வியாழன், 28 டிசம்பர், 2017

கோவையில் ராசாவுக்கு பிரமாண்ட வரவேற்பு

கோவை: ராசாவுக்கு உற்சாக வரவேற்பு!மின்னம்பலம்:  2ஜி வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக கோவை சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு அம்மாவட்ட திமுக சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது,
கடந்த 21ஆம் தேதி வழங்கப்பட்ட 2ஜி வழக்கின் தீர்ப்பில் ராசா, கனிமொழி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து கடந்த 23ஆம் தேதி சென்னை வந்த ராசா, கனிமொழி ஆகியோருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேரடியாக விமான நிலையத்துக்கே சென்று வரவேற்றார். திமுகவினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்த நாட்களில் அதுவும் ஒன்றானது.
வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக கோவை சென்ற ஆ.ராசாவுக்கு, விமான நிலையத்தில் திரண்ட திமுகவினர் மேள தாளம் முழங்க உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். ஸ்டாலினுக்கு வழங்கப்படும் வரவேற்புக்கு நிகராக வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக மட்டுமல்லாது திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிட கழகம் உள்ளிட்ட இயக்கங்களும் வரவேற்பில் கலந்துகொண்டன.
பின்னர் விமான நிலைய வரவேற்பறையில் ராசாவைச் சந்தித்த திவிக தலைவர் கொளத்தூர் மணி, தபெதிக பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் ஆகியோர் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதற்காக ராசாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். 'பெரியார் இன்றும் என்றும்' புத்தகத்தை அன்பளிப்பாகவும் வழங்கினர்.

3 நாட்கள் பயணமாக கோவை வந்துள்ள ஆ.ராசா நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.முன்னதாக அவர் நீலகிரி செல்லும் வழியில் கோவை மாவட்டத்திலுள்ள கோவில் பாளையம், பெரிய நாயக்கன் பாளையம் உள்ளிட்ட இடங்களில் அப்பகுதி திமுகவினரின் வேண்டுகோளுக்கு இணங்க, திறந்த வேனில் ஊர்வலமாக சென்றார். அங்கும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராசா, 2ஜி என்ற பொய்யான குற்றச்சாட்டை கூறி 7 ஆண்டுகள் நடந்த வழக்கில் விடுதலை அடைந்துள்ளோம். எங்களுக்கு பக்கபலமாக இருந்த மக்களுக்கு நன்றி. 2ஜி வழக்கின் தீர்ப்பை மக்கள் புரிந்துகொண்டுவிட்டனர். இல்லையென்றால் நாங்கள் புரியவைப்போம். வழக்கின் தீர்ப்பு வரும் சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: