வியாழன், 28 டிசம்பர், 2017

நீதிமன்றம் :லதா ரஜினிகாந்த் கடையை போலீஸ் உதவியுடன் காலி செய்யலாம் வாடகையை ஏற்காவிட்டால் ..

tamilthehindu :மாநகராட்சி உயர்த்திய கடையின் வாடகையை லதா ரஜினிகாந்த் ஏற்காவிட்டால், காவல்துறை உதவியுடன் கடையை காலி செய்யலாம் என சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சென்னை ஆழ்வார்பேட்டை, சி.பி. ராமசாமி சாலையில், மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் ஒன்றில், கடந்த 25 ஆண்டுளாக, ‘டிராவல் எக்சேஞ்ச் இந்தியா' தனியார் டிராவல் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு வாடகையாக மாதம் 3702 ரூபாயை செலுத்தி வந்தனர். இந்நிலையில், திடீரென வாடகை தொகையை 21160 ரூபாயாக உயர்த்தி சென்னை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, லதா ரஜினிகாந்த் சார்பில் மோகன் மேனன் தொடர்ந்த வழக்கில், மாநகராட்சி அளித்த பதிலில், குறிப்பிட்ட கால இடைவெளியில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கடைவாடகை மாற்றியமைக்கப்படுவதாகவும், இதுவரை முறையாக செலுத்திவந்த லதா ரஜினிகாந்த் திடீரென எதிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், உயர்த்தபட்ட வாடகையை செலுத்த விருப்பமில்லாவிட்டால் கடையை காலி செய்துவிட்டு பொது ஏலத்தில் பங்கேற்று கடையை பெறும் முயற்சியில் லதா ரஜினிகாந்த் ஈடுபடலாம் எனவும் மாநகராட்சி தெரிவித்தது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி எஸ்.வைத்தியநாதன், கடை வாடகை உயர்த்தப்பட்டதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். பல ஆண்டுகளாக அந்த இடத்தில் தொழில்புரிந்து வருவதால், மாநகராட்சி வாடகையை ஏற்பதா வேண்டாமா என லதா ரஜினிகாந்த் முடிவு செய்துகொள்ளலாம். லதா ரஜினிகாந்துக்கு கடை தேவைப்படும்பட்சத்தில் ஒரு மாதத்தில் அதற்கான தொகையை செலுத்த வேண்டும்.
தவறும்பட்சத்தில் அந்த கடையை மாநகராட்சி ஏலத்தில் விடலாம். ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டால் அதனை எதிர்த்தும் லதா ரஜினிகாந்த் நீதிமன்றத்தை நாடலாம் என்பதால், ஏலம் அறிவிக்கப்பட்ட பின்னரும் கடையை காலி செய்யாவிட்டால், காவல் துறை உதவியுடன் லதா ரஜினிகாந்த் அனுபவித்து வரும் கடைக்குள் சென்று சென்னை மாநகராட்சி காலி செய்யலாம் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: