திங்கள், 11 பிப்ரவரி, 2013

குஷ்புவை பாதுகாக்கவே முடியலை, அப்புறம் மக்களை எப்படி?” கிண்டல்!

கருணாநிதிக்கு குஷ்புவை பாதுகாக்கவே முடியலை… அப்புறம் தமிழக மக்களை பாதுகாக்க எப்படி நேரம் இருக்கும்?” என கேள்வி எழுப்பியுள்ளார், பொதுப்பணித் துறை அமைச்சர் ராமலிங்கம்.
மஞ்சள் விற்பனை மையம் ஒன்றை தொடக்கி வைக்க வந்திருந்தபோதே, அமைச்சர் ராமலிங்கம், நிருபர்களிடம் குஷ்பு பற்றி கவலைப்பட்டார்.
“மத்திய அரசு, வறட்சிக்காக எதையும் அறிவிக்கவில்லை. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க.வும், தமிழக விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்றுத்தர, வலியுறுத்தவும் இல்லை. கருணாநிதிக்கு, குஷ்புவை காப்பாற்றவே நேரமில்லை. அதில், தமிழக மக்களை காப்பாற்றவும், பாதுகாக்கவும் அவருக்கு நேரம் எங்கே இருக்கிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாதான், விவசாயிகளின் நலனை காக்க காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என, தொடர்ந்து போராடினார்.
ஆனால் தி.மு.க., இதுவரை மத்திய அமைச்சர்களை அனுப்பி, மத்திய அரசிடம் முயற்சி மேற்கொள்ளவில்லை. கடந்த காலத்தில் மத்தியிலும், மாநிலத்திலும் தி.மு.க. ஆளும் கட்சியாக இருந்த போதுகூட, அதற்கான முயற்சியை அவர் எடுக்கவில்லை” என்றும் அமைச்சர் ராமலிங்கம் தெரிவித்தார்.
தி.மு.க. உள்கட்சி அடிதடியில் குஷ்பு தாக்கப்பட்டார் என்பதை அமைச்சர் ராமலிங்கம் கிண்டலடித்த அதே நேற்றைய தினத்தில், நெல்லை டவுனில் உள்ள பழைய சினிமா தியேட்டரில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கதர் துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன், மாவட்ட செயலாளர் சுதா பரமசிவம், வாரியத் தலைவர் முருகையா பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டத்தில், அ.தி.மு.க.வில் மூன்று குரூப் உள்ளது. முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாவட்டச் செயலாளர் பாப்புலர் முத்தையா, தற்போதைய மாவட்டச் செயலாளர் சுதா பரமசிவம் ஆகியோர் தலைமையில் இந்த 3 கோஷ்டிகள் செயல்படுகிறது.
நேற்றைய செயல்வீரர்கள் கூட்டத்தில் இந்த மூன்று அணியினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு, பின்னர் ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளைத் தூக்கி வீசி தாக்கினர். இந்த ரகளையைப் பார்த்து அமைச்சர் செய்வதறியாது திகைத்துப் போய் நின்றார். viruviruppu.com

கருத்துகள் இல்லை: