செவ்வாய், 26 டிசம்பர், 2017

மலையாள நடிகர் பாசில் புதுசேரியில் வரி எய்ப்பு .. சொகுசு கார் வாங்கியதில் ...

மின்னம்பலம் :போலி முகவரி மூலம் சொகுசு கார் வாங்கி வரி ஏய்ப்பில் ஈடுபட்ட வழக்கில் மலையாள நடிகர் பகத் ஃபாசில் கைது செய்யப்பட்டு, பிறகு விடுதலை செய்யப்பட்டார்.
மலையாள நடிகர் பகத் ஃபாசில், கடந்த சில மாதங்களுக்கு முன் ரூ.70 லட்சம் மதிப்பிலான இ கிளாஸ் பென்ஸ் காரை வாங்கியுள்ளார். இவர் தனது காரை புதுச்சேரி முகவரியில் பதிவு செய்துள்ளார்.
பகத் ஃபாசிலின் வாகன ஆவணங்களில் பதிவு செய்துள்ள முகவரியில் வேறொருவர் வசித்து வருவது தெரியவந்தது. இந்தக் காரை கேரள மாநிலத்தின் பதிவு செய்திருந்தால், 20 லட்சத்துக்கும் மேலாக வரி கட்டியிருக்க வேண்டும். ஆனால், பாண்டிச்சேரியில் 1.5 லட்சம் மட்டும் வரியாகக் கட்ட வேண்டும். இதனால் போலி வீட்டு ரசீது மூலம் பகத் சொகுசு கார் வாங்கியது தெரியவந்தது.
மேலும், இதேபோல் அமலா பால், சுரேஷ் கோபி உள்ளிட்ட மலையாளத் திரைத் துறையினர் சிலர் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. அமலா பால் தரப்பில் ‘தவறு செய்யாமல் ஏன் பயப்பட வேண்டும்’ என்று சொல்லி உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. நடிகர் சுரேஷ் கோபி முன்ஜாமீன் வாங்கியிருக்கிறார். அதேபோல பகத் ஃபாசிலும் முன்ஜாமீன் கேட்டிருந்தாலும், திருவனந்தபுரம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு ஐம்பதாயிரம் ரூபாய் பணமும், இருவரது பிணைக் கையெழுத்தும் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.
கேரளாவில் வசிக்கும் பணக்காரர்கள் பலர் இந்த மாதிரி கார் வாங்கும் செயலில் ஈடுபட்டதையறிந்து, கேரள அரசாங்கம் நடத்திய ஆய்வில் கடந்த ஐந்து வருடத்தில் மட்டும் கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் வேறு மாநிலங்களில் சொகுசு கார்கள் வாங்கியதில் இழப்பு ஏற்பட்டிருப்பதை அறிந்ததால் அனைத்து தரப்பிலும் அதிகாரிகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றனர். இவ்வழக்குக்குப் பின்புதான் பகத் ஃபாசில் ரூ.17.68 லட்சத்துக்குச் சாலை வரி கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: