சனி, 29 ஜூன், 2019

ஒரே நாடு ஒரே ரேஷன் தமிழகத்தில் உள்ள வட மாநிலத்ததவருக்கே பெரிதும் பயன்படும் .. மத்திய அரசு அறிவிப்பு

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு: வைகோ எதிர்ப்பு!மின்னம்பலம் : ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்துக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மத்திய உணவு அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையில் நடந்த மாநில உணவுத்துறைச் செயலாளர்கள் கூட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தை ஒருங்கிணைத்து, இந்தியா முழுவதிலும் ஒரே ரேஷன் கார்டு முறைக் கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பேசிய ராம்விலாஸ் பஸ்வான், “இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் பெரிய அளவு பயன் பெறுபவர்கள் தினம் தினம் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் தமிழகத்துக்குச் செல்லும் வட மாநிலக்காரர்கள்தான். தமிழகத்தில் இருக்கும் அனைத்து வட மாநிலத்தினருக்கும், இனி மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுகள் கிடைக்கும். அவர்களும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் முழு பயனை அடைவார்கள்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மத்திய அரசின் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று (ஜூன் 29) வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்தியா முழுவதையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து, அனைத்து மாநிலங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்துவதை ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், சனாதன சக்திகள் தங்கள் கொள்கையாகக் கொண்டிருக்கின்றன. இதனால்தான் ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே மொழி; ஒரே பண்பாடு என்பதை நடைமுறைப்படுத்திட பா.ஜ.க. ஆட்சி கடந்த 5 ஆண்டுகளாக முனைந்து செயல்பட்டது. ஒரே தேர்தல்; ஒரே தேசிய கல்விக் கொள்கை; ஒரே சுகாதாரக் கொள்கை; ஒரே நுழைவுத் தேர்வு; ஒரே வரி என்பதில் தொடங்கி, தற்போது நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை எனும் திட்டத்திற்கு அகரம் எழுதி உள்ளனர்.
பொதுவிநியோக திட்டத்தைச் சிறப்பாக நடைமுறைப்படுத்திவரும் மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கிறது. இதனைச் சீர்குலைக்கவும், வட இந்தியாவிலிருந்து புலம்பெயரும் மக்களை ஊக்குவித்துத் தமிழ்நாடு உள்ளிட்ட பிற தென்னக மாநிலங்களில் வலிந்து குடியேற்றவும், ஏழை - எளிய சாதாரண தொழிலாளர்களுக்கு பொது விநியோக முறையில் எந்த மாநிலத்திலும் உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று பா.ஜ.க. அரசு ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தை அறிமுகம் செய்கிறது.
பொது விநியோகமுறை என்பது மத்திய மாநில அரசுகளின் பொதுப்பட்டியலின் கீழ் வருவதைப் பயன்படுத்தி, மாநில அரசின் அதிகாரத்தைப் பறித்து ஆதிக்கம் செலுத்த முயல்வது கடும் கண்டனத்திற்கு உரியது” என்று தெரிவித்துள்ளார்.
”மத்தியில் அதிகாரக் குவிப்பு என்பதை ஒரு கொள்கையாக வைத்துக்கொண்டு பா‘நிதி ஆயோக்’ வடிவமைத்து தருவதைச் செயல்படுத்த மோடி அரசு துடிப்பது கூட்டாட்சிக் கோட்பாட்டைச் சீர்குலைப்பது மட்டுமல்ல, அரசியல் சட்டத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் முயற்சி ஆகும்.
இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தேசிய இனங்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் வெவ்வேறானவை. பொது விநியோக முறையை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதன் மூலம். இந்தியா முழுவதும் உணவுப் பழக்க வழக்கங்களையும் ஒரே முறையில் மாற்ற வேண்டும் என்கிற பா.ஜ.க. அரசின் உள்நோக்கம் நாட்டில் விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடும். எனவே, மத்திய அரசு ‘ஒரே நாடு; ஒரே ரேஷன்’ திட்டத்தை கைவிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை: