வியாழன், 24 ஜனவரி, 2013

விஸ்வரூபம் தடை; கமலுக்கு ஆதரவான நடவடிக்கை!

‘விஸ்வரூபம் சிறப்பு காட்சி பார்த்த இஸ்லாமிய தலைவர்கள், ‘படம் முஸ்லிம்களுக்கு எதிராக இருக்கிறது அதை தடை செய்யவேண்டும்’ என்று தமிழக அரசிடம் நேற்று மனு கொடுத்திருக்கிறார்கள்.
அவசர அவசரமாக கோவை மாவட்ட ஆட்சியாளரும், ‘கோவையில் படத்தை வெளியிட்டால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்’ என்று அரசுக்கு அறிக்கை கொடுத்திருக்கிறார்.
பல விசயங்களில் பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் செவி சாய்க்காத தமிழக அரசு இரவோடு இரவாக விஸ்வரூபத்திற்கு 15 நாட்களுக்கு தடை விதித்துள்ளது.
‘சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்’ என்று காரணம் சொல்லியிருக்கிறது.
ஆனால், இந்தத் தடை ‘திரையரங்குகளில் படத்தை வெளியிடக்கூடாது’ என்பதாகத்தான் இருக்கிறது. மாறாக, டி.டி.எச். ல் வெளியிடுவதை பற்றி எந்த தகவலும் இல்லை.
கமல்ஹாசன் கூட திரையரங்குகளில் வெளியிடுவதில் ஆர்வம் காட்டவில்லை.
‘படம் இஸ்லாமிய எதிர்ப்பாக இருப்பதால் இது வெளியானாலும், எதிர்ப்பின் காரணமாக மூன்று நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடாது’ என்பதால்தான் அவர் டி.டி.எச். ல் ஒளிபரப்ப அதிக ஆர்வம் காட்டியிருக்கக் கூடும்.
தியேட்டர்களில் வெளியான பிறகு டி.டி.எச். ல் ஒளிபரப்பினால், அந்த நிறுவனங்களிடம் லாபமான வர்த்தகத்தை கமல்ஹாசனால் பெற முடியாது. நிச்சயம் முதலுக்கே மோசம் ஏற்படும். அதனால்தான் அவர் முதலில் டி.டி.எச். என்பதிலேயே உறுதியாக இருந்தார்.
ஆனால், திரையரங்க உரிமையளார்களின் எதிர்ப்பினாலேயே முதலில் தியேட்டர்களில் வெளியிடலாம் என்கிற முடிவுக்கு பல போராட்டங்களுக்கு பிறகு வந்தார்.
‘முன்கூட்டியே படத்தைப் பார்த்தால் இஸ்லாமிய அமைப்புகள் கண்டிப்பாக எதிர்ப்பு தெரிவிப்பார்கள், அதனால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படும்’ என்கிற  எண்ணம் கமலுக்கு இல்லாமலா இருந்திருக்கும்.
பத்திரிகையாளர்களுக்கு கூட முன்கூட்டி படத்தை போட்டுக் காட்டாமல், இஸ்லாமிய கட்சி தலைவர்களுக்கு, போட்டுக்  காட்டியதின் காரணம் என்ன? (21ஆம் தேதி)
இதில் வேறு ஏதோ உள் நோக்கம், (டி.டிஎச். ல் ஒளிபரப்பு) இருக்குமோ என்கிற சந்தேகத்தை தவிர்க்க முடியவில்லை.
‘விஸ்வரூபம் தியேட்டர்களில் வெளியானால்தான் சட்டம் ஒழுங்கு பிரச்சினை  ஏற்படும்; டி.டிஎச். ல் ஒளிபரப்பானால் ஏற்படாதா?’ என்கிற கேள்வியும் எழுகிறது.
ஆக, விஸ்வரூபம் ஏற்கனவே கமல் அறிவித்ததைப் போல், பிப்ரவரி 2 ஆம் தேதி டி.டிஎச். ல் ஒளிபரப்பபடுமா? தடை விதிக்கப்படுமா? அல்லது டி.டிஎச். ஒளிபரப்புக்கு பிறகு தடை நீக்கப்படுமா?  இப்போது விதிக்கப்பட்டிருக்கிற தடை டி.டி.எச். ஒளிபரப்புக்கும் பொருந்துமா?
 என்கிற கேள்விகளுக்கு தெளிவான பதில் கிடைத்தால்தான், தமிழக அரசின் நடவடிக்கை, இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பை ஏற்று செய்யப்பட்டதா? அல்லது கமலுக்கு ஆதரவானதா? என்பதை உறுதியாக சொல்லமுடியும்.
*
குறிப்பு:
‘விஸ்வரூபம்’ பற்றி அநேகமாக எல்லோருமே கருத்துச் சொல்லிவிட்டார்கள்; நம்ம ‘கருத்து சுதந்திர’ ஞாநி யை தவிர.
டாக்டர் அம்பேத்கரை கேலி செய்த கார்ட்டூனுக்கு ஆதரவாகவும், இன்னும் பலர் கருத்துச் சொல்ல தயங்குகிற பல விசயங்களிலும், தமிழக அரசுக்கு எதிராக கூட துணிச்சலோடு கருத்து சொல்கிற ஞாநி விஸ்வரூபம் விவகாரத்துல என்ன ‘கறாரா’ கருத்து சொல்லுவாருன்னு காத்துக்கிட்டு இருக்கேன்.
ஒருவேளை எதிராக சொல்ல வேண்டியிருந்தால்;  பாரதி, அசோகமித்ரன், கமல்ஹாசன் இவர்களுக்கு எதிராக நான் எப்போதும் எதுவும் பேசமாட்டேன் என்று அமைதியாக இருந்துவிடுவாரா? பார்ப்போம்.
இன்னொரு குறிப்பு;
கமலின் இஸ்லாமிய துருப்புச் சீட்டான Master of All subject மனுஷ்யபுத்திரன், ஏற்கனவே ‘உன்னைபோல் ஒருவன்’ என்ற கமலின் இஸ்லாமிய எதிர்ப்பு படத்தில், பாட்டெழுதி, நடிகர் நாசரைப்போல் மணிரத்தினம், கமல் மனதில் இடம் பிடித்துவிட்டார். அதனால் அவர் கருத்து தெரிந்ததுதான்.http://mathimaran.wordpress.com/

கருத்துகள் இல்லை: