வெள்ளி, 11 ஜனவரி, 2019

காங்கிரஸை எதிர்க்கும் ஜோதிமணி.. 10% இட ஒதுக்கீடு

10% இட ஒதுக்கீடு: காங்கிரஸை எதிர்க்கும் ஜோதிமணிமின்னம்பலம் : 10 சதவிகித இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளதற்கு, தமிழக காங்கிரஸின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ஜோதிமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த 8ஆம் தேதி மக்களவையிலும் 9ஆம் தேதி மாநிலங்களவையிலும் நிறைவேறியது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகள் மசோதாவை ஆதரித்து வாக்களித்தன. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் இட ஒதுக்கீட்டு மசோதாவை ஆதரிக்கும் காங்கிரஸின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் காங்கிரஸின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி.

இதுதொடர்பாக ஜோதிமணி தனது முகநூல் பக்கத்தில், “உயர் சாதியினருக்குப் பொருளாதார அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஆதரித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முடிவு துரதிர்ஷ்டவசமானது. இது நூற்றாண்டு கால ஒடுக்குமுறையைக் கருத்தில்கொண்டு சாதிய அடிப்படையில் மட்டும் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் அரசியல் சாசனத்துக்கு முரணானது” என்று விமர்சித்துள்ளார்.
“உயர் சாதியினருக்குப் பொருளாதார அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு என்பது இட ஒதுக்கீடு கொள்கையை காலப்போக்கில் நீர்த்துப்போகச் செய்யும் ஆபத்துள்ளது. வருடத்துக்கு 8 லட்சம் வருமானமுள்ளவர்களை ஏழைகளென வரையறுப்பது ஏற்புடையதல்ல. எந்தப் புள்ளி விவரத்தின் அடிப்படையில் இம்மசோதா உருவாக்கப்பட்டுள்ளது?” என்று கேள்வி எழுப்பிய ஜோதிமணி,
உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ஏற்கெனவே பொருளாதார அடிப்படியிலான 10% இட ஒதுக்கீடு செல்லாது எனத் திட்டவட்டமாகத் தீர்ப்பளித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் இந்த மசோதா எப்படி நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெற முடியும் என்றும் சங்தேகம் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸின் முக்கிய பெண் தலைவர்களின் ஒருவரான ஜோதிமணி, 2011ஆம் ஆண்டு கரூர் சட்டமன்றத் தொகுதியிலும், 2014 மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் நெருக்கமானவராகக் கருதப்படும் ஜோதிமணி, தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் குழுவில் உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் ஜோதிமணியின் கருத்து முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
இதற்குப் பதிலளித்துள்ள மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன், “என் காங்கிரஸ் சகோதரி ஜோதிமணியின் இந்தக் கருத்து துரதிர்ஷ்டவசமானது. எனக்கோ காங்கிரஸுக்கோ ஏற்புடையதல்ல. மோடி அரசின் இந்த ஜும்லா சட்டம் உச்ச நீதிமன்றத்தில் எடுபடாது. காங்கிரஸ் இதை 2014 தேர்தல் அறிக்கையில் ஏற்றுக் கொண்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: