சனி, 28 ஜனவரி, 2012

MGR Sivaji டி.எம்.எஸ் குரலில் வித்தியாசம் காட்டியது உண்மையா?


டி.எம்.எஸ், எம்.ஜி.ஆருக்கு பாடும்போது, மிகச் சாதரணமாக பாடியதாகவும், சிவாஜிக்கு பாடியபோது கஷ்டப்பட்டு, அடிவயிற்றிலிருந்து பாடியதாகவும் சொல்கிறார்களே?
-என். முகமது, சேலம்.
“அப்படியெல்லாம் கெடையாது. நாங்க என்ன கொடுக்குறமோ அததான் பாடினார்.” என்று எம்.எஸ்.வியே சொல்லியிருக்கிறார்.
எம்.ஜி.ஆர். பாடல்களில் கமகம், சங்கதி, ஹை பிச் இந்த வகைகளில் பாடல்கள் அமையாது. பாடல்கள் அப்படி அமைந்தால், நுணுக்கமான பாவங்கள்காட்டி நடிக்க வேண்டிவரும். அது எம்.ஜி.ஆருக்கு அறவே பிடிக்காத விசயம்.
துள்ளல் இசையோடு, வேகமான டெம்போக்களில். FLAT NOTES களில்தான் அவர் பாடல்கள் அமையும். அதை பாடுவது பாடகர்களுக்கு சுலபம். (‘அழகிய தமிழ் மகள் இவள்..’ நெஞ்சம் உண்டு.. நேர்மை உண்டு..’ ஒரு பெண்ணைப் பார்த்து..’ பாரப்பா பழனியப்பா..’ நான் ஆணையிட்டால்..’).
அதனால்தான் எம்.ஜி.ஆர், பாடல் காட்சிகளில் முகபாவனைகளைவிட, அதிகம் கைகளை பயன்படுத்தினார். கைகளை சுழட்டி, சுழட்டி நடிக்கும் பாணியே இதுபோன்ற பாடல்களால்தான் அவருக்கு உருவானது.
அதற்கு நேர் மாறாக, சிவாஜிக்கு அமைந்த பாடல்கள் சங்கதி, கமகம், ச,ரி,க,ம,ப,த,நி என்று சுரங்களை சொல்லியும், தா, தை என்று ஜதிகளோடும். ஹை பிச், லோயர் பிச், நார்மல் பிச் என்று எல்லா வகையிலும் பல இசை நுணுக்கங்கள் அமைந்ததாக இருக்கும்.
அவர் நுணுக்கமாக நடிக்கக் கூடியவர் என்பதால் இசையமைப்பாளர்கள் அதுபோன்ற பாடல்களை உருவாக்கினார்கள். (‘பாட்டும் நானே…’ ‘எங்கே நிம்மதி..’)
அதனால்தான் டி.எம்.எஸ் பாடியதில் எம்.ஜி.ஆர்., சிவாஜி வித்தியாசத்தை உணர முடிந்தது.
அநேகமாக பாடல் காட்சிகளில் அதிக க்ளோசப்பில் நடித்த நடிகர் சிவாஜியாகத்தான் இருப்பார். சில நேரங்களில் ஒரிஜனலாக பாடிய, டி.எம்.எஸை விட இவர் ரொம்ப சிரமப்பட்டு பாடியது போலவும் மிகைப்படுத்திவிடுவார்.
*
திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் சனவரி மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.
தொடர்புடையது:

கருத்துகள் இல்லை: