திங்கள், 7 ஜனவரி, 2019

வேன் லாரி விபத்து ஐய்யப்ப பக்தர்கள் 10 பேர் உயிரழப்பு . தெலுங்கனா பக்தர்கள் ..நேருக்கு நேர் மோதி விபத்து


THE HINDU TAMIL : புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பைபாஸ் சாலையில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சென்ற வேன், ட்ரெய்லர் லாரியுடன் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானதில் 10 அய்யப்ப பக்தர்கள் பலியாகினர், 5 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த பயங்கர விபத்து இன்று மதியம் 2.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது.  தெலங்கானாவைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 15 பேர் சபரிமலைச் சென்று விட்டு தங்கள் ஊருக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற வேன் எண் AP 28 TD 6809 ஆகும்.
திருமயம் பைபாஸ் சாலையில் இந்த வேன் வந்து கொண்டிருந்த போது எதிரில் வந்த கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக நேருக்கு நேர் மோதியது. லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்று தலைமறைவானார்.

இதில் வேனில் வந்த அய்யப்ப பக்தர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  படுகாயமடைந்த 5 பேர் திருமயம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இறந்தவர்கள் உடல்கள் திருமயம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.  காயமடைந்த மேலும் 5 பேர் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் எஸ்.கணேஷ், போலீஸ் உயரதிகாரி செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். திருமயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இறந்தவர்கள், காயமடைந்தவர்களை போலீஸார் அடையாளம் காண முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
அமைச்சர் விஜயபாஸ்கர்:
விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் மீட்பு படையினர் தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக அப்பகுதியில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருமயம் மருத்துவமனையில் நேரில் பார்வையிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் உயிரிழந்த அய்யப்ப பக்தர்கள் உடலை அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் அனைத்துச் செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: