வெள்ளி, 29 டிசம்பர், 2017

ரபேல் விமான பேரம் – மோடியின் தேசபக்தி... சவுக்கு

by Jeevanand Rajendran :15 வருடங்களாக இழுபறியில் இருந்த  ரபேல் போர் விமானம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை அதிரடியாக மோடி முடித்து வைத்தார், இது  நம் இந்திய விமான படைக்கு கிடைத்த பரிசு என்று 2015 ஆம் ஆண்டு முன்னணி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.  2009 -14 UPA-2 ஆட்சியில் அதிகப்படியான ஊழல் புகார்கள் குவிந்ததால், மத்திய அரசாங்கம் எந்த ஒரு பெரிய முடிவையும் எடுக்க பயந்து காலம் தாழ்த்த துவங்கியது. முடிவுகளை ஒத்திப் போட்டது. ஒருகட்டத்தில் பொறுக்க முடியாமல் பெருநிறுவன முதலாளிகள் “பாலிசி பாராலிஸிஸ்”, கொள்கை முடக்கம் என்று விமர்சனம் செய்து கொண்டிருந்த நேரம். ஒரு சிறிய ஒப்புதலுக்கே பல மாதம் காத்து கிடக்க நேர்ந்த காலத்தோடு ஒப்பிடுகையில், பிஜேபி அரசு எடுத்த துரித முடிவு அதிரடி மாற்றமாகவே பார்க்கப்பட்டது.
இது உண்மையாகவே தேசத்திற்கான அதிரடி மாற்றமா அல்லது அரண்மனைக்கு நெருங்கிய ஒரு சில முதலாளிகளுக்கு பயனளிக்க எடுக்கப்பட்ட முடிவா ? இல்லை எதேச்சையாக எடுக்கப்பட்ட முடிவா என்பதை காலம்தான் முடிவு செய்யும்.

2000 ஆம் ஆண்டு முதல் இந்திய விமான படை போதுமான நவீன ரக  விமானங்கள் இல்லாமல் தவித்து வந்தது. போதாக்குறைக்கு பயன்பாட்டில் இருந்த  MIG-21 வகை விமானங்கள் அதிகப்படியான விபத்துகளை சந்தித்திருந்தது. இதனை கருத்தில் கொண்டு 2007 ஆம் ஆண்டு 126 MMRCA (Medium multi-role combat Aircraft) விமானம் வாங்கும் பொருட்டு டெண்டர் (RFP) விடப்பட்டது. 2008 ஆம் ஆண்டு ரஷ்யாவின் மிக்-35, சுவீடன் JAS-39 (SAB ), பிரான்ஸ் Rafale (Dassult ), அமெரிக்கா F-16 Falcon (Lockheed Martin), Boeing F/A-18 Super Hornet, Eurofighter Typhoon போன்ற கம்பெனிகள்  டெண்டரில் பங்கெடுத்தனர். பல கட்ட மதிப்பீட்டின் முடிவில், 2012 ஆம் ஆண்டு  குறைந்த விலைப் புள்ளிகள் அளித்த நிறுவனம் என்ற அடிப்படையில் ரபேல் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இதன் அடிப்படியில் சுமார் 10.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான 126 போர் விமானங்களை ரபேல் நிறுவனம் சப்ளை செய்ய வேண்டும். அதில் 18 பறக்கும் நிலையில் முழுவதுமாக செய்து தர வேண்டும். மீதம் 108 இந்தியாவில் HAL நிறுவனம்  மூலம் டெக்னாலஜி ட்ரான்ஸ்பர் முறையில்  செய்ய வேண்டும் போன்ற விதிகளை இந்தியா விதிக்கிறது. இந்த ஒப்பந்தத்தில் முக்கிய அம்சம் இரண்டு .  இணைப்பு
1) டெக்னாலஜி ட்ரான்ஸ்பர்: MMRCA  போர் விமானம் செய்ய தேவையான அனைத்து டெக்னாலஜியையும் பொதுத் துறை நிறுவனமான HAL நிறுவனத்திடம் அளிக்க வேண்டும் அதன் மூலம் நாமே தேவைப்படும் விமானத்தை உருவாக்கும் திறனை பெறலாம் (இப்பொது “Make in India” என்று வெள்ளையடிக்கப்பட்ட திட்டம் அப்போது “National Manufacturing Policy”) என்று இருந்தது. ToT (transfer of technology ) என்பது எப்படி செய்யவேண்டும் என்பது மட்டும் அல்ல, எதனால் இப்படி செய்யவேண்டும் என்பதுவும் கூட ஏற்கனவே இருந்த தேசிய உற்பத்திக் கொள்கையில் வரையறுக்கப்பட்டு இருந்தது.  இதற்கு புது வண்ணம் பூசிதான் மோடி மேக் இன் இந்தியா என்று உருமாற்றம் செய்தார்.
2) Offset Clause :இந்த கான்ட்ராக்ட்டின் மூலம் வரும் வருமானத்தில்  50% Dassult நிறுவனம், விமான உதிரி பாகங்கள் தயாரிக்க இந்தியாவிலேயே முதலீடு செய்ய வேண்டும்.
Dassult நிறுவனத்தின் மிக முக்கியமான ஒப்பந்தம் இது, அதன் 26 வருடத்தில் இந்தியாவை தவிர வேறு எந்த நாடும் அதன் போர் விமானங்களை வாங்கவில்லை. மேலும் அதன் நிறுவனர் நிதி மோசடி புகாரில் உள்ளாகி மிகுந்த பின்னடைவை சந்தித்து இருந்த நேரம் அது. அந்த கம்பெனியின் நீட்சிக்கு இந்த ஒப்பந்தம் மிக அவசியமானதாக இருந்தது, கடுமையான நிதி நெருக்கடியிலும் அந்நிறுவனம் இருந்தது.
அப்படி இருக்கும் நிலையில்,  முதலில் எல்லா விதிகளுக்கும் தலையசைத்த Dassult நிறுவனம் மெல்ல நமது நிபந்தனைகளை மாற்ற முயற்சி செய்தது. HAL  உருவாக்கும்  விமானத்திற்கு உத்தரவாதம் தர மறுத்தது. இணைப்பு டெக்னாலஜி ட்ரான்ஸபெர் ஒப்பந்தத்தை மாற்ற முயற்சித்தது. இது பின் என்ன ஆயிற்று என்பதை பின்னர் பார்க்கலாம்.
இது நடப்பது 2012ம் ஆண்டு.   காங்கிரஸ் அரசின் மிக மோசமான காலகட்டம். 2G ஊழல், காமன்வெல்த் போட்டி ஊழல் என அடுக்கடுக்கான பிரச்னைகளை சந்தித்தது. அந்த காலகட்டத்தில் L1 வெண்டராக Dassult நிறுவனத்தை அறிவித்ததும், தெலுங்கு தேசம் கட்சியின் எம்பி மைசூரா ரெட்டி டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டை வைக்கிறார். இணைப்பு
அதன் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது, மேலும் ஆட்சி முடிவில் இருக்கும் தருவாயில் மிக பெரிய முடிவு எடுக்க வேண்டாம் என்று அப்பொழுதைய பாதுகாப்புத் துறை அமைச்சர்  ஏகே.அந்தோணி இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தார்.
இதன் பின் 2014 ஆம் ஆண்டு மோடி ஆட்சி அமைத்த பின்பு பாதுகாப்புத் துறை, அதுவரை கிடப்பில் போடப்பட்ட ஒப்பந்தத்தை கையில் எடுத்து மிக மும்முரமாக துரிதப்படுத்த துவங்கியது.
Febrauary 2015 ஆம் ஆண்டு பெங்களூர் வந்த Dassult தலைமை செயல் அதிகாரி, எரிக் ட்ரேப்பியர், விலையில் எந்த மாற்றமும் இல்லை, ஒப்பந்த படி 10.2Bn$ தான் என்பதை உறுதி செய்கிறார்  இணைப்பு
March 25,2015 ஆம் ஆண்டு 126 போர் விமானத்தை HAL உடன் இணைந்து தயாரிப்பதை உறுதி செய்து ஒரு விழாவில் IAF முன்னணியில் Dassult நிறுவனம் அறிவிக்கறது  இணைப்பு
March 27,2015 ஆம் ஆண்டு Dassult கம்பெனி சேர்மன் அளித்த பேட்டியில் 126 போர் விமானம் வாங்கும் டீல் 95% முடிவடைந்தது என கூறுகிறார்
April 2015,  இப்படி நிகழ்வுகள் சென்று கொண்டிருக்கும் போது அரசு முறை பயணமாக மோடி பிரான்ஸ் செல்ல திட்டமிடப்படுகிறது. அங்கு வழக்கமாக வெளியுறவுத் துறை செயலாளர் நடத்தும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த ஒப்பந்தம் தொடர்பாக சில கேள்விகள் கேட்கபடுகின்றது அதற்கு அவர் அளித்த பதில்
“இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கும், பிரெஞ்சு கம்பெனிக்கும் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது  அதையும் மோடியின் விஜயத்தையும் ஒன்றோடு ஒன்று பிணைத்து பார்க்க வேண்டாம்” என்று கூறுகிறார்
“In terms of Rafale, my understanding is that there are discussions under way between the French company, our Ministry of Defence, the HAL which is involved in this. These are ongoing discussions. These are very technical, detailed discussions. We do not mix up leadership level visits with deep details of ongoing defence contracts. That is on a different track. A leadership visit usually looks at big picture issues even in the security field” இணைப்பு
அதன்பின் பிரான்ஸ் அதிபரும் மோடியும் பயண இறுதியில் கூட்டறிக்கை விடுகின்றபோது ரபேல் போர் விமானம் ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டதாக கூறுகின்றனர்.  இதுவரை போட்டு வைத்த மொத்த கோடுகளையும் அழித்து விட்டு புதிதாக ஒப்பந்தம் உறுதி செய்யப்படுகிறது.

அதன் படி 81 போர் விமானம் மட்டுமே வாங்குவது, டெக்னாலஜி ட்ரான்ஸபெர் முறையை கை விடுவது என முடிவு செய்யப்பட்டது. மற்ற விபரங்கள் பின்னால் தெரிவிக்கப்படும் என்று முடித்துக்கொண்டனர்.
ராணுவ தளவாடங்கள், போர் விமானங்கள், ஏவுகணைகள், நீர்மூழ்கி கப்பல்கள் போன்றவற்றை வெளிநாடுகளில் இருந்து வாங்குகையில் மிக மிக முக்கியமான கூறு, தொழில்நுட்ப மாறுதல்.   ஏனெனில், தொழில்நுட்ப மாறுதல் அம்சம் ஒப்பந்ததில் இருந்தால், நமது ராணுவ தளவாட ஆராய்ச்சி நிறுவனங்களின் மூலம், நாமே எதிர்காலத்தில் அவற்றை தயாரிக்க முடியும்.   ஆகையால் எந்த ஒப்பந்தத்திலும் இது அவசியம்.  ஆனால், இப்படி ஒரு முக்கியமான கூறை ரத்து செய்ய, இந்தியா இது வரை சந்தித்திராத, மகாத்மா காந்தியை விட மிக தீவிரமான தேசபக்தரான மோடி எப்படி ஒப்புக் கொண்டார் என்பதுதான் புரியாத புதிர்.
இது முன்னாள் ராணுவ தளபதிகள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது 81 போர் விமானம் மிக குறைந்த அளவு என்று வாதிட்டனர். சரி இத்தனை  முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தும் போது நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் என்ன செய்து கொண்டிருந்தார் ?  என்னதான் பிரதமர் என்பவர் நாட்டின் தலைமை அமைச்சர் என்றாலும், பாதுகாப்புத் துறை தொடர்பான முடிவுகளை எடுப்பதில் அவரது பங்கு மிக மிக முக்கியம்.  ஏனெனில் நாள்தோறும், முப்படை தளபதிகளோடு நெருக்கமான தொடர்பில் இருக்கும் அவருக்குத்தான், நம் நாட்டின் பாதுகாப்புக்கு எது தேவை, எது முக்கியம் என்பது தெளிவாகத் தெரியும்.  ஆனால் ரபேல் ஒப்பந்தம் திருத்தி அமைக்கப்பட்டு கையெழுத்தானபோது அவர் என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா ?
அவர் கோவாவில் மீன் கடை திறப்பு விழாவில் பங்கெடுத்துக்கொண்டு இருந்தார். இணைப்பு.

சரி அவருக்கு இதை பற்றி முன்னமே தெரியுமா என்றால் அதுவும் இல்லை, மோடி எடுத்த முடிவுக்கு முட்டுக் கொடுக்கும் வேலை மட்டுமே அவருக்கு கொடுக்கப்பட்டது. அவர் தூர்தர்ஷனிற்கு அவசரமாக ஒரு பேட்டி அளிக்கிறார் அதில் மோடி ஒரு மிக தைரியமான முடிவை எடுத்திருக்கிறார் என்றும் அதற்கு பல எதிர்ப்புகள் வந்தாலும் அதை தாம் சமாளிக்க முடியும் என்றும் கூறுகிறார்.  இணைப்பு
முதலில் சுப்ரமணிய சுவாமி இந்த ஒப்பந்தத்திற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து  பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார் அதில் ரபேல் விமானம் தரமற்றது அதனை வாங்க முடிவு செய்தால் பொது நல வழக்கு தொடருவேன் என்று பேட்டியும் கொடுக்கிறார்.  இணைப்பு. 2016ல் அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டவுடன் இந்த பிரச்சனையை கை விடுகிறார்.  அதன் பிறகு, மோடிக்கு அடுத்த தீவிர தேசபக்தரான சுவாமியும் இது குறித்து வாயே திறக்கவில்லை.
இப்படி பாதுகாப்பு அமைச்சருக்கும் தெரியாமல், நிதி அமைச்சரையும் கேட்காமல் யாரை கேட்டு இந்த முடிவை எடுத்திருப்பார் ? ஒரு வேலை பாரிசிற்கு  மோடியுடன் சென்ற அம்பானியை கேட்டு எடுத்திருப்பாரோ ?  அம்பானிக்கும் பாதுகாப்புத் துறைக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி எழும்.  இருக்கிறது.
முதலில் எல்லாவற்றிற்கும் சம்மதம் தெரிவித்த நிறுவனம் திடீர் என முறுக்கி கொள்ள காரணம் என்ன ?  L1 அந்தஸ்து பெற்ற இரண்டே வாரத்தில் எதேச்சையாக  Dassult நிறுவனம், முகேஷ் அம்பானியுடன் கைகோர்க்கிறது.  இணைப்பு.   அதன் பின்பு தான் Dassult RFP யில் உள்ள ஒரு ஒரு விதியையும் மாற்ற முயல்கிறது, குறிப்பாக எப்படியாவது HAL நிறுவனத்தை ஓரம் கட்டும் வேலையை பார்க்கிறது.
மூத்த அம்பானி வந்து விட்டார்.  இளைய அம்பானி  மட்டும் சளைத்தவரா என்ன ? ரிலையன்ஸ் டிபென்ஸ் என்ற நிறுவனத்தை அனில் அம்பானி  தொடங்குகிறார். அவர் அந்நிறுவனத்தை தொடங்கியது 28/03/2015. சரியாக மோடி பிரான்ஸ் நாட்டிற்கு செல்லும் 3 வாரம் முன்பு.

August 2014, பாதுகாப்பு துறையில் நேரடி அந்நிய முதலீடை 49% சதவீதமாக உயர்த்துகிறது அரசு. அதன் அடிப்படையில் 51:49 சதவிகித முறைப்படி Dassult நிறுவனத்துடன், அனில் அம்பானி கூட்டணி அமைக்கிறார். பிரான்ஸ் ஒப்பந்தத்தின் பின்  Offset Clause அடிப்படையில் விமான உதிரி பாகம் செய்யும் ஒப்பந்தம் அவர் கைகளுக்கு செல்கிறது .
மற்ற விபரங்கள் பின்னால் உறுதி செய்யப்படும் என்று கூட்டறிக்கையில் சொன்னார்கள் அல்லவா அதில் தான் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. பழைய ஒப்பந்தப்படி 126 விமானங்கள் 90,000 கோடிக்கு வாங்க இருந்ததை கைவிட்டு  வெறும் 36 விமானங்களை 60,000 கோடிக்கு வாங்க முடிவு எட்டப்பட்டது. இதன் படி ஒரு விமானம் 714 கோடிக்கு வாங்குவதற்கு பதில் 1611 கோடிக்கு வாங்கவிருக்கிறோம்.
இப்பொழுது இந்த விலையுயர்வை நியாயப்படுத்த முன்வைக்கப்படும்  காரணங்களை  பார்ப்போம்
அதிக நாட்கள் இந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆகாததால் இந்த விலை உயர்வு என்று கூறினால் அது தவறு. ஏனெனில் RFPயில் மிக தெளிவாக பண வீக்க விகிதம் 3.9% நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன் அடிப்படியில் கணக்கிட்டால் 3 மடங்கு விலை அதிகரிக்க வாய்ப்பே இல்லை.
UPA செய்த ஒப்பந்தத்தில் இருந்த specification  உயர்த்தியுள்ளதால் இந்த விலை ஏற்றம் என்பது இரண்டாவது காரணம். விலை மாற்றம் என்ற கேள்வியை நீர்த்து போக செய்வதற்கான வேலை தான் இது. அப்படி என்ன மாற்றம் என்று பார்த்தால் meteror missile பொருத்தப்படுகிறது (அதன் விலை 2Mn$ 13 கோடி. இணைப்பு மற்றொரு மாற்றம்  Helmet Mounted Display System (HMDS) அதாவது helmet முன் உள்ள திரையில் தேவையான விபரம் தெரியும். அதன் மூலம் எதிரி விமானத்தை குறி வைத்து லாக் செய்ய முடியும். இதன் விலை 0.4mn$ (2.5 கோடி). ஆக இந்த இரு upgrade செலவுகளையும் சேர்த்தால் கூட 730 கோடி தான் வருகிறது. இந்த தகவல்களும் அதிகாரப்பூர்வமானது அல்ல. செய்தித்தாள்களில் விவாதிக்கப்படும் விஷயங்கள் தான்.   ஆனால் அதிக அளவில், மிகுந்த பொருட்செலவில் ராணுவ தளவாடங்கள் வாங்குகையில், பேச்சுவார்த்தை நடத்தி, விலையை நிச்சயமாக குறைக்க முடியும்.
இந்த HMDS தயாரிப்பது இஸ்ரேலை சேர்ந்த Elbit என்ற நிறுவனம். அந்நிறுவனம் March 2016 ஆம் ஆண்டு Aero defence system என்ற  இந்தியாவை சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ்  HMDS இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்திடுகிறது. அந்த Aero defence systems நிறுவனம் நம் அதானி குழுமத்தினுடையது.  இணைப்பு  அம்பானிக்கு குடுத்துவிட்டு அதானிக்கு கொடுக்காமல் இருக்க முடியுமா என்ன ? இவரும் இந்த நிறுவனத்தை எதேச்சையாக 17/07/2015 நிறுவுகிறார்.  அதாவது மோடி பிரான்சில் இருந்து திரும்பிய 2 மாதத்தில்.

சரி எதேச்சையாக இந்த நண்பர்கள் அடைந்த பயனை விடுத்து இந்த ஒப்பந்தத்தின் இறுதியில் நாம் இழந்தது என்ன என்பதை பார்ப்போமா  ?
1) 126 விமானம் 90,000 கோடிக்கு வாங்குவதற்கு பதில் 36 விமானம் மட்டுமே 60,000 கோடிக்கு வாங்க இருக்கிறோம். இதில் offset clause விதிபடி மொத்த வருவாயில் (58,000 கோடி) 50%  சுமார் 22,000 கோடி அனில் அம்பானிக்கு செல்கிறது. இணைப்பு
2) முடிவு செய்து வைத்த பட்ஜெட்டின் பெரும் பகுதியை வெறும் 2 squadron விமானங்கள் வாங்க செலவிட்டதால் இது நம் விமான படைக்கு பெரும் பின்னடைவு என ஓய்வு பெற்ற தளபதிகள் கருத்து தெருவிக்கின்றனர். பாகிஸ்தான் சீனா உடனான இரண்டு முனை போர் ஏற்படும் போது இந்த விமானங்கள் எண்ணிக்கை மிக குறைவு என்று கவலை தெரிவிக்கின்றனர். இணைப்பு
3) தொழில்நுட்ப மாற்ற முறைப்படி பொதுத்துறை நிறுவனமான HAL நிறுவனத்திற்கு வரவிருந்த அத்தனை பயன்களும் இனி அம்பானி நிறுவனத்திற்கு செல்லும்.
4) 108 விமானங்கள் HAL நிறுவனம் தயாரிக்க இருந்தது. இது தற்போது நிறுத்தி வைக்கபட்டிருக்கிறது. இதன் மூலம் உருவாகும் வேலை வாய்ப்பு முற்றிலும் பறிபோனது.
இதை எல்லாம் சுட்டி காட்டி காங்கிரஸ் நடத்திய November 14/2017 பத்திரிக்கையாளர் சந்திப்பை ஊடகங்கள் எதுவும் கவர் செய்யவில்லை. அதன் பின் புதிய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில் காங்கிரஸ் கட்சி எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் இந்த ஒப்பந்தம் மிகவும் அவசியமானது என்றும், போர்க்கால அடிப்படையில் அதை துரிதப்படுத்தி முடிக்கப்பட்டதற்கு அரசை பாராட்டவேண்டுமே தவிர குறை கூற கூடாது என்று கூறினார். காங்கிரஸ் முன்வைத்த கீழ் கண்ட கேள்விக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை
1) பாதுகாப்பு கொள்முதல் விதிமுறை 2013இன் படி “ஒப்பந்த பேச்சுவார்த்தை குழு” மற்றும் “விலை நிர்ணய குழு” இவை இரண்டையும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக பிரதமர் செயல்பட்டது ஏன் ?
2) 13.03.2014 அன்று செயல்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் படி HAL பொதுத்துறை நிறுவனத்திற்கு வரவிருந்த ஒப்பந்தம் தனியாருக்கு சென்றது எப்படி?
3) விமானக் கட்டமைப்பில்  பல வருட அனுபவம் உள்ள HAL தவிர்த்து இதுவரை முன்னனுபவமே இல்லாத அனில் அம்பானிக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது ஏன் ?
4) தொழில்நுட்ப மாற்றம் இல்லாதபட்சத்தில் விமானம் பழுதுபார்ப்பது, பராமரிப்பது அனைத்துக்கும் Dassult நிறுவனத்தை எப்போதும் சார்ந்திருப்பது சரியா ?
இவையெல்லாம், காங்கிரஸ் கட்சி எழுப்பியுள்ள சில கேள்விகள்.  இவற்றை, தேசிய ஊடகங்கள் தொடர்ந்து எழுப்பி, மத்திய அரசை பதில் சொல்ல வைக்குமாறு நிர்பந்தித்திருக்க வேண்டும்.   இது நாடு முழுக்க பெரும் விவாதப் பொருளாக ஆகியிருக்க வேண்டும்.  ஆனால், பத்மாவதி திரைப்படம் வெளி வருமா வெளி வராதா, மணி சங்கர் அய்யர், பிரதமரை தாழ்ந்த சாதி என்று சொன்னாரா சொல்லவில்லையா, ராகுல் காந்தி குஜராத் தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, ஸ்டார் வார்ஸ் படம் பார்த்தாரா இல்லையா, திரையரங்குகளில் தேசிய கீதம் பாடினால் தேசபக்தி வளருமா வளராதா என்பதிலேயே கவனம் செலுத்துகின்றன.

இந்த ஒப்பந்தத்தில் மோடி தனிப்பட்ட முறையில் பலனடைந்திருக்கிறார் என்று நாம் குற்றம் சுமத்தவில்லை.   நவரத்னா நிறுவனமான எச்ஏஎல் நிறுவனத்துக்கு செல்ல வேண்டிய மிக முக்கியமான தொழில்நுட்ப மாற்றத்தையும், விமானம் தயாரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணி ஆகியவற்றை, ஏற்கனவே பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாக இருக்கும் அனில் அம்பானிக்கு எதற்காக வழங்க வேண்டும் என்பதுதான் நமது கேள்வி.  தங்களைத் தவிர யாருக்கும் தேசபத்தியே கிடையாது என்று, தனது 56 இன்ச் மார்பை பெருமையாக தட்டிக் கொள்ளும் பிரதமர் மோடியும், அவர் பக்தர்களும், பொதுத்துறை நிறுவனத்தை உதாசீனப்படுத்தி விட்டு, அனில் அம்பானிக்கு லாபமீட்டித் தருவதுதான் மோடியின் தேசபக்தியா என்பதை விளக்குவார்களா ?

கருத்துகள் இல்லை: