ஞாயிறு, 23 ஜூன், 2019

எண்ணெய் வேண்டாம் ஜஸ்டின் ட்ருடோ... இயற்கை போதும்!' - கனடா பூர்வகுடிகள் போர்க்கொடி


.vikatan.com ௦ மு.ராஜேஷ் : எண்ணெய் நிறுவனங்களால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் அதிகரித்துவரும் வேளையில், எதற்காக இந்தத் திட்டத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டது என்பது புரியாத ஒன்றாக இருக்கிறது.
உலகில், மக்களிடையே நிறைந்துகிடக்கும் புதையல் கதைகள் ஏராளம். அப்படிப்பட்ட கதைகள் பெரும்பாலானவற்றில் ஒரு நம்பிக்கை உண்டு. பூமிக்கடியில் புதைந்துகிடக்கும் புதையலை வெளியே கொண்டுவருவதற்குப் பலிகொடுப்பது அவசியம் என்பது. இன்று, உலகில் மதிப்புமிக்க புதையலாகக் கருதப்படும் கச்சா எண்ணெய்யும் அதுபோன்ற ஒரு புதையல்தான். ஆனால், அந்தப் புதையலை அவ்வளவு எளிதாக வெளியே எடுத்துவிட முடியாது. கச்சா எண்ணெய் பலிகேட்பது நிலத்தை, இயற்கை வளங்களை. அதைக் கொடுத்துவிட்டால் போதும் புதையலை வெளியே கொண்டுவந்துவிடலாம். அப்புறம் என்ன, பணம் கொட்டும். வேண்டியதெல்லாம் கிடைக்கும். ஆனால் இயற்கை வளங்கள்? இப்போது  கனடா அரசு அனுமதிகொடுத்திருப்பதும் அதுபோன்ற ஒரு திட்டத்துக்குத்தான்.
கனடாவில் 1940-களின் இறுதியில், அல்பெர்ட்டா பகுதியில் எண்ணெய் வளம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்தப் பகுதியில், பிட்டுமென் மற்றும் கச்சா எண்ணெய் மண் படிமங்களாக இருந்தன.  எனவே, அதைப் பிரித்தெடுப்பது எளிதானதாகவும் இருந்தது. அதைத் தொடர்ந்து, புதிதாக எண்ணெய் நிறுவனங்கள் அல்பெர்ட்டா பகுதியில் கால் பதித்தன. எண்ணெய் வளத்தைச் சுரண்ட ஆரம்பித்தன.
ஆனா,ல் அவர்களுக்கு ஒரு சிக்கல் இருந்தது. கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்ய வேண்டுமென்றால், கடல்பகுதிதான் ஏற்றதாக இருக்கும். அதை ட்ரக்குகளில் கொண்டுசென்றால் நேர விரயம் ஆனது, செலவும் அதிகமானது. அதன் பின்னர்தான், எண்ணெய்க் குழாய் இதற்குச் சரியான தீர்வாக இருக்கும் என முடிவுசெய்யப்பட்டது.

 அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, 1953-ல் எண்ணெய்க் குழாய் பயன்பாட்டுக்கு வந்தது. ட்ரான்ஸ் மவுன்டெயின் பைப்லைன் எனப்படும் இது, அல்பெர்ட்டா பகுதியிலிருந்து பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரை வரைக்கும் கச்சா எண்ணெய்யைக் கொண்டுசெல்கிறது.1150 கிலோ மீட்டர் தூரம்கொண்ட இந்தக் குழாயில்,  பம்ப்பிங் ஸ்டேஷன்களும் வழியெங்கும் அமைக்கப்பட்டிருக்கின்றன.  தற்போது, இந்த குழாயின் விரிவாக்கத் திட்டத்துக்குத்தான் இப்போது அனுமதியளித்திருக்கிறார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. அதன்படி, ஏற்கெனவே இருக்கும் குழாய்க்கு அருகில் கூடுதலாக இரண்டு எண்ணெய்க் குழாய்கள் பதிக்கப்படும். இதன்மூலமாக 3 லட்சம் பேரல்களாக இருக்கும் இதன் கொள்ளளவு, 8 லட்சம் பேரல்களாக உயரும். 

கருத்துகள் இல்லை: