வியாழன், 28 டிசம்பர், 2017

ராசாவுக்கு பக்கபலமாக நின்ற திராவிட இயக்கங்கள் மீது சில தலித்திய அமைப்புக்கள் ..

Prabaharan Alagarsamy : 2ஜி பொய்வழக்கை முறியடித்து ஆ.ராசா உள்ளிட்டோர் விடுதலை பெற்ற பிறகு, பல முன்னணி தலித்திய செயல்பாட்டாளர்கள், அவரை பாராட்டுகிறார்கள், நேரில் சென்று வாழ்த்துகிறார்கள். நமக்கு மகிழ்ச்சிதான்.
ஆனால் அதேசமயம் தங்கள் வசதிக்கேற்ப ஆ.ராசாவின் வெற்றியை திரித்துக்கொள்ளலாம் என்று சிலர் நினைப்பது நேர்மையான செயல் அல்ல.
தோழர் எவிடன்ஸ் கதிர், "ஒற்றை ஆளாக நீதி களத்தில் போராடி வென்று இருக்கிறார் ராஜா.தி.மு.க மீதான களங்கத்தை தீர்ப்பு உடைத்து இருக்கலாம்.ஆனால் உடைத்தவர் ராஜா." என்கிறார்.
உண்மைதான், ஒற்றையாளாக நீதி களத்தில் போராடினார் ஆ.ராசா. ஆனால், தமிழக அரசியல் தளத்தில் அவருக்கு துணைநின்றவர்கள் யார் என்பதை அறியாதவரா கதிர்?
இந்த விடுதலைக்கு முன்பு, எப்போதாவது ராசாவிற்கு ஆதரவாக ஒரு வரியாவது எழுதியிருப்பாரா? சில மாதங்களுக்கு முன்பு, நீதிபதி கர்ணன் குறித்து அவர் எழுதிய ஒரு பதிவில், கர்ணன், மாயாவதி, ராசா போன்றவர்கள் தவறிழைத்தவர்கள் என்கிற பொருள்படும்படி எழுதியிருந்தார். அந்த பதிவிலும், ராசாவிற்கு ஆதரவாக நான் அவரிடம் கேள்வி எழுப்பினேன்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருக்கு திரு.கவுதம சன்னா அவர்கள், ஆ.ராசாவின் ஆளுமையை வியந்து பாராட்டியிருக்கிறார். அந்த பதிவில் அவர், திமுக ஆ.ராசாவை கைவிட்டுவிட்டதாக எழுதியிருக்கிறார். எவ்வளவு ஒரு அபாண்டமான புளுகு இது?
திகார் சிறையில் இருந்த ஆ.ராசாவை திமுக தலைவர் கலைஞரும், ஸ்டாலினும் நேரில் சென்று ஆறுதல் கூறினர். கட்சி பொறுப்பில் இருந்து ஆ.ராசா நீக்கப்படவில்லை, சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த ஆ.ராசாவுக்கு கட்சியின் சார்பில் விமான நிலையத்தில் பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டது, மீண்டும் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. கட்சியின் எந்த ஒரு பொறுப்பாளரும் ஆ.ராசாவை கைவிட்டதில்லை.
வழக்கு நடந்த காலத்தில், நூற்றுக்கணக்கான திமுக கூட்டங்களில் மாநிலம் முழுக்க அவர் பேசியிருக்கிறார். மாநாடுகளில் முழங்கியிருக்கிறார். இதெல்லாம், தினந்தோறும் திமுக 2ஜி வழக்கினால் அவமானங்களை சந்தித்துக்கொண்டிருந்தபோது நடந்தது. ஆனால் விசிகவின் துணை பொதுச்செயலாளர், திமுக அவரை கைவிட்டதாக கொஞ்சம்கூட கூசாமல் எழுதுகிறார்.
இவர்களுடைய நோக்கம் என்ன?
கஷ்டகாலத்தில் துணை நிற்பவன் தான் உண்மையான நண்பன். ஆனால் இவர்கள் எப்படி நடந்துக்கொண்டார்கள்?
விசிகவின் தலைவரால் உருவாக்கப்பட்ட மக்கள் நலக்கூட்டணியின் முக்கியமான குற்றச்சாட்டே திமுக ஊழல் கட்சி என்பதுதானே? 2ஜி ஊழல் 2ஜி ஊழல் என்று மேடைதோறும் முழங்கியதே மக்கள் நலக்கூட்டணி.
2ஜி ஊழல் என்று பேச்சு ஆரம்பித்த அடுத்த கணத்தில் இருந்து இந்த கணம் வரை, அது ஊழல் அல்ல என்று மக்கள் களத்திலே தொடந்து பேசியது திராவிடர் கழகம்.
நூற்றுக்கணக்கான கூட்டங்களில், இந்த ஊழல்(?) குறித்து மக்களுக்கு விளக்கி பேசியிருக்கிறார், கருஞ்சட்டை தமிழர் பேராசிரியர் சுபவீ.
பெரியார் மீதும், வீரமணி மீதும், திராவிடர் இயக்கத்தின் மீது அபாண்டமான பொய் புளுகுகளை கூச்சமில்லை பேசிய வருகிற தலித்திய அறிவுஜீவிகளிடம், ஆ.ராசாவை அவர்கள் வாழ்த்தி பாராட்டும்போது வீரமணியையும், திராவிடர் கழகத்தையும், தலைவர் கலைஞரையும் குறிப்பிடவேண்டும் என்கிற நேர்மையுணர்ச்சியை எதிர்பார்க்ககூடாதுதான்.

கருத்துகள் இல்லை: