புதன், 11 மே, 2016

கழுகார் பதில்கள்:‘‘அடுத்தவர்களின் பேராசை மீது அரசியல் நடத்துகிறார் ஜெயலலிதா

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.
இவ்வளவு கேலி கிண்டல் செய்த பிறகும் இன்னும் ஜெயலலிதா செல்லும் கார் டயரை வணங்குகிறார்களே?

 பணம் ஐயா, பணம்... பதவி ஐயா, பதவி... சொகுசு ஐயா, சொகுசு... சும்மா கிடைக்குமா? அரைமணி நேரம் குனிந்து கூழைக் கும்பிடு போட்டுவிட்டு ஐந்து ஆண்டுகள் ஹாயா இருப்பது என்றால், கசக்கவா போகிறது? அமைச்சர்களோ, எம்.எல்.ஏ-க்களோ அரைமணி நேரம் வெயிலில் நிற்கிறார்கள். அம்மா வந்து போனதும் என்ன செய்கிறார்கள் என்பதை அம்மா கவனிப்பது இல்லையே? இவர்கள் நடத்திய லீலைகளை இங்கே எழுத முடியாது. அதனால் பாவம் இவர்கள் கஷ்டப்படுகிறார்கள், அம்மா இவர்களை அடிமைகளாக நடத்துகிறார், வெயிலில் காய்கிறார்கள் என்று சொல்லாதீர்கள். அதிகமாகக் குனிந்து கும்பிடுபவர்களது சொத்துக் கணக்கைப் பாருங்கள். பினாமிகளின் எண்ணிக்கையைத் தேடுங்கள். எத்தனை சினிமாக்களுக்கு இவர்கள் ஃபைனான்ஸ் என்பதைக் கணக்கிடுங்கள். இவர்கள் ஏன் கும்பிடுகிறார்கள் என்று தெரியும். இவை எல்லாமே ஜெயலலிதாவுக்கும் தெரியும். அதனால்தான் அவரும் வதைக்கிறார். ‘அதிகாரத்தை அனுபவிக்கிறாய் அல்லவா, அரைமணி நேரமாவது அவஸ்தைப்படு’ என்கிறார். பழ.கருப்பையா அழகாகச் சொன்னார்: ‘‘அடுத்தவர்களின் பேராசை மீது அரசியல் நடத்துகிறார் ஜெயலலிதா” என்று!

ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி.
‘தமிழகத்தில் சாராயக் கலாசாரத்தைக் கொண்டு வந்தவர் கருணாநிதிதான்’ என்கிறாரே, பொன்.ராதாகிருஷ்ணன்?

 அது உண்மைதான். பி.ஜே.பி ஆளும் மாநிலங்களில் சாராயத்தைத் தடுக்க என்ன செய்திருக்கிறார்கள்? கேரளமும், பீகாரும் முயற்சித்துள்ளதே.

க.சுல்தான் ஸலாஹீத்தீன் மழாஹி, காயல்பட்டினம்.

பிரதானக் கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது போன்று வேட்பாளர்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற பட்டியலை வெளியிடுவீர்களா?

 காத்திருங்கள். களத்தில் எமது நிருபர்கள் கருத்துக்கணிப்புகளை எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். விரைவில் உங்கள் கைக்குக் கிடைக்கும்.

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.
 எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் காங்கிரஸில் சேராமல் ஏன் அ.தி.மு.க-வில் சேர்ந்திருக்கிறார்?

 இரண்டு இடங்களிலுமே மரியாதை இருக்காது. எங்கே இருந்தால் என்ன?

வி.எம்.செய்யதுபுகாரி, அதிராம் பட்டினம்.

தி.மு.க ஒருவேளை ஆட்சியைப் பிடித்தால், ஸ்டாலினை முதல்வராக்கி அழகு பார்ப்பாரா கருணாநிதி?

 தி.மு.க ஒருவேளை ஆட்சியைப் பிடித்தால், கருணாநிதியின் திட்டம் அதுதான் என்று சொல்கிறார்கள். அநேகமாக செப்டம்பர் 15-ம் தேதி முப்பெரும் விழாவைக் கொண்டாடும் போது ஸ்டாலினிடம் பதவியை ஒப்படைக்க கருணாநிதி திட்டமிட்டு உள்ளாராம். அதனால்தான் தனது சுற்றுப்பயணத்தைக் குறைத்துக் கொண்டார். ‘ஸ்டாலின் அனைத்து இடங்களுக்கும் வேன் மூலம் பிரசாரம் செய்வதால் நான் குறைத்துக் கொள்கிறேன்’ என்று சொல்லி இருக்கிறார். ‘தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் கால்படாத இடமே இல்லை, அவரது பிரசாரம் நிச்சயம் எழுச்சியைத் தரும்’ என்று பேசி இருக்கிறார். இதைவைத்துப் பார்க்கும்போது தி.மு.க-வினரே கருணாநிதியிடம் இத்தகைய அறிவிப்பை எதிர்பார்க்கிறார்கள்.

சீர்காழி சாமா, ஸ்ரீரங்கம்.

வைகோவின் திடீர் விரக்தி மற்றும் கோபத்துக்கு என்ன காரணம்?

 தொடர் தோல்விகள்தான் காரணம்.

சி.கார்த்திகேயன், சாத்தூர்.

 பிடிபடும் பணம் எல்லாம் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக இருந்தவைதானா?

 பெரும்பாலும் வாக்காளர் களுக்குக் கொடுப்பதற்காக இருந்தவை. மற்றவை கணக்கில் வராதவை. உண்மையான கணக்கைச் சொல்ல முடியாத பணத்தைத்தான் பிடித்ததாக அதிகாரிகள் காட்டுகிறார்கள். எனவே, பெரும்பாலும் கள்ளப்பணம்தான்.

எம்.வான்மதி, எடப்பாடி.

  தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று நம்பி வாக்களிக்கலாமா?

  தேர்தலோடு முடிந்துவிடும் வாக்குறுதிகளை நம்பி எப்படி வாக்களிக்க முடியும்? இவை எல்லாம் ஓட்டு வாங்குவதற்கு முன்புவரை சொல்லப்படும். அப்புறம்? அப்புறம்தான்.
சாராயத்தைத் தடுக்கிறார்களோ, இல்லையோ... குடிகாரன் பேச்சை (பொழுது விடிந்தால் போச்சு) மட்டும் விடமாட்டார்கள்.
ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்.
மதுரை ஆதீனம் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வது பற்றி..?

 அது அவர் வகிக்கும் பதவிக்கு, பல நூறு ஆண்டுகள் பாரம்பர்யம் கொண்ட அந்த சைவ சித்தாந்த மடத்துக்கு அழகு அல்ல. தனிப்பட்ட அருணகிரி என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், திருஞானசம்பந்த மடத்தில் உட்கார்ந்துகொண்டு அதைச்
செய்யக் கூடாது அல்லவா?  விகடன்.com

கருத்துகள் இல்லை: