வியாழன், 10 மார்ச், 2016

டி.டி.வி. தினகரன் முதல்வரா? அதிமுகவில் பரபரப்பு! ...தேர்தலுக்கு பின்....

விகடன்.com :தமிழகத்தின் முக்கிய தொகுதியில் அதிமுகவின் பிரதான வேட்பாளர் என்ற அந்தஸ்தோடு டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார் என்றும், அடுத்த முதல்வர் டி.டி.வி.தினகரன்தான் என்றும் ஒரு தகவல் அதிமுகவினர் இடையே பரவி தேர்தல் பரபரப்பு சூட்டை இன்னும் கூட்டியுள்ளது. 2016 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் தங்களது பெயர்களை எதிர்பார்த்து அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில்,  மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் அதிமுகவின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் பட்டியலை, சசிகலாவின் ஆலோசனையுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா இறுதி செய்துவிட்டதாக  கூறப்படுகிறது. இந்நிலையில்தான் டி.டி.வி. தினகரனின் 'ரீ- என்ட்ரி'  அக்கட்சியினரிடையே புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தினகரனின் 'ரீ- என்ட்ரியால், ஆட்சியிலும் கட்சியிலும் பிரதான இடத்தை பிடித்த அமைச்சர் ஓ.பி.எஸ். ரெக்கமண்ட் செய்த நபர்கள் வேட்பாளர் லிஸ்ட்டிலிருந்து நீக்கப்பட்டு, சசிகலா தேர்ந்தெடுத்த நபர்கள் கொண்ட லிஸ்ட் ஜெயலலிதாவால்  'டிக்' அடிக்கப்பட்டுள்ளது' என்று அதிமுகவினர் மத்தியில்  ப...ரபரப்பாக பேசப்படுகிறது.
ஓ.பி.எஸ்., அதிமுகவில் அசைக்கமுடியாத சக்தியாக இருப்பது தனக்கும் தனது மன்னார்குடி உறவுகளுக்கும் ஆபத்து என்பதை உணர்ந்தே சசிகலா,  அவருக்கு எதிராக காய்களை கச்சிதமாக நகர்த்தி, அதில் வெற்றிக் கனியை பறித்துவிட்டார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் ஒரு பகுதியாகவே ஜெயலலிதா குறிப்பிட்ட சிலரை மட்டும் அழைத்து வேட்பாளர் நேர்காணலை நடத்தியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
ஜெயலலிதா மீண்டும் முதல்வராக தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த வெற்றிவேல், சென்னை மாநகர துணை மேயர் பெஞ்சமின், கவுன்சிலர் நூர்ஜஹான், ஊத்தங்கரை எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம் நாகராஜன், காஞ்சிபுரம் மேற்கு மற்றும் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் மட்டும் அதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பு போட்டோவில் இடம்பெற்று இருந்தார்கள். மற்றவர்கள் எப்படி நேர்காணல் செய்யப்படுகிறார்கள் என்பது புதிராகவே இருக்கிறது.
ராயப்பேட்டையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் சிவா என்ற பெயரில் அறை  ஒன்று புக் செய்யப்பட்டுள்ளது என்றும், அங்குதான் போயஸ் கார்டனின் முக்கிய பிரதிநிதிகள் அதிமுக நேர்காணலை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதில்,ஈரோடு மேயர் மல்லிகா உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த முறை  அதிமுகவில் பெண் வேட்பாளர்கள் கூடுதலாக நிறுத்தப்படுவார்கள் என்பதால் அமைச்சர் கோகுல இந்திரா, மகளிர் அணி பிரபலங்களை வேட்பாளர் நேர்காணலுக்கு தேர்வு செய்து அனுப்பி வருகிறார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்,   ராயப்பேட்டையில் உள்ள பிரபல மால் ஒன்றில் ரூம் போட்டு, தங்களுக்கு வேண்டியவர்களை அழைத்து தேர்தல் குறித்தும்,  அதிமுகவில் சீட் தரவில்லை என்றால் எப்படி செயல்படுவது என்பது பற்றியும் விவாதித்து வருவதாகவும் இன்னொரு தகவல் வலம் வந்துகொண்டிருக்கிறது.  மேலும் அதிமுகவில் போட்டியிட விரும்பும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கொண்ட லிஸ்ட் ஒன்றை அவர் தயார் செய்து வருவதாகவும் கிசுகிசுக்கிறார்கள் ஓபிஎஸ் விசுவாசிகள்.

அதிமுகவில் எம்.எல்.ஏ. சீட் கேட்டு தமிழகம் மற்றும் புதுவையில்  26,174 பேர் விருப்பமனு அளித்து இருந்தனர். அதில், 7,936 பேர் முதல்வர் ஜெயலலிதா தங்கள் தொகுதியில் போட்டியிட வலியுறுத்தி மனு அளித்திருக்கிறார்கள். தமிழகத்தில் தங்களுக்கு வாய்ப்பு அளிக்கக் கோரி 17,698 பேரும், புதுச்சேரிக்கு 332 பேரும், கேரளாவில் போட்டியிட வாய்ப்புக் கேட்டு 208 பேரும் விருப்ப மனுக்கள் கொடுத்துள்ளனர்.

விருப்ப மனுக்கள் எண்ணிக்கை பல ஆயிரங்களைத் தாண்டி உள்ளதால், ஜெயலலிதாவே ஒவ்வொருத்தரையும் நேரில் அழைத்து நேர்காணல் செய்ய முடியாது என்பதால் அவரின் சார்பில் கார்டன் பிரதிநிதிகள் ரகசியமாக நேர்காணல் நடத்தி வருவதாகவும்  தெரிகிறது. இதில்,பல்வேறு இடைத் தரகர்கள் எனக்கு சசிகலாவை நேரடியாகத் தெரியும், டாக்டர் சிவக்குமாரை நேரடியாக தெரியும், எம்.நடராஜன் எனக்கு தோஸ்த் என்று கூறியும் சீட் வாங்கித் தருவதாக  களம் இறங்கி, கோடிகளில் பேரம் நடத்தி 'கரன்சி கறப்பு' நிகழ்த்தி வருகிறார்கள்.

இந்நிலையில்தான் நீண்ட காலமாக திரைமறைவு நடவடிக்கைகள் மூலமாகவே அதிமுகவில் கோலோச்சி வரும் டி.டி.வி.தினகரன் இந்தமுறை அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக களம் இறங்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளில் சசிகலா தீவிரமாக இறங்கியுள்ளார்.  அதிலும் சென்னையில் முக்கிய தொகுதி ஒன்றில்(அது ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதியாகவும் இருக்கலாம்!) இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுவார் என்றும்  கார்டன் பக்கம் பலமாகப் பேசப்படுகிறது.
அப்படி தினகரன் நிறுத்தப்பட்டு வெற்றி பெரும் பட்சத்தில், அதிகார மையமாக தான் இருந்து கொண்டு, தனது உடல் நலத்தை காரணம் காட்டி முதல்வர் பதவியில் தினகரனை அமர்த்த ஜெயலலிதா முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீடு தீர்ப்பு ஒருவேளை பாதகமாக அமைந்துவிட்டால் இன்னொரு முறை ஓபிஎஸ்-ஸை முதல்வர் பதவியில் அமர வைக்கும் ரிஸ்க்கை எடுக்க ஜெயலலிதா விரும்பவில்லை என்றும், அப்படி அவரை அப்பதவியில் அமர்த்தினால் கட்சியை மொத்தமாக கைப்பற்றி விடுவார் என ஜெயலலிதா கருதுவதாகவும் கூறப்படுகிறது.
எனவேதான் தினகரனை முன்னிறுத்தும் நடவடிக்கைகளை தற்பொழுது ஜெயலலிதா மேற்கொண்டிருப்பதாகவும்,  தேர்தலுக்கு பின்னர் குறைந்த பட்சம்  துணை முதல்வர் பதவியாவது அளித்து, தனக்கு அடுத்த அதிகார மையம் அவர்தான் என்பதை சூசகமாக உணர்த்த முடிவு செய்துள்ளதாகவும் மன்னார்குடி விசுவாசிகள் தரப்பினர் கூறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .
ஜெயலலிதாவின் இந்த அதிரடி 'மூவ்'   ஓ.பி.எஸ். தரப்பை பலமாக அதிர்ச்சியடைய வைத்துள்ளதாகவும், அநேகமாக தேர்தலுக்கு பின்னர் ஓபிஎஸ்-க்கு இறங்குமுகம்தான் என்றும் அவர்கள் ஆருடம் கூறுகிறார்கள்

அதே சமயம் ஜெயலலிதாவின் ஆசியினால் கட்சிக்குள் தினகரனுக்கு செல்வாக்கு ஏற்பட்டாலும், பொது வாக்காளர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு உள்ளதா, வாக்குகள் கிடைக்குமா என்றெல்லாம் கேள்விகள் எழுந்தாலும்,  வழக்கமான 'கவனிப்பு' உத்திகள் குறைந்த பட்சம் தினகரன் போட்டியிடும் தொகுதியிலாவது அவரை ஜெயிக்க வைக்கும் என்கிறார்கள் அவரது விசுவாசிகள்.
- தேவராஜன்

கருத்துகள் இல்லை: