு வரத்துக் கழகங்களால் தமிழ்நாடு முழுவதும் 25 புதிய பணிமனைகள் அமைக்கப்படும்” என்றும் முதலமைச்சர் 110வது விதியின் கீழ் அறிக்கை படித்தார்.

இதன் பின்னர் 10-5-2013 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா பேரவையில் படித்த 110வது விதியின் கீழான அறிக்கையில், கடந்த இரண்டாண்டுகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் 43 பணிமனைகள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 25 பணிமனைகள் 22 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் புதியதாக அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியாகத் தெரிவித்துக் கொண்டார். ஆனால் அந்தப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இவற்றில் எத்தனை பணிமனைகள் திறக்கப்பட்டுள்ளன என்பதை அரசின் சார்பில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்ப்போம்.

கேள்வி :- மதுரை ராணி மங்கம்மாள் அரண்மனைக் கட்டிடத்தை இடித்திருக்கிறார்களே?

பதில்:- அந்தச் சம்பவத்திற்குக் காரணமான முக்கிய அ.தி.மு.க. பிரமுகரை காவல் துறை தேடிக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் வேறு யாரையோ ஆறு பேரை கைது செய்ததாகக் காவல் துறை கூறுகிறது. பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த ஓர் இடத்தையே இடிக்கின்ற அளவிற்குத் துணிந்திருக்கிறார்கள். முக்கியக் குற்றவாளியைக் கண்டுபிடித்து முறையான நடவடிக்கைகளை இந்த அரசு விரைவில் எடுக்கும் என்று நம்புகிறேன்.

கேள்வி :- சென்னையில் ஐ.ஐ.டி. நிறுவனத்தில் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததா என்பதை சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்களே?

பதில் :- “1995ஆம் ஆண்டு முதல் 26-9-2000 வரை சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற பணி நியமனங்கள் தொடர்பான உண்மைகளை அறிய சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். இந்தப் பணி நியமனங்களில் ஏதேனும் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தால், அதற்குப் பொறுப்பானவர்கள் மீது குற்ற வழக்குகளைப் பதிவுசெய்து சட்டப்படி சி.பி.ஐ. நடவடிக்கை எடுக்கவேண்டும். மனுதாரர் வசந்தா, 27-7-1995 முதல் இணைப் பேராசிரியராகவும், 18-12-1996 முதல் பேராசிரியராகவும், ஐ.ஐ.டி.யில் பணியாற்றி வருவதாகக் கருதப்பட வேண்டும்” என்று நீதியரசர் எஸ்.நாகமுத்து தீர்ப்பளித்திருக்கிறார்.

இந்தத் தீர்ப்பு சமூக நீதிக்கு ஆதரவாக வழங்கப்பட்ட சிறப்பான தீர்ப்பாகும். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக கிடைத்த மாபெரும் வெற்றியாகத்தான் இந்தத் தீர்ப்பு கருதப்பட வேண்டும்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: