வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

ரஷ்யாவில் எரி நட்சத்திரம் வெடித்து சிதறியது! ஜனாதிபதிக்கு பாதாள அறை பாதுகாப்பு!!

மத்திய ரஷ்ய வான்வெளியில் இன்று காலை எரி நட்சத்திரம் (meteorite) ஒன்று, குண்டு வெடிப்பது போன்ற ஒலி, மற்றும் கண்களை குருடாக்கும் ஒளியுடன் விழுந்தது. இதன் அதிர்வு காரணமாக வீட்டு கண்ணாடிகள் உடைந்தன. கார்களில் பொருத்தப்பட்ட அலாரங்கள் ஒலிக்கத் தொடங்கின. மேற்கூரைகள் விழுந்தன.
இன்று காலை 9.20க்கு (0520 GMT) எரி நட்சத்திரம் வெடித்தது.
சுமார் 400 பேர் காயமடைந்துள்ளனர். அதிகமான காயங்கள் சிதறிய கண்ணாடிகள் வெட்டியதால் ஏற்பட்டுள்ளது.

மிகப் பெரிய விண்கல் (asteroid) ஒன்று இன்று பூமியை கடக்க இருக்கும் நிலையில், இந்த எரி நட்சத்திரம் விழுந்திருப்பது அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது. விண்கல்தான் விழுந்து விட்டதோ என்ற பீதியும் ஏற்பட்டது.
மத்திய ரஷ்யாவில் உள்ள செல்யபின்ஸ்க் என்ற தொழில் நகரத்திலேயே இன்று எரி நட்சத்திரம் வானில் வெடித்துச் சிதறியது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 1,500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த நகரம்.
 தொழிற்சாலைகள் அதிகமுள்ள இந்த நகரில் காலையில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தவர்கள், எதிரே வானில் இருந்து வரும் ஒளியை பார்த்தார்கள். பார்த்துக்கொண்டு இருக்கும்போதே, அந்த ஒளி வெடித்து சிதறியதையும் கண்டார்கள். அப்போது பெரிய ஓசை எழுந்தது.
நிலநடுக்கத்தைப் போல மிகப் பெரிய அதிர்வுகள் ஏற்பட்டிருக்கின்றன
 வானிலிருந்து பயங்கர வேகத்தில் தரையை நோக்கி பாய்ந்து வந்த இந்த நட்சத்திரம் தரையை தொடுவதற்கு முன்னரே வெடித்துச் சிதறியது. அதைத் தொடர்ந்து பெரிய அளவில் தீப் பிழம்பு எழுந்ததோடு கடும் அதிர்வும் உண்டானது. இந்த வெடிப்பின்போது பல வீடுகளின் கூரைகள் நொறுங்கி விழுந்தன, ஏராளமான வீடுகளின் ஜன்னல்கள் வெடித்துச் சிதறின. தொலைத் தொடர்பு சேவைகளும் அறுந்துவிட்டன.
 ஜனாதிபதி பூட்டின், இன்று 20 நாடுகளைச் சேர்ந்த நிதி அமைச்சக பிரதிநிதிகளை சந்திப்பதாக திட்டமிடப்பட்டு இருந்தது. எரி நட்சத்திரம் மத்திய ரஷ்யாவை நோக்கி வரும் விஷயம் அவருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து அவர் உடனடியாக மெய்பாதுகாவலர்களால், ஜனாதிபதி மாளிகைக்கு கீழே அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பங்கர் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
 எரி நட்சத்திரம் வெடித்து சிதறுவதற்கு 7 நிமிடங்களுக்கு முன்னரே, ரஷ்ய ஜனாதிபதிக்கு இந்த விபரம் பாதுகாப்பு அமைச்சினால் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மத்திய ரஷ்யாவில் எரி நட்சத்திரம் வெடித்த நேரத்தில் பூட்டின் தரையடி பாதுகாப்பு பங்கருக்குள் இருந்தார். காலை 10.30 மணிவரை அவரது அலுவல்கள் அனைத்தும் கேன்சல் செய்யப்பட்டன. ராணுவத் தளம் ஒன்றில் விமானம் ஒன்று முக்கிய வி.வி.ஐ.பி.களை நாட்டுக்கு வெளியே கொண்டு செல்ல தயார் நிலையில் இருந்தன!
 அதேபோல, பிரதமர் திமித்ரி தெம்வெதேவ்வுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு, அவரும் பாதுகாப்பான இடத்தில் தங்கியிருந்தார். ஆனால், இந்த அதிர்வுகள் தலைநகர் வரை எட்டவில்லை. இருப்பினும், இதுபோன்ற அபாய நிலை ஏற்படும் நேரத்தில் நாட்டின் முக்கிய தலைவர்கள் வெவ்வேறு இடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்படுவது வழக்கம்.
 ரஷ்யாவின் மீது எரி நட்சத்திரம் விழுவதற்காக வந்தபோது அந் நாட்டின் தானியங்கி ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகள் தாமாகவே இயங்கிச் சென்று தாக்கியதில், எரி நட்சத்திரம் சிதறி விழுந்தாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால்தான் எரி நட்சத்திரத்தின் துகள்கள் நிலப்பரப்பில் எங்கும் விழவில்லை என்றும் கூறப்படுகிறது.

ரஷ்ய விஞ்ஞானிகளின் கூற்றுப்படி இந்த எரி நட்சத்திரம் சுமார் 10 டன் எடை இருக்கலாம். இது போன்ற எரி நட்சத்திரம் விழுவது மிக அபூர்வமானது. இதற்குமுன், 1908-ம் ஆண்டு சைபீரியாவில் எரி நட்சத்திரம் விழுந்து வெடித்ததில் 2,000 சதுர கி.மீ. பரப்பளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் அதிர்வுகள் 200 கி.மீ. தொலைவு வரை இருந்தன.
இன்று விழுந்த எரிநட்சத்திரம் தரையில் இருந்து 10,000 மீட்டர் உயரத்தில் (32,800 அடி) வரும்போதே, வெடித்தது (அல்லது வெடிக்க வைக்கப்பட்டது) இந்த உயரம், சாதாரணமாக நீண்டதூர பயணிகள் விமானங்கள் பறக்கும் உயரம் (30,000 – 36,000 அடி).
 எரி நட்சத்திரம் வெடித்ததை அடுத்து இன்று மதியம்வரை செல்யபின்ஸ்க் நகரில் யாரும் வெளியே நடமாட வேண்டாம் என அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. எரி நட்சத்திரம் தரையை நோக்கி வந்த வான்பரப்பில் விமானங்கள் ஏதும் பறக்கவில்லை என்பது, தற்செயலாக ஏற்பட்ட அதிஷ்டம் viruvirupu.com

கருத்துகள் இல்லை: