செவ்வாய், 25 ஜூன், 2019

மோடிக்கு எதிரான கருத்தை வெளியிட்டால் உயிருக்கு ஆபத்து: தேர்தல் ஆணையம்

மோடிக்கு எதிரான கருத்தை வெளியிட்டால் உயிருக்கு ஆபத்து: தேர்தல் ஆணையம்மின்னம்பலம் : நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் போது கட்சிகளுக்கு இணையாக கடும் சர்ச்சையில் சிக்கியது இந்திய தேர்தல் ஆணையம். ஆளுங்கட்சியான பாஜகவுக்கு சாதகமாகவே முற்றிலும் செயல்படுகிறது என்று தேர்தல் ஆணையத்தின் மீது கடுமையான புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் தேர்தல் முடிந்து மீண்டும் பாஜக ஆட்சி அமைந்த நிலையில், இப்போதும் தனது அந்த ‘பெயரை’ காப்பாற்றிக்கொண்டிருக்கிறது தேர்தல் ஆணையம்.
கடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசிய பேச்சுகள் தேர்தல் விதிமுறைகளை மீறியவை என பல முறை எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பின. தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா, அசோக் லாவாசா ஆகியோரில் அசோக் லாவசா பிரதமரின் பேச்சு தேர்தல் விதிமுறைக்கு எதிரானது என்று தேர்தல் ஆணையக் குறிப்புகளில் எழுதினார். ஆனால் அவரது கருத்து அரோராவால் புறக்கணிக்கப்பட்டது. இதையடுத்து, ‘இனி நான் தேர்தல் ஆணையக் கூட்டங்களில் பங்கேற்க மாட்டேன்’ என்று அரோராவுக்கு லாவசா கடிதம் எழுதினார். தேர்தல் ஆணையத்துக்குள் நிலவிய இந்தப் போக்கு பெரும் சர்ச்சையாகப் பார்க்கப்பட்டது.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு எதிராகத் தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லாவாசா எழுதிய குறிப்புகள் என்ன என்று கேட்டு புனேவைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் விஹார் துர்வே தலைமை தேர்தல் ஆணையத்துக்கு விண்ணப்பித்தார். பிரதமரின் தேர்தல் பிரச்சாரம் தொடர்பாகத் தேர்தல் ஆணையர் லாவசா தெரிவித்த கருத்துகளை வெளியிட வேண்டும் என்பதே தகவல் மனுதாரரின் கோரிக்கை.
ஏப்ரல் 1 வார்தா உரை, ஏப்ரல் 9 லாத்தூர் உரை, ஏப்ரல் 21 ஆம் தேதி பதன், பர்மேர் ஆகிய பகுதிகளில் ஆற்றிய உரை, ஏப்ரல் 25 அன்று வாரணாசியில் ஆற்றிய உரை ஆகிய பிரதமர் மோடியின் உரைகள் பற்றி வந்த புகார்களின் மீது தேர்தல் ஆணையர் லாவசா என்ன கருத்து எழுதியிருக்கிறார் என்ற தகவலைக் கேட்டிருந்தார் விஹார். மேலும் இந்த பேச்சுகளின் மீதான புகார்களை அடுத்து தேர்தல் ஆணையம் பின்பற்றிய விதிமுறைகளின்படியான நடவடிக்கைகள் பற்றியும் தகவல் கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், “தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி இதுபோன்ற தகவல்களை வெளியிட விலக்கு உள்ளது. ஏனென்றால், இந்தத் தகவலை வெளியிடுவது என்பது ஒரு சிலரின் உயிருக்கு ஆபத்தாகவோ, அல்லது அவர்கள் தாக்கப்படுவதற்குக் காரணமாகவோ அமையலாம். எனவே அப்படிப்பட்ட தகவலை வெளியிடுவதற்கு பாதுகாப்புக் காரணங்களுக்காக விலக்கு இருக்கிறது” என்று தெரிவித்துள்ளது.
ஆக தேர்தல் ஆணையர் லாவசா எழுதிய குறிப்புகளை இப்போது வெளியிட்டால் அவரது உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறது தேர்தல் ஆணையம். இது தேசிய அரசியல் வட்டாரங்களில் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

கருத்துகள் இல்லை: