செவ்வாய், 10 மே, 2016

தமிழருவி மணியன் :அ.தி.மு.க., 130 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்... விசுவாசம் விசுவாசம்..

நாகர்கோவில்: அ.தி.மு.க., 130 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது என்று காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன் கூறினார்.நாகர்கோவிலில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:1971-ல் மதுவிலக்கை ரத்து செய்த குற்றத்தை செய்தது தி.மு.க., தலைவர் கருணாநிதிதான். 1974-ல் மக்களின் எதிர்பார்ப்பை கண்டு அவர் மீண்டும் மதுவிலக்கை கொண்டு வந்தார். ஆனால் எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்த பின்னர் மது விலக்கு மீண்டும் ரத்து செய்யப்பட்டது. 1983-ல் டாஸ்மாக் அமைப்பை ஏற்படுத்தியது எம்.ஜி.ஆர். ஆட்சிதான்.
2003-ல் டாஸ்மாக் மூலம் அரசே நேரடியாக சாராயம் விற்கலாம் என்பதை கொண்டு வந்தவர் ஜெயலலிதா.

1996-ல் வெற்றி பெற்ற போது இதுபோல மதுவிலக்கு கொண்டு வருவேன் என்று சொன்ன கருணாநிதி அதன் பின்னர் பத்து ஆண்டுகள் முதல்வராக இருந்த போது அது பற்றி சிந்திக்காதது ஏன்?1971-ல் வெறும் 26 கோடி ரூபாய்க்காக மதுவிலக்கை தளர்த்தியவர், தற்போது 30 ஆயிரம் கோடி ரூபாய் வரிவருவாய் வருவதை அவர் கைவிடுவதாரா? ஜெ., மதுவிலக்கை படிப்படியாக கொண்டு வருகிறேன் என்கிறார். படிப்படியாக கொண்டு வருவேன் என்று சொல்வது உண்மையில் சாத்தியமானது. அதற்கான கால அளவை அவர் தெளிவு படுத்த வேண்டும்.

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை ஒரு இலவசபதிப்பாக உள்ளது. அதில் வளர்ச்சி திட்டங்கள் இல்லை. வாக்காளர்களை மயக்கி வெற்றி பெறலாம் என்று நினைக்கிறார். விவசாய, கல்வி கடன் ரத்து என்று சொல்லும் தி.மு.க., அதற்கான நிதி ஆதாரம் பற்றி எதுவும் சொல்லவில்லை. ஆட்சி காலத்தில் மூன்று முறை மின்கட்டணத்தை உயர்த்தி விட்டு, இப்போது 100 யூனிட் இலவசம் என்று சொல்லி அ.தி.மு.க., மக்களை ஏமாற்ற பார்க்கிறார் ஜெ. தமிழக அரசை திவாலாக்கும் நிலையை இரண்டு கட்சிகளும் செய்கிறது. மக்கள் நல கூட்டணி மாற்று அரசியல் பற்றி பேசும் தகுதியை இழந்து விட்டது. ஒரு கோடியே 20 லட்சம் புதிய வாக்காளர்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று வைகோ கூறுகிறார். ஆனால் விஜயகாந்த் முதல்வராக வர அவர்கள் விரும்பவில்லை.அ.தி.மு.க., -தி.மு.க., அணிகளுக்கிடையில்தான் நேரடி போட்டி நிலவுகிறது. கருத்துக்கணிப்புகள் எப்படி வேண்டுமானாலும் வரலாம். ஆனால் தி.மு.க., ஆட்சிக்கு வரமுடியாது. அதே நேரத்தில் 234 தொகுதியிலும் வெற்றி என்ற ஜெ., எண்ணம் நிறைவேறாது. அவர் 130 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளது. தி.மு.க., காங்கிரஸ் சந்தர்ப்பவாத அரசியல் நடத்துகிறது.இவ்வாறு அவர் கூறினார்.  தினமலர்.com

கருத்துகள் இல்லை: