ஞாயிறு, 23 ஜூன், 2019

மரம்வெட்டி என்று சொன்னால் வெட்டுவோம்: சீறிய ராமதாஸ் வீடியோ


மின்னம்பலம்  : சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய ராமதாஸ், பத்திரிகையாளர்களைத் தரக்குறைவாக விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவுடன் கூட்டணி வைத்தபிறகு செய்தியாளர்களைச் சந்தித்து அதுகுறித்து விளக்கமளித்த பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறினார். ஒருகட்டத்தில் கேள்வி கேட்கும் நிருபரைப் பார்த்துக் கோபமாகப் பேச ஆரம்பித்துவிட்டார்.
அதன்பிறகு பிரச்சாரத்தின்போது பூத்தில் நாம்தான் இருப்போம் என்று அன்புமணி பேசியதும், பூத்தில் நம் சிங்கக் குட்டிகள்தான் இருப்பார்கள் என்று ராமதாஸ் பேசியதும் காணொலிகளாக வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தின.

இந்த நிலையில் பாமகவின் ஒரு பிரிவான தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கத்தின் சார்பில் ‘வளர்க்கப்படுகின்ற வெறுப்பு அரசியல்’ என்ற தலைப்பில் கருத்தரங்குக்கு நேற்று (ஜூன் 22) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்துக்கான அழைப்பு நமக்கும் வந்தது. இதுதொடர்பாக பாமக நிர்வாகிகள் சிலரைத் தொடர்புகொண்டு பேசியபோது, “ஊடகங்கள் எங்கள் மீது காட்டும் காழ்ப்புணர்வுக்குப் பதிலடி கொடுக்கவும், சமூகரீதியாக எங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கும் பதிலளிக்கவே இந்தக் கூட்டம்” என்று தெரிவித்தனர். இதுதான் கருத்தரங்கத்தில் ராமதாஸ் பேசிய பேச்சிலும் வெளிப்பட்டுள்ளது.
சென்னை அடையாற்றிலுள்ள முத்தமிழ் பேரவையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், பாமக பொருளாளர் திலகபாமா, எழுத்தாளர் கண்மணி குணசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் இறுதியாக நிறைவுரையாற்றிய அவ்வியக்கத்தின் நிறுவனரும், பாமகவின் நிறுவனருமான ராமதாஸ், “டெலகிராப் என்று கொல்கத்தாவிலிருந்து வரும் ஒரு பத்திரிகை. அதன் நிருபர் இங்கு இருக்கிறான். அவன் என்னிடம் ‘சார், மரத்தை வெட்டிவிட்டீர்களாமே’ என்று கேட்கிறான். அப்போது நான், தம்பி இந்த கேள்விக்கு நான் 100 தடவை பதில் சொல்லிவிட்டேன். திரும்பவும் நீ கேட்கிறாய் என்றால், ராமதாஸ் என்பவன் மரத்தை வெட்டுபவன் என்று மக்களுக்குப் பதிய வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் கேட்கிறாய். இனிமேல் ஏதாவது போராட்டம் என்றால் மரத்தையெல்லாம் வெட்ட மாட்டோம். இதேபோல கேள்வி கேட்கும் ஆளை வெட்டிக்கொன்று விட்டு போராட்டம் செய்கிறோம் என்றேன்.
உடனே அனைவரும் எழுந்து என்ன இப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டனர். 100 தடவை இதனை கேட்டுவிட்டீர்கள் என்றேன். 101வது தடவை கேட்டால் பதில் சொல்ல வேண்டியதுதானே என்று ஒருவன் கூறினான். அப்படியென்றால் ராமதாஸ் என்றால் மரம்வெட்டி என நிரூபிக்க அவர்கள் முயல்கிறார்கள்” என்று கடுமையாகப் பேசினார்.
தொடர்ந்து பத்திரிகையாளர்களைத் தரக்குறைவாக விமர்சித்தவர், “ஏண்டா நாய்களா, கம்னாட்டி பசங்களா, இது கிராமத்து பாஷை. நான் வைத்த மரத்தை வந்துபாருங்கள் என்றேன். ஒரு வருடமாகிறது இதுவரை எந்த நாயும் வந்து பார்க்கவில்லை. அறக்கட்டளை மூலமாக வனமே வைத்துள்ளேன்” என்றார்.
மேலும், “இந்தப் பேரியக்கத்தின் சார்பாக நம் நோக்கத்தை நம்முடைய மக்களுக்குக் கொண்டு செல்வோம். எந்த மதத்துக்கும் சாதிக்கும் நாம் எதிரானவர்கள் கிடையாது. அனைவருக்காகவும்தான் இந்த ராமதாஸ் 40 வருடங்களாகப் போராடி வருகிறான்” என்றும் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில், “செய்தித் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் விவாதங்களில் நடுநிலையையும், அறத்தையும் பூதக்கண்ணாடி வைத்து தான் தேட வேண்டியிருக்கிறது. ஊடகங்களில் நடுநிலை திரும்பும் வரை ஊடக விவாதங்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்க மாட்டார்கள்” என்று அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: