வெள்ளி, 11 மார்ச், 2016

அ.தி.மு.க.,வில் அதிரடி முடிவு: குற்றச்சாட்டில் சிக்கியவர்களுக்கு 'சீட்' இல்லை!

அ.தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலில், படித்த இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. பழைய முகங்களில் ஊழல் குற்றச்சாட்டு, கிரிமினல் வழக்கு மற்றும் கட்டப்பஞ்சாயத்து புகார்களுக்கு ஆளாகியவர்களுக்கு மீண்டும், 'சீட்' கிடைக்காது என தெரிகிறது. கடந்த லோக்சபா தேர்தலின் போது, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆ.ராசாவுக்கு, நீலகிரி லோக்சபா தொகுதியில் போட்டியிட, தி.மு.க., தரப்பில், 'சீட்' தரப்பட்டது. இது, மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதுவும், லோக்சபா தேர்தலில், தி.மு.க., கடும் தோல்வியை சந்திக்கவும், அ.தி.மு.க., கணிசமான வெற்றி பெறவும் ஒரு காரணமாக அமைந்தது.
மேலும் முந்தைய சட்டசபை தேர்தலை ஒப்பிடுகையில், சமீபத்தில் வெளியான வாக்காளர் பட்டியலில், கிட்டத்தட்ட, 29 லட்சம் புதிய
வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். மொத்தமுள்ள சட்டசபை தொகுதிகள் அடிப்படையில் பார்த்தால், தொகுதிக்கு, 12 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்கள். அவர்களில், பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் மற்றும் முதல் முறையாக தேர்தலில் ஓட்டளிக்க உள்ளவர்கள். அவர்களை கவர வேண்டுமெனில், 'ஊழல், கிரிமினல் வழக்குகள் மற்றும் கட்டப்பஞ்சாயத்து புகார்களில் சிக்காதவர்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும்' என, அ.தி.மு.க., தொண்டர்கள் விரும்புகின்றனர்.
அதையே, அந்த கட்சித் தலைமையும் செயல்படுத்த உள்ளதாக தெரிகிறது. அப்போது தான், புதிய வாக்காளர்கள் மற்றும் நடுநிலையாளர்களின் ஓட்டுகளை எளிதாக பெற முடியும்; மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியும் என நம்பப்படுகிறது. அதனால், ஊழல், கிரிமினல் வழக்குகள் மற்றும் கட்டப்பஞ்சாயத்து புகார்களுக்கு ஆளான,
எம்.எல்.ஏ.,க்கள், கவுன்சிலர்கள், நகர, ஒன்றிய , அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களுக்கு வரும் தேர்தலில், 'சீட்' கொடுக்காமல், கல்தா கொடுக்க, அ.தி.மு.க., மேலிடம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.
மீண்டும் நேர்காணல்:அ.தி.மு.க.,வில் மீண்டும் இன்று, நேர்காணல் நடைபெற உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.தமிழகத்தில் உள்ள, 234 சட்டசபை தொகுதிகளுக்கும், 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், விருப்ப மனு கொடுத்துள்ளனர். அனைவரையும் நேர்காணலுக்கு அழைப்பது சிரமம்.

இந்நிலையில், மார்ச், 6ம் தேதி, நேர்காணல் நடந்ததாக கூறி, அ.தி.மு.க., சார்பில் ஐந்து பேரிடம், முதல்வர் ஜெயலலிதா நேர்காணல் நடத்தும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. அதன்பிறகே, கட்சியில் நேர்காணல் நடந்தது அனைவருக்கும் தெரிந்தது.அதன்பின், யாரும் நேர்காணலுக்கு அழைக்கப்படவில்லை. இந்நிலையில், இன்று மீண்டும், நேர்காணல் நடைபெற உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
எம்.எல்.ஏ.,க்கள் சர்வே:தேர்தலில் போட்டியிட, 'சீட்' கிடைக்கும் முன், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், தொகுதியில் தங்களுக்கு உள்ள ஆதரவு, பலம், பலவீனம் ஆகியவற்றை அறிந்து கொள்ள ரகசிய சர்வே எடுத்து வருகின்றனர்; இதற்காக, தனியார் நிறுவனங்களை நாடியுள்ளனர்.
இதுகுறித்து, தனியார் சர்வே நிறுவன நிர்வாகி ஒருவர் கூறியதாவது:ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பலருக்கு, தொகுதி சர்வேஎடுக்கும் பணி நடந்து வருகிறது.
தொகுதியை நான்காக பிரித்து, நாள் ஒன்றுக்கு, 200 பேர் வீதம், ஐந்து நாட்கள் சர்வே எடுக்கிறோம். தொகுதி எம்.எல்.ஏ., குறித்த 40க்கும் மேற்பட்ட கேள்விகளை, 1,000 பேரிடம் கேட்கிறோம். அதற்கான பதில்கள் அடிப்படையில், ஒரு அறிக்கை தயாரிக்கிறோம். இந்த அறிக்கை மூலம் எம்.எல்.ஏ.,வுக்கு, தொகுதியில் எவ்வளவு செல்வாக்கு, அதிருப்தி உள்ளது; அவரது பலம், பலவீனம் என்ன;< தேர்தலில் நின்றால் எவ்வளவு ஓட்டு பெறுவார் என்பது துல்லியமாக தெரிந்துவிடும். எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமல்லாமல், தேர்தலில் போட்டியிட உள்ள முக்கிய பிரமுகர்களுக்கும், சர்வே எடுத்து தரப்படுகிறது. தொகுதிக்கு, 1.5 லட்சம் ரூபாய் வரைகட்டணம் வசூலிக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
பட்டியல் எப்போது?வேட்பாளர் பட்டியலுடன் கோவிலுக்கு சென்று, சிறப்பு வழிபாடு நடத்துவது அ.தி.மு.க.,வில் வழக்கம். கடந்த சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலின் போது, சென்னை, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் வழிபாடு நடத்திய பின், வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
சமீபத்தில், முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில், ஐந்து பேரை அழைத்து நேர்காணல் நடத்தப்பட்டது. நேர்காணல், ஓரிரு தினங்களில் தொடர்ந்து நடைபெற உள்ளது.அது முடிந்ததும், கூட்டணி தொடர்பாக, சில கட்சிகளிடம் பேச்சு நடத்த உள்ளனர். பின், அ.தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்படுகிறது.
வடிவுடையம்மன் கோவில், திருச்செந்துார் முருகன் கோவிலில் அந்த பட்டியல் வைக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு செய்யப்பட உள்ளது. அதில், முதல்வர் ஜெயலலிதா சார்பில், சசிகலா கலந்து கொள்வார் என தெரிகிறது.
- நமது நிருபர் - தினமலர்.com

கருத்துகள் இல்லை: