ஞாயிறு, 21 ஜூலை, 2013

திருவான்மியூர் பெண் கொலை செய்யப்படவில்லை ! போனில் பேசினார்

சென்னை: கொல்லப்பட்டதாக கூறப்பட்ட திருவான்மியூரை சேர்ந்த கங்காதேவி செல்போன் மூலம் தனது சகோதரருடன் பேசியுள்ளார். கோவையில் காதலனுடன் இருப்பதாகவும் தன்னை யாரும் தேட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை திருநின்றவூரை சேர்ந்தவர் கங்காதேவி (27). கணவர் சரவணன். கடந்த 13ம் தேதி, தனது சகோதரர் ரவிச்சந்திரனிடம் செல்போனில் பேசிய கங்காதேவி, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருப்பதாகவும், தன்னை கார்த்திக் என்பவர் அடித்து கடத்தி செல்வதாகவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். திருநின்றவூர் போலீசில் ரவிச்சந்திரன் புகார் செய்தார்.
இந்நிலையில் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த நங்கமங்கலம் ஏரிக்கரையில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் ஒன்று கிடந்தது. இது குறித்த செய்தியை படித்த தனியார் பள்ளி ஆசிரியை திலகவதி என்பவர், காவேரிப்பாக்கம் காவல் நிலையத்துக்கு சென்று, Ôசென்னை திருநின்றவூரில் வசிக்கும் தனது உறவினர் மகள் கங்காதேவியை காணவில்லை. எனவே அந்த சடலத்தை பார்க்க வேண்டும்Õ என்று கோரினார். இதையடுத்து கங்காதேவியின் கணவர் சரவணன் மற்றும் உறவினர்கள் வாலாஜா அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை பார்த்தனர். மூக்குத்தி, சிகப்பு கலர் கயிறு, முருகன் டாலர், புடவை போன்ற சில அடையாளங்களை வைத்து அது கங்காதேவிதான் என்று அவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து இறுதி சடங்குகளுக்காக சடலத்தை கேட்டனர். போலீசாரோ, தடயவியல் சோதனைகள் முடியும் வரை சடலம் ஒப்படைக்கப்பட முடியாது என்று கூறி விட்டனர்.

போலீஸ் விசாரணையில் கங்காதேவிக்கும் திருநின்றவூரை சேர்ந்த சந்தானத்தின் மகன் கார்த்திக் என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்தது தெரிந்தது. இதையடுத்து கார்த்திக்கை போலீசார் தேடி வந்தனர்.

திடீர் திருப்பம்: இந்நிலையில் ரவிச்சந்திரன் செல்போனுக்கு நேற்றிரவு ஒரு அழைப்பு வந்தது. எதிர் முனையில் பேசியவர் கங்காதேவி. அதிர்ச்சியடைந்த ரவிச்சந்திரன், அவரிடம் விசாரித்தார். அதற்கு, Ôநான் கோவையில் தங்கியியுள்ளேன். கார்த்திக் என்னை கடத்தவில்லை. நாங்கள் இருவரும் விரும்பி தான் கோவைக்கு வந்தோம். சரவணனுடன் வாழ எனக்கு பிடிக்கவில்லை. கார்த்திக்குடன்தான் இருப்பேன். எங்களை யாரும் தேட வேண்டாம். போலீசில் சொல்ல வேண்டாம். எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள்Õ என்று அழுதபடி கூறினார். குரல் மூலம் தனது சகோதரியை அடையாளம் கண்ட ரவிச்சந்திரன், இது குறித்து திருவான்மியூர் மற்றும் காவேரிப்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து திருவான்மியூர் போலீசார், கங்காதேவி மற்றும் கார்த்திக்கை அழைத்து வர கோவை விரைந்துள்ளனர். அதே சமயம், கங்காதேவி என்று அடையாளம் காட்டப்பட்ட கொலையான அந்த பெண் யார் என காவேரிப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை: