திங்கள், 23 ஜனவரி, 2012

விதிமீறி கட்டப்பட்ட வணிக வளாகம் இடிப்பு: உரிமையாளர்கள் முன்வந்து நடவடிக்கை

சி.எம்.டி.ஏ.,வின் அதிரடியை அடுத்து, சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில், விதிகளை மீறி கட்டப்பட்ட வணிக வளாகத்தை அதன் உரிமையாளர்களே இடிக்கும் பணியை துவக்கியுள்ளனர்.
சென்னையில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் மீதான நடவடிக்கையை சென்னை ஐகோர்ட் நேரடியாக கண்காணித்து வருகிறது. இதன் காரணமாக, தி.நகர், ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை ஆகிய இடங்களில் உள்ள 64 அடுக்குமாடி கட்டடங்களில் அதிகளவில் விதிமீறல் இருப்பதாக கண்டறியப்பட்டன. இதில் ஆறு கட்டடங்களுக்கு சி.எம்.டி.ஏ., அதிகாரிகளும், 19 கட்டடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகளும் கடந்த அக்டோபர் 31ம் தேதி சீல் வைத்தனர். ஐகோர்ட்டின் கிடுக்கிப்பிடியால் சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்தனர். இதில் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் சுப்ரீம் கோர்ட்டை அணுகி, ஆறு வாரங்களுக்கு தற்காலிகமாக கடைகளை திறக்க இடைக்கால நிவாரணம் பெற்றனர். இதனால், 71 நாள்கள் மூடப்பட்டிருந்த பிரபல வணிக வளாகங்கள் கடந்த 10ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டன.

எதிரொலி: இந்நிலையில், உஸ்மான் சாலையில், பனகல் பூங்கா எதிரில், சரவணா செல்வ ரத்தினம் நிறுவனத்தில் இரு பெரிய வளாகங்கள் உள்ளன. இவற்றை அடுத்துள்ள நிலத்தில், இதே நிறுவனம் சார்பில் மேலும் ஒரு வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக திட்ட அனுமதி கோரும் வரைபடம் தயாரிக்கப்பட்டு, சி.எம்.டி.ஏ.,வுக்கு அனுப்பப்பட்டது. இந்த திட்ட வரைபடத்தில், வளர்ச்சி விதிகளின்படி, போதிய அளவுக்கு வாகன நிறுத்துமிடம், பக்கவாட்டு காலியிடம் ஆகியவற்றுக்கான வசதிகள் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதே சமயத்தில் அந்த குறிப்பிட்ட நிறுவனம், வணிக வளாகம் கட்டும் பணியை கடந்தாண்டு துவக்கியது. திட்ட அனுமதி விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பதால், இதை யாரும் தடுக்கவில்லை. தொடர்ந்து மூன்று தளங்களை தாண்டி கட்டுமானப் பணிகள் நடந்துக் கொண்டிருந்தன. இந்நிலையில் திட்ட வரைபடம் விதிகளுடன் பொருந்திப் போகாததால், அதை சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் நிராகரித்தனர். இதன்பின், தன் நிலத்தில் அந்த நிறுவனம் கட்டுமானப் பணியை தொடர்ந்து நடத்தியதால், பணியை நிறுத்த சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். இதையடுத்து கட்டுமானப் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்டன.

இடிப்பு துவக்கம்: இந்நிலையில், ஏற்கனவே விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களில், 25 வணிக வளாகங்கள் சி.எம்.டி.ஏ., அதிரடி நடவடிக்கையால் தொடர்ந்து 71 நாள்கள் செயல்பட முடியாத அளவுக்கு முடக்கப்பட்டன. இதை கருத்தில் கொண்டு, கட்டுமானப் பணி நிறுத்தப்பட்ட நிறுவனத்தினர் விதிகளுக்குட்பட்டு புதிய திட்ட வரைபடத்தை தயாரித்து சி.எம்.டி.ஏ.,வுக்கு அனுப்ப முடிவு செய்தனர். இதற்காக, அங்கு ஏற்கனவே மூன்று தளங்கள் வரை கட்டப்பட்ட கட்டடத்தை இடிக்க அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி, கட்டட இடிப்பு பணியை வணிக வளாக உரிமையாளர்களே துவக்கியுள்ளனர். இது குறித்து இடிப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறியபோது,""பெரிய ஜே.சி.பி., இயந்திரத்தின் துணையுடன் 20க்கும் மேற்பட்ட பணியாளர்களும் இந்த இடிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் பகலில் இடிக்கும் பணிகளும், அதனால் ஏற்படும் கட்டட கழிவுகளை வெளியேற்றும் பணிகள் இரவு நேரத்திலும் மேற்கொள்ளப்படுகிறது. முழுவதும் இடித்து முடிக்க 20 முதல் 30 நாள்கள் வரை ஆகலாம்,'' என்றனர்.

மற்ற நிறுவனங்களும்...: இது குறித்து சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கூறும்போது, ""பிரபல வணிக நிறுவனம் ஒன்று மூன்று தளங்கள் வரை கட்டிய கட்டடத்தை தானே இடிப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல, மற்ற நிறுவனங்களும் தங்கள் கட்டடங்களை தாங்களே இடித்து விதிகளுக்குட்பட்ட வகையில் புதிதாக கட்டிக் கொள்ள முன்வர வேண்டும்,'' என்றனர்.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை: