புதன், 25 ஜனவரி, 2012

உம்மன்சாண்டி மாற்றி மாற்றிப் பேசுவதுதான் ஆளும் காங்கிரஸுக்கு தலைவலி

தமிழக - கேரள எல்லையில் பதற்றம் குறைந்ததும், முல்லைப் பெரியாறு விவகாரம் முடிந்து விட்டதாக ஒரு தோற்றம் நிலவுகிறது.
ஆனால் அணையை உடைத்தே ஆகவேண்டும் என்கிற தன் நிலையில் இருந்து கேரளா ஒரு அடிகூட பின்வாங்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. இதற்கு அங்குள்ள மீடியாக்களும், அரசியல் கட் சிகளுமே சாட்சி! இது ஒருபுறமிருக்க, அணை பிரச்னை தொடர்பாக, கேரள முதல்வர் உம்மன்சாண்டி மாற்றி மாற்றிப் பேசுவதுதான் ஆளும் காங்கிரஸுக்கு தலைவலியையும், எதிர்க்கட்சிகளுக்கு உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.
சமீபத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் உம்மன்சாண்டி பேசியது கேரளாவில் பலத்த எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. ‘‘புதிய அணைக்காக தமிழ்நாடு பணம் செலவழிக்க வேண்டியதில்லை. மேலும் தற்போது தமிழகத்திற்கு அளிக்கப்படும் தண்ணீரின் அளவும் குறையாது. ‘இடுக்கி அணைக்கு தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக த்தான் புது அணை கட்டுகிறார்கள் என தமிழ்நாடு கூறுவது சரியல்ல. அணையின் கட்டுப்பாடு கேரளா, தமிழ்நாடு மற்றும் மத்திய அரசின் கைகளில் இருக்கும்!’’ என்று அவர் பேசவும் பிரச்னை பற்றிக்கொண்டது.

‘‘புதிய அணை கேரளாவின் கட்டுப்பாட்டில் இருக்கும், தண்ணீர் திறந்து விடுவது குறித்து கேரளாவே முடிவு செய்யும்’’ என்றெல்லாம் சர்வகட்சிக் கூட்டத்திலும், காங்கிரஸ் கட்சிக் கூட்டத்திலும் முடிவெடுத்துவிட்டு அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் உம்மன்சாண்டி தன்னிச்சையாகப் பேசிவிட்ட தாக காங்கிரஸ் கட்சிக்குள் முணுமுணுப்புகள் எழுந்தன. இதுதொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த கேரள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா, ‘‘முதல்வர் ஏன் இப்படிக் கூறினார் என்று தெரியவில்லை. நான் விசாரிக்கிறேன்!’’ என்று பத்திரிகையாளர்களை சமாளித்தார்.
எதிர்ப்பை சமாளிக்க முடியாத உம்மன்சாண்டி, ‘‘புதிய அணையின் கட்டுப்பாட்டை தமிழ்நாட்டிற்கு வழங்க இருப்பதாக நான் பேசவே இல்லை. பத்திரிகைகள்தான் திரித்து எழுதி விட்டார்கள். புதிய அணையின் கட்டுப்பாடு கேரளாவிடம்தான் இருக்கும்!’’ என பல்டி அடித்தார். பிரவம் இடைத்தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என காங்கிரஸ் நினைப்பதால்தான் முதல்வரே இப்படி மாற்றி மாற்றிப் பேசுவதாக சில கேரள பத்திரிகைகளே கிண்டலடித்துள்ளன.

இதற்கிடையில், கடந்த வாரம் முல்லைப்பெரியாறு விவகாரத்துக்காக முழு கடை அடைப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இடுக்கி தவிர, கேரளாவின் பிற மாவட் டங்களில் இதற்கு ஆதரவு இல்லை. பிரவம் இடைத்தேர்தல் முடிந்த பிறகாவது அணைப் பிரச்னையை கேரள அரசியல் கட்சிகள் விட்டால் சரி என்பதுதான் கேரள மக்களின் மனநிலையாகவும் இருக்கிறது.
சைரனை வைத்து சப்போர்ட்!

முல்லைப் பெரியாறு அணை அருகே வள்ளக்கடவில், அணை உடைந்தால் ஒலிக்கக்கூடிய ‘சைரன்’ ஒன்றை புதிதாக கேரள வருவாய்த் துறையினர் சமீபத்தில் பொருத் தியுள்ளனர். இதன் வெள்ளோட்டம் நடந்தபோதே, இந்தப் பகுதி மக்கள் பெரும் பீதியடைந்தனர். அதைச் சொல்லியே அணைக்கு எதிரான கருத்துக்களை வலுப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள் லோக்கல் அரசியல்வாதிகள்.

திருவட்டாறு சிந்துகுமார்
thanks kumudam + sinthu London

கருத்துகள் இல்லை: