புதன், 26 ஜூன், 2019

சுகாதாரத்தில் பின்னோக்கிச் சென்ற தமிழகம்: நிதி ஆயோக்!... 3 வதில் இருந்து 9 ஆவது இடத்திற்கு ..

மின்னம்பலம் : சுகாதாரத்தில் பின்னோக்கிச் சென்ற தமிழகம்: நிதி ஆயோக்!சுகாதாரத்தில் தமிழகம் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
மத்திய அரசின் ஆலோசனை அமைப்பான நிதி ஆயோக் அமைப்பு ஆண்டுதோறும் மருத்துவம், சுகாதாரம் தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுவருகிறது. உலக வங்கியின் ஒத்துழைப்புடனும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் உதவியுடனும் இந்த ஆய்வு நடத்தப்பட்டு தரவுகள் வெளியிடப்படுகின்றன. நோயிலிருந்து தற்காத்துக்கொள்ள விழிப்புணர்வு உண்டாக்குதல், நோய்கள் பரவாமல் தடுத்தல் உள்ளிட்ட 23 அம்சங்களின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களிலும் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை தயாரிக்கப்படுகிறது.
இதன்படி 2017-18ஆம் ஆண்டுக்கான சுகாதாரம் குறித்த ஆய்வறிக்கையை நிதி ஆயோக் நேற்று (ஜூன் 25) வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவில் சிறப்பான சுகாதார வசதிகளைக் கொண்ட முதன்மையான மாநிலமாகக் கேரளம் உள்ளது. இந்தப் பட்டியலில் கடந்த ஆண்டு மூன்றாவது இடத்திலிருந்த தமிழ்நாடு தற்போது ஆறு இடங்கள் சரிவைக் கண்டு ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது.

ஆந்திரப் பிரதேசம் இரண்டாவது இடத்தையும், மகாராஷ்டிரம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து சுகாதார நிலைகளில் உத்தரப் பிரதேசம் மிகவும் பின்தங்கியுள்ளது. இதுகுறித்து நிதி ஆயோக் உறுப்பினர் வினோத் பால் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "இந்தியா சுகாதார செலவுகளுக்கு ஜிடிபியில் 2.5 சதவிகிதத்தைச் செலவிடுகிறது. அனைத்து மாநிலங்களும் தங்களது பட்ஜெட்டில் 4.7 சதவிகிதம் முதல் 8 சதவிகிதம் செலவிடுகின்றன" என்றார்.
கடந்த ஆண்டில் பரவிய டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்த நடவடிக்கை, சாத்தூரில் எச்ஐவி தொற்று பரவிய நோயாளியின் ரத்தத்தைக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏற்றியது ஆகியவை கடுமையான விவாதத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழகம் நிதி ஆயோக் வெளியிட்ட சுகாதாரப் பட்டியலிலும் மிகப்பெரிய பின்னடைவைக் கண்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பு அட்டவணையில் இந்த ஆண்டு தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உள்ளது எனக் கூறி மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை தமிழகத்துக்கு வழங்கிய விருதை, தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். இந்த நிலையில் நேற்றே, இதுபோன்ற ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது நிதி ஆயோக்.

கருத்துகள் இல்லை: