செவ்வாய், 7 நவம்பர், 2017

மதுரை தலித் ஒடுக்குமுறை எதிர்ப்பு முன்னணி மாநாட்டில் கேரள முதல்வர் பினராயி

மின்னம்பலம் :  மதுரையில் நேற்று (நவ.6) நடைபெற்ற தலித் ஒடுக்குமுறை எதிர்ப்பு முன்னணி மாநாட்டில் கேரள முதல்வர் பினராயி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய பெரியாரின் பணியை இந்த நேரத்தில் நாம் நினைவுகூர வேண்டும்.
சாதிய ஒடுக்குமுறைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் முற்போக்காகச் செயல்பட்டவர் அவர். பெண்கள் சம உரிமைகள் பெற வேண்டும் எனப் பெரியார் போராடினார். கேரளாவில் வைக்கம் கோயில் நுழைவுப் போராட்டத்தில் பெரியாரின் பங்கு முக்கியமானது” எனப் பெரியாருக்குப் புகழாரம் சூட்டினார்.
பின்னர், ஒவ்வொரு 18 நிமிடங்களுக்கும் இந்தியாவில் சாதிய ஒடுக்குமுறை நிகழ்ந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், தினமும் மூன்று தலித் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.
உ.பி. மாநிலம் சஹாரன்பூரில் தலித்துகள்மீது கொடூர தாக்குதல் நடத்தியதால் வெளியேறினர். இறந்த பசுவின் தோலை உரித்ததற்காகத் தலித்துகள் தாக்கப்பட்டனர். ம.பியில்தான் தலித்துகள் மீதான தாக்குதல்கள் அதிகம் நடைபெறுகின்றன எனக் குற்றஞ்சாட்டினார்.

“ராஜஸ்தானிலும் மகாராஷ்டிராவிலும் தலித் பெண்கள்மீது தாக்குதல் நடத்தினர். டெல்லியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்ட 13 பேர் ஒருமாதத்தில் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் தலித்துகள் மீதான தாக்குதல்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன.
163% தலித்துகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. குஜராத்தின் உனாவ் கிராமத்தில் மாட்டுத் தோலை உரித்தார்கள் என்று தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டனர். காந்தி நகரில் மீசை வைத்ததற்காகவும் மேல் சாதி நாட்டியத்தை ஆடியதற்காகவும் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டனர். தலித் இளைஞர்கள்மீது சிறுநீர் கழிக்கப்பட்ட வெட்கங்கெட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன” என வேதனையை வெளிப்படுத்தினார்.
“2012இல் தலித்துகளுக்கு எதிராக 33,000 தாக்குதல்களும், 2015இல் அது 45,000 தாக்குதல்களாக அதிகரிக்கவும் செய்துள்ளது. 2016இல் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்களை வெளியிடாதது உண்மையை மூடி மறைக்கும் முயற்சி ஆகும். தலித்துகள் மீதான தாக்குதல்களில் தண்டிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைவாகவே வழங்கப்படுகிறது” எனவும் பினராயி பேசினார்.

கருத்துகள் இல்லை: