திங்கள், 24 ஜூன், 2019

அப்பாவி இந்தியன் மனதில் யோகாவின் மூலம் இந்துவெறியும் அல்லவா ஏறப் போகிறது?


Vijay Bhaskaravijay : மதவாத சக்திகள்
அடுத்த பதினைந்து அல்லது
பத்துவருடங்கள் கழித்து இந்தியாவில் நடத்தப் போகும் மாபெரும் இனவழிப்புக்கு அடித்தளமாக ’யோகா’ என்ற விஷயத்தையும் பரப்புகிறார்கள் என்ற கோணத்தில் பார்க்காதவரை நாம் அனைவரும் ஏமாந்துதான் போவோம்.
யோகா நல்ல விஷயமாக இருக்கலாம்.
ஆனால் யோகாவை ஏன் இவ்வளவு தீவிரமாக முன்வைக்கிறார்கள். ஏன் இவ்வளவு அனிமேட்டடாக கொண்டாடுகிறார்கள், ஏன் இவ்வளவு வேகமாக திணிக்கிறார்கள் என்பதை யோசிக்காதவரையில் நாம் அனைவரும் ஏமாந்துதான் போவோம்.
மோடி போன்ற தலைவர்களின் தலைமையில் ஒரு இயக்கம் எதைத்திணித்தாலும் அதை சந்தேகக்கண் கொண்டுதான் பார்க்கவேண்டும்.
பா.ஜ.க அமைச்சர்கள் தொடர்ச்சியாக மதவெறிக் கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். அவர்களது ஒவ்வொரு செயலிலும் சொல்லிலும் மதவெறி இருக்கிறது.
அவர்கள் இவ்வளவு ஆர்வமாக திணிக்கும் யோகாவை எப்படி ஒரு இந்திய ஒருமைப்பாட்டை நம்புபவனால் ஏற்றுக் கொள்ள முடியும்.
நிச்சயமாக அதில் உள் அர்த்தம் இருக்கிறது என்று தெரியவில்லையா?
இந்து மதம் ஆயிரம் பாகுபாடுகளை மக்கள் மேல் காட்டிக் கொண்டிருக்க, அதை மறைத்து அதன் மேல் ஒரு பெருமிதம் உண்டு பண்ணவே யோகாவை இப்படி புகழ்பெற வைக்கிறார்கள் என்ற எளிய உண்மை தெரியவில்லையா?
ஒரு இந்தியனாக தொடர்ச்சியாக தினத்தந்தி மட்டும் வாசிப்பவனாக உங்களை கற்பனை செய்து கொள்ளுங்கள்.

ஆர்.எஸ்.எஸ் ஒரு இந்து அடிப்படைவாத இயக்கம்
அதே அளவு நிறைய முஸ்லிம் அடிப்படைவாத இயக்கமும் இருக்கும்.
ஆனால் முஸ்லிம் அடிப்படைவாத இயக்கங்கள் மேல் இருக்கும் பயமும், அருவருப்பும் ஆர்.எஸ்.எஸ் மீது இருக்காது.
காரணம் என்னவென்று யோசித்திருக்கிறீர்களா?
இப்போது யோகாவை ஆதரிக்கும் நம் அறிவுஜீவிகள் போல் எம்.எஸ் உதயமூர்த்தியில் இருந்து ஜெயமோகன் வரை கோடித்தெரு மாமா, சித்தப்பாவரை ஒரு விஷயத்தை சும்மாவேனும் சொல்லிவைப்போம்.
“ஆர்.எஸ்.எஸ் ஒரு சுயக்கட்டுபாட்டை வளர்க்கும் இயக்கம்.அதில் செர்ந்தால் ஒழுக்கம் வளரும்” இதை திரும்ப திரும்ப மக்கள் மேல் திணித்து ஆர்.எஸ்.எஸ் மேல் ஒரு அருவருப்பு வளராத பக்குவத்துக்கு நம் மனதை தயார்படுத்தி விட்டார்கள்.
அதே மாதிரி ஒரு இந்து மனநிலையைத்தான் இந்த யோகா திணிக்கிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
இந்த யோகா விளம்பரங்கள் எதைச் சொல்கின்றன.
// இந்தியர்கள் அனைவரும் இந்துக்களே.//
இந்த இந்துக்களே என்பதை நேரடியாகச் சொன்னால் மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக பேசுவார்கள்.
அதனால் அவர்கள் யோகாவை கக்கத்தில் தூக்கிக் கொண்டு வந்துவிட்டார்கள்.
இன்னும் கொஞ்சநாளில் பாருங்கள் வேத கணிதம் அற்புதமானது. அதை கட்டாயம் கணிதபுத்தகங்களில் சேர்க்கவேண்டும் என்று சேர்த்து இந்துமதப் பெருமையை மாணவர்கள் மனதில் திணிப்பார்கள்.
வேதப்பாரம்பரியம்தான் இந்தியா என்பதை அதன்முலம் மக்கள் மனதில் பதியவைப்பார்கள்.
சமூகநீதி புரிந்தவர்கள் உண்மையான அக்கறையில் அப்படித் திணிப்பதை எதிர்க்கும் போது ஒரு கணித ஆர்வலனாக நான் என்ன சொல்வேன்
“ஐயா ஐயா கணக்குப் படிச்சா ரொம்ப நல்லதுய்யா. அது வேதத்துல இருந்தா என்ன? குரான்ல இருந்தா என்ன? அறிவுதான. மோடி மேல உள்ள கோபத்த மோடி மேல காட்டுங்க. அத கணக்கு மேல காட்டாதீங்க” என்பேன்.
இங்கேதான் இந்துவெறியர்கள் ஜெயிக்கிறார்கள்.
இந்தியாவில் மூன்றுவிதமான இந்துக்கள் இருக்கிறார்கள்.
அதற்குமுன்பாக இந்தியாவில் 85 சதவிகிதம் இந்துக்கள் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.
-முதல்வகை இந்துக்கள் இந்துமத வெறியர்கள். இவர்களுக்கு இந்துமதத்தின் குறைகளைச் சொன்னால் புரியவே புரியாது. என்ன அநியாய தர்மத்தையும் ஏதாவது ஒரு தத்துவம் சொல்லி நிருபித்துவிடுவார்கள்.
-இரண்டாம் வகையினர் இந்து மதத்தினால் ஏற்பட்ட தீமையை புரிந்து கொண்டவர்கள். இவர்கள் தீவிரமாக இந்துமதத்தின் சடங்குகளை திணிப்புகளை எதிர்ப்பவர்கள். இவர்கள் குறைவாகவே இருப்பர்கள்
-மூன்றாம் வகையினர் ”பொதுமக்கள்”. அவர்களுக்கு இந்து என்ற எண்ணம் அதிகமிருக்காது. ஆனால் இந்து மதப் பண்டிகைகளை கொண்டாடுவார்கள். அதிரசம் சுட்டு சாப்பிடுவார்கள். இந்து மத அழகியலை அழகியலுக்காக கொண்டாடுவார்கள். இந்து மதம் அழிகிறதே என்று கவலைப்படவும் மாட்டார்கள். வளர்ச்சியடைகிறதே என்று மகிழ்ச்சியடையவும் மாட்டார்கள்.
இந்த மூன்றாம் வகை அப்பாவி இந்துமதத்தினர்கள் இருக்கிறார்கள் இல்லையா அவர்களை முதல்நிலை வெறிகொண்ட இந்துக்களாய் ஆக்குவதுதான் மதவாத சக்திகளின் நோக்கம்.
எப்படி மதவாத சக்திகளாக, ஒரு வெறியர்களாக ஆக்குவது.
ஏதாவது ஒரு விஷயத்தின் மூலம் ஒன்று திரட்டுவது, அப்படி திரட்டுவதின் மூலம் காட்டப்படும் கூட்டத்தைக் கண்டு மக்கள் ஆழ்மனதில் நாம் இத்தனைபேர் இருக்கிறோம். நாம் அனைவரும் இந்துக்கள் என்ற எண்ணத்தை வரவழைப்பதுதான் வெறியர்களாவதற்கு முந்தைய நிலை.
அந்த நிலைக்குதான் இந்த யோகா யுத்தியை மதவாத சக்திகள் தொடர்ச்சியாக விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
காந்தி இது மாதிரி ஒரு யுத்தியை நல்ல விஷயத்துக்கு பயன்படுத்தினார். அந்நிய துணிகளை ஏற்காமல் புறக்கணிக்கவேண்டும் என்றார். இதை ஒரு வீட்டின் குழந்தைகூட செய்யும். அதை அவர்கள் செய்யும் போது அவர்களுக்கும் போராட்ட உணர்வு வருகிறது. அதன் மூலம் ஒரு எழுச்சி வளர்க்கிறது.
இதைத்தான் யோகா மூலமாக மதவாத சக்திகள் தீய நோக்கத்திற்காக இப்போது செய்து வருகின்றனர்.
இதை இந்தியர்களாகிய நாம் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.
யோகா உடலுக்கு நன்மையானது. உண்மைதான்.
ஆனால் மோடி எதற்காக அதை எடுத்துக் கொண்டு பிரச்சாரம் செய்கிறார் என்பதை பார்க்க வேண்டும் அல்லவா?
கொஞ்சம் விவரம் தெரிந்தவர்கள் அன்னப்பறவை போல மோடியையும் யோகாவையும் பிரித்து ஒன்றை ஒதுக்கி ஒன்றைக் குடித்துக் கொள்வீர்கள்.
ஆனால் அதிகம் விவரம் தெரியாத அப்பாவி இந்தியன் மனதில் யோகாவின் மூலம் இந்துவெறியும் அல்லவா ஏறப் போகிறது.
இந்த எளிய உண்மை ஏன் நமக்கு தெரியாமல் போனது.
ஏன் யோகாவின் கவர்ச்சியில், யோகாவை முன்னிறுத்தும் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானவர்களின் சதியை கவனிக்காமல் போனோம்.
நானும் மகாபாரத உதாரணத்தையே சொல்கிறேன்.
எப்படி சிகண்டியை முன்னிறுத்தி பீஷ்மரை அர்சுனன் எதிர்த்தானோ
அப்படி மோடியும் அவர் சகோக்களும் யோகாவை முன்னிறுத்தி,
இந்திய ஒருமைப்பாடு என்னும் பீஷ்மரை,
இந்துவெறி என்னும் அம்பை எய்து எதிர்க்க முன்னேறுகிறார்கள்.
அவர்கள் முன்னேறுவதற்கு வசதியாக நாமே மோடி வேறு, அவர் பரப்பும் யோகா வேறு என்று பிரச்சாரமும் செய்கிறோம்.
நீ புடுங்குற ஆணி எல்லாமே தேவையில்லாததுதான் என்று வடிவேலு சொல்வதைப் போல,
இந்திய கலாச்சார ரீதியாக மோடி எந்த சிறிய திட்டத்தை, பிரச்சாரத்தை அறிவித்தாலும்
அதற்குள் இந்துவெறிதான் இருக்கும் என்பதை
ஆணித்தரமாக நம்பாதவரை
நாம் ஏமாந்துதான் போவோம்.

கருத்துகள் இல்லை: