வெள்ளி, 13 மே, 2016

கனிமொழி Crowd Puller... தருமபுரியில் கூடிய கூட்டம்...அதிர்ந்த அதிமுகவினர்

விகடன்.com தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் இருக்கும் கனிமொழி, செல்லும் இடங்களில் எல்லாம் சாதிச் சங்க தலைவர்களை சந்தித்து
விவாதிக்கிறார். 'அ.தி.மு.கவுக்கு எதிரான வாக்குகள் மட்டுமல்ல, மொத்த வாக்குகளும் தி.மு.க பக்கம் திரும்ப வேண்டும்' என அவர் பேசுவதைப் பார்த்து அதிர்ந்து கிடக்கிறார்கள் அ.தி.மு.கவினர். கனிமொழியின் பிரசார வியூகம் பற்றி நம்மிடம் விரிவாகப் பேசிய தி.மு.கவின் முக்கிய நிர்வாகி ஒருவர், " கலைஞரும் ஸ்டாலினும் வாக்காளர்கள் மத்தியில் தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகின்றனர். இதுதவிர, கனிமொழிக்கென்று தனியாக பிரசார வாகனம் ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுவது என்ற பொதுவான விஷயத்தையும் தாண்டி, சில விஷயங்களை அவர் செய்கிறார். பிரசாரத்தில் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் சாதி சங்க பிரமுகர்களிடம் பேசுகிறார். 

அண்மையில் நெல்லை மாவட்ட பிஷப்புகளை சந்தித்துப் பேசினார். அவர்களிடம்,  'சிறுபான்மையினத்தவர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி பெற்றுத் தந்தது, சலுகைகள் அளிப்பது என எங்கள் ஆட்சியில் நிறைய செய்திருக்கிறோம். இந்தமுறை உங்கள் தேவாலயங்களில் கூடும் மக்களிடம், எங்களுக்கு மொத்தமாக ஓட்டுப் போடுமாறு அறிவுறுத்துங்கள்' எனப் பேசினார். 'வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இதுதொடர்பாக, மக்களிடம் வேண்டுகோள் வைப்பதாகவும்' அவர்கள் உறுதியளித்தனர். 

இதேபோல், ஸ்ரீரங்கத்தில் பழனியாண்டி என்பவர் தி.மு.க வேட்பாளரா
 களமிறங்குகிறார். அவர் மூலமாக முத்தரையர் சமூகத்து தலைவர்களிடம் பேசிய கனிமொழி, 'அ.தி.மு.க ஆட்சியில் உங்கள் சமூகத்திற்கென்று எந்த பிரதிநிதித்துவமும் கிடைக்கவில்லை. உங்களை எல்லாம் ஒதுக்கியே வைத்திருந்தார் ஜெயலலிதா. எங்கள் ஆட்சியில் அதிகாரம் இப்படி ஒரே இடத்தில் குவிக்கப்பட்டதில்லை. அதை உணர்ந்து உதயசூரியனுக்கு வாக்களியுங்கள். நிச்சயம் நல்லது செய்வேன்' என வாக்குறுதி அளித்தார்.தவிர, நாடார்கள் மத்தியில் பேசும்போது, 'உங்கள் சமூகத்திற்கு இந்த ஆட்சியில் என்னென்ன கொடுமைகள் இழைக்கப்பட்டது என்று நான் சொல்ல வேண்டியது இல்லை.
சட்டமன்றத்திலேயே பெருந்தலைவர் காமராஜரை அவமானப்படுத்தினார் ஜெயலலிதா.
 அவரது கல்வி நாளைக்கூட அ.தி.மு.க அரசு கொண்டாடவில்லை. எங்கள் ஆட்சியில் இப்படி நடந்ததுண்டா? என்பதை மட்டும் யோசியுங்கள்' என உருக்கமாக பேசியுள்ளார். </ தருமபுரியில் கனிமொழிக்குக் கூடிய கூட்டத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. அந்தளவுக்கு மக்கள் கூடியதற்குக் காரணமே, உள்ளூர் வன்னிய சமூகத்து தலைவர்களை வளைத்துப் போட்டதுதான்.

அவர்களிடம் பேசிய கனிமொழி, 'கட்சியிலும் ஆட்சியிலும் உங்கள் சமூகத்திற்கு அதிக பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று தலைவரிடம் பேசியிருக்கிறேன். உங்கள் தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது உள்பட எண்ணற்ற கொடுமைகளை ஆளுங்கட்சி உங்களுக்குச் செய்திருக்கிறது. வெற்றி பெறக் கூடிய வேட்பாளருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்றால், தி.மு.கவுக்குத்தான் நீங்கள் வாக்களிக்க வேண்டும். நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து விஷயங்களையும் தலைவர் செய்வார்' என உறுதிமொழி கொடுத்திருக்கிறார்.

தமிழகம் முழுவதும் பெரும்பான்மை சாதி சமூகங்களைத் தேடிப் போகிறார் கனிமொழி. அவரது சாதி வியூகம் எப்படிக் கை கொடுக்கப் போகிறது என்பது தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும்.

-ஆ.விஜயானந்த்

கருத்துகள் இல்லை: