திங்கள், 25 டிசம்பர், 2017

ஜிக்னேஷ் மேவானி :தமிழ்நாட்டில் நோட்டாவிடம் தோற்ற மிஸ்டுகால் கட்சி...

nakkeeran :ஆர்.கே.நகரில் நோட்டாவை விடவும் குறைவான வாக்குகள் பெற்ற பாஜகவை மிஸ்டு கால் கட்சி என கிண்டலாக பதிவிட்டுள்ளார் குஜராத்தைச் சேர்ந்த தலித் போராளி ஜிக்னேஷ் மேவானி.<>சென்னையில் உள்ள ஆர்.கே.நகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு, அங்கு ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப கடந்த 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றிபெற்றார். அதிமுகவின் மதுசூதனன் இரண்டாம் இடம் பிடித்தனர். மேலும், திமுக, பாஜக உட்பட 57 வேட்பாளர் டெபாசிட் இழந்தனர். இந்தத் தேர்தலில் பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் 1,417 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். ஆனால், 2,373 வாக்குகள் பெற்று நோட்டா பாஜகவை முந்தியிருந்தது. இது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்திற்குள்ளானது.
இதுகுறித்து, குஜராத்தில் வாத்காம் தொகுதியில் தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெற்ற சுயேட்சை வேட்பாளரும், தலித் போராளியுமான ஜிக்னேஷ் மேவானி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழகத்தில் மிஸ்டு கால் மூலம் 50 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்த, உலகின் மிகப்பெரிய மிஸ்டு கால் கட்சி, தமிழகத்தில் நடந்த தேர்தலில் 1,417 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. இது 2,373 வாக்குகளைப் பெற்ற நோட்டாவை விடவும் குறைவாகும். தமிழகத்தின் மேல்தூவல்களைக் ( Toppings) கொண்ட ஊத்தாப்பத்தை பாஜகவினர் ஜீரணித்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்’ என கிண்டலாக பதிவிட்டிருந்தார்.

கருத்துகள் இல்லை: