வியாழன், 24 ஜனவரி, 2013

பல் மருத்துவ கல்லூரிகளில் சி.பி.ஐ., அதிரடி சோதனை

சென்னை: முகப்பேர் தாய் மூகாம்பிகை பல் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட நான்கு இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று அதிரடி சோதனை நடத்தினர். காஞ்சிபுரம் மாவட்டம், மேல்வருத்தூரில் உள்ள, ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரியில், முதுநிலை படிப்பு தொடங்குவதற்காக லஞ்சம் கொடுத்த வழக்கில், கல்லூரி நிர்வாகிகள் ராமபத்திரன், கருணாநிதி, முன்னாள் எம்.எல்.ஏ., பழனி, பல் மருத்துவ கவுன்சில் உறுப்பினர் முருகேசன் ஆகியோர், ஜன., 7 ல் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில், இந்திய பல் மருத்துவ கவுன்சிலின் நீண்ட கால உறுப்பினரும், தமிழ்நாடு பல் மருத்துவ கவுன்சில் தலைவருமாக இருந்த குணசீலனுக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து, ஜன., 18 ல், குணசீலன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படார். அவரிடம் இருந்து, 75 லட்ச ரூபாய பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
பல் மருத்துவ கவுன்சிலில் குணசீலன் நீண்ட காலம் உறுப்பினராக இருந்ததால், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் உள்ள கல்லூரி நிர்வாகங்களிடமும், பணம் பெற்றிருக்கலாம் என்ற கோணத்திலும் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று, முகப்பேர் மேற்கில் உள்ள தாய் மூகாம்பிகை பல் மருத்துவக் கல்லூரி, தி.நகரில் உள்ள, டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவக் கல்வி ஆராய்ச்சி மையம், செங்கல்பட்டு கீரப்பாக்கம் ஆசான் பல் மருத்துவக் கல்லூரி, குமாரபாளையம் ஜே.கே.கே., பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில், சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். நேற்று காலை, 11 முதல் இரவு, 7 மணி வரை நடந்த சோதனையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. dinamalar,com

கருத்துகள் இல்லை: