புதன், 23 ஜனவரி, 2013

BJP பா.ஜ., தலைவராகிறார் ராஜ்நாத் சிங்

புதுடில்லி : ஊழல் புகாரில் சிக்கியுள்ள, நிதின் கட்காரியை, பா.ஜ., தலைவராக மீண்டும் தேர்வு செய்ய, கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அவர் போட்டியிலிருந்து விலகினார். பா.ஜ.,வின் அடுத்த தேசிய தலைவராக, உ.பி., மாநில முன்னாள் முதல்வர், ராஜ்நாத் சிங், இன்று தேர்வு செய்யப்படுகிறார்.
ஆர்.எஸ்.எஸ்.,வலியுறுத்தல் :t;மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த நிதின் கட்காரி, கடந்த மூன்று ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக உள்ளார். அவரின் பதவிக் காலம், கடந்த டிசம்பர் மாதமே முடிவடைந்து விட்டது. ஆனாலும், புதிய தலைவரை தேர்வு செய்யும் வரை, பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.இந்நிலையில், பா.ஜ.,வின் அடுத்த தேசிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடக்கிறது. இந்தத் தேர்தலில், நிதின் கட்காரியை மீண்டும் தேர்வு செய்ய, அத்வானி உட்பட, கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.நிதின் கட்காரிக்கு சொந்தமான நிறுவனத்தில், பல நிறுவனங்கள் போலி பெயரில் முதலீடு செய்திருப்பதாக, சமீபத்தில் புகார்கள் எழுந்ததே இதற்கு காரணம். இருந்தாலும், "கட்காரியை மீண்டும் தலைவராக்க வேண்டும்' என, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு வலியுறுத்தியது.

இதனால், தலைவர் தேர்வில் குழப்பம் நீடித்து வந்தது. தொடர்ந்து பேச்சுவார்த்தைகளும் நடந்தன.இந்நிலையில், இந்த விவகாரத்தில், நேற்றிரவு திடீர் திருப்பம் நிகழ்ந்தது. நிதின் கட்காரி சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.அதில், "எனக்கு எதிரான ஊழல் புகார்கள், எந்த வகையிலும், பா.ஜ., கட்சியை பாதிக்கக் கூடாது என, நினைக்கிறேன். அதனால், இரண்டாவது முறை, பா.ஜ., தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனால், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வரும், 2005 முதல், 2009ம் ஆண்டு வரை, பா.ஜ., தலைவராக ஏற்கனவே பதவி வகித்துள்ளவருமான, ராஜ்நாத் சிங், இன்று தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. ராஜ்நாத் சிங்கை கட்சித் தலைவராக தேர்வு செய்ய, மூத்த தலைவர்கள் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது. இன்று நடக்கும் தேர்தலின் போது, ராஜ்நாத் சிங்கின் பெயரை, கட்காரி முன்மொழிவார் என்றும் பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன

கருத்துகள் இல்லை: