ஞாயிறு, 12 ஜூலை, 2020

நடுரோட்டில் கவிழ்ந்த லாரி: காயம் அடைந்தவர்களை கவனிக்காமல் மது பாட்டில்களை திருடிய மக்கள்

நடுரோட்டில் கவிழ்ந்த லாரி: மதுபாட்டில்களை அள்ளிச்சென்ற மக்கள்!மின்னம்பலம் : வேடசந்தூர் அருகே டயர் வெடித்து நடுரோட்டில் மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளானவர்களைப்  பற்றி கவலைப்படாமல் வண்டியில் இருந்த மதுபாட்டில்களை மக்கள் அள்ளிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் தாமரைப் பாடியில் உள்ள டாஸ்மாக் குடோனில் இருந்து வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டி, எரியோடு, தென்னம்பட்டி ஆகிய மதுபானக் கடைகளுக்கு மதுபாட்டில்களை ஏற்றிக் கொண்டு மினி லாரி ஒன்று நேற்று முன்தினம் (ஜூலை 10) மாலை சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை திண்டுக்கல் பொன்மாந்துறையை சேர்ந்த பரமசிவம் என்பவர் ஓட்டினார். அவருடன் பணியாளர்கள் விஜயன், குமரேசன் ஆகியோரும் சென்றனர்.
திண்டுக்கல் - கரூர் நான்கு வழிச்சாலையில், வேடசந்தூர் அருகே உள்ள விட்டல்நாயக்கன்பட்டி என்னுமிடத்தில் சென்றுகொண்டிருந்த மினி லாரியின் பின்பக்க டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி, நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரியில் அட்டைப்பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் சாலையில் விழுந்து நொறுங்கின. மேலும், அட்டைப் பெட்டிகளுடன் மதுபாட்டில்கள் ஆங்காங்கே சாலையில் சிதறி கிடந்தன. இதை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் பார்த்தனர்.
அவர்கள் சாலையோரத்தில் தங்களது வாகனங்களை நிறுத்தி விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களைப் பற்றி கவலைப்படாமல் தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை அள்ளி சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்களும் அங்கு படையெடுத்தனர். சிலர் தாங்கள் அணிந்திருந்த லுங்கியில் மதுபாட்டில்களை அள்ளிச் சென்றனர்.
மேலும், சிலர் சாலையில் துண்டுகளை விரித்து அதில் மதுபானங்களை போட்டுக்கொண்டு சென்றனர். ஒரு சிலர் அட்டைப்பெட்டிகளை அலசி பார்த்து, அதில் தாங்கள் விரும்பும் மதுபானங்களைத் தேர்வு செய்து எடுத்துச் சென்ற காட்சியும் அரங்கேறியது.
விபத்து குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு நெடுஞ்சாலைத் துறை ரோந்து போலீஸார், சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு தான் அங்கு வந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அங்கிருந்தவர்களை விரட்டினர்.
பின்னர் விபத்தில் காயம் அடைந்த மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸார் இன்னும் சிறிது நேரம் தாமதமாக வந்திருந்தால் லாரியில் இருந்த மதுபாட்டில்கள் அனைத்தையும் மக்கள் அள்ளி சென்று இருப்பார்கள். மினி லாரியில் கொண்டு சென்ற மதுபானத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜ்

கருத்துகள் இல்லை: