திங்கள், 6 நவம்பர், 2017

ஸ்டேட் வங்கியின் குண்டர்கள் தாக்குதல் விவசாயி மரணம், ஸ்டேட் வங்கியின் ட்ராக்டர் கடன்,,

மாலைமலர் : தண்டராம்பட்டு அருகே வங்கி ஊழியர்கள் டிராக்டரை ஜப்தி செய்ய வந்தபோது தள்ளு முள்ளு ஏற்பட்டதில் மயங்கி விழுந்த விவசாயி பரிதாபமாக இறந்தார். டிராக்டரை ஜப்தி செய்ய வந்த வங்கி ஊழியர்களுடன் தள்ளுமுள்ளு: விவசாயி மயங்கி விழுந்து மரணம் தண்டராம்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அடுத்த போந்தை கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் ஞானசேகரன் (வயது55). விவசாயி. இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சாத்தனூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையில் விவசாய கடன் திட்டத்தில் டிராக்டர் வாங்கினார். தொடர்ந்து 4 ஆண்டுகளாக தவணை தொகையை செலுத்தி வந்தார். இந்நிலையில் கடும் வறட்சி காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தவணை தொகையை செலுத்த முடியாமல் விரக்தியில் இருந்துள்ளார். இதற்கிடையில், சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் வாராக்கடன் பட்டியலில் ஞானசேகரன் பெயரை சேர்த்தது. மேலும் கடன் தொகை வசூலிக்கும் பொறுப்பை தனியார் ஏஜென்சியிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிகிறது.


 இந்நிலையில் நேற்று மாலை வங்கி ஊழியர்கள் மற்றும் தனியார் குழு என 4 பேர் ஞானசேகரன் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் வங்கி கடனை வசூலிக்கும் பொறுப்பு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் டிராக்டரை ஜப்தி செய்யப் போவதாக தெரிவித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த விவசாயி ஞானசேகரன் நெல் அறுவடை முடிவடைந்ததும் 2 மாதங்களில் தவணை தொகையை செலுத்துவதாக கூறியுள்ளார். அதை ஏற்க மறுத்த அவர்கள் டிராக்டரை ஜப்தி செய்ய முயன்றனர்.
இதில் ஞானசேகரன் மற்றும் ஊழியர்களிடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. மேலும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது ஞானசேகரன் திடீரென மயங்கி விழுந்தார். அவரை குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் மீட்டு தானிப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 10 மணி அளவில் ஞானசேகரன் பரிதாபமாக இறந்தார். தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் ஞானசேகரன் தாக்கப்பட்டாரா? அல்லது வேறுகாரணமா? என்பது குறித்து தானிப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


tamilthehindu : வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாத திருவண்ணாமலையைச் சேர்ந்த விவசாயி குண்டர்கள் தாக்கி உயிரிழந்துள்ளதற்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''திருவண்ணாமலையைச் சேர்ந்த ஞானசேகரன் என்ற விவசாயி பாரத ஸ்டேட் வங்கியில் கடன் வாங்கியுள்ளார். அதில் ஒரு பகுதி கட்டி முடித்து மேலும் ரூ.3 லட்சம் கட்ட வேண்டியுள்ளது. ஸ்டேட் வங்கியின் கிளை மேலாளர் மற்றும் அடியாட்களோடு அவரது டிராக்டரை ஜப்தி செய்ய சென்றுள்ளனர். விவசாயி ஞானசேகரன் தனக்கு சர்க்கரை ஆலையில் இருந்து ரூ.3 லட்சம் ரூபாய் வரவேண்டும் என்றும், அத்தொகை வந்தவுடன் வங்கியில் கட்டிவிடுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இதனை ஏற்காத வங்கி அதிகாரியும் அடியாட்களும் சேர்ந்து அவரை கடுமையாக தாக்கி உள்ளனர். அவர் மயங்கிய நிலையில் கீழே விழுந்த பிறகு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவருக்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் மரணமடைந்துவிட்டார். வங்கி அதிகாரியின் இச்செயலை மிக வன்மையாக கண்டிக்கிறோம்.
இதனை கொலை வழக்காக பதிவு செய்து கிளை மேலாளர் மற்றும் அடியாட்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். மரணமடைந்த விவசாயி ஞானசேகரனின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்'' என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்

கருத்துகள் இல்லை: