ஞாயிறு, 6 மார்ச், 2016

ஒ.பன்னீர்செல்வத்தின் சாம்ராஜ்யம் சரிந்த கதை! உத்தம விசுவாசியின் அபார நடிப்பு டூ லேட்டாக தான்...அம்மாவுக்கு

விகடன்.com :ஓரம் கட்டப்பட்ட ஓ.பி.எஸ்... சாம்ராஜ்யம் சரிந்த கதை! மன்னார்குடியை மிஞ்சிய பெரியகுளம்...அ.தி.மு.க-வில் ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில் பவர்ஃபுல்லாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், கொஞ்சம் கொஞ்சமாக  ஓரம்கட்டப்பட்டு வருகிறார் என்பதுதான் ஆளும் கட்சியின் அதிகபட்ச ஷாக் தகவலாக இருக்கிறது. சென்னை - வேளச்சேரி எம்.எல்.ஏ-வான அசோக், மீனவர் அணி மாநிலத் துணைச் செயலாளர் ரமேஷ், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றப் பொருளாளர் வரகூர் அருணாசலம், தேனி மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணிச் செயலாளரும் தமிழ்நாடு உரக்கட்டுபாடு மார்க்கெட்டிங் ஃபெடரேசன் தலைவருமான எல்லைப்பட்டி முருகன் என ஓ.பி.எஸ்-ஸின் நிழலாக வலம் வந்தவர்களைத் தூக்கி அடித்து இருக்கிறார் ஜெயலலிதா.   ஓவரா அழுது விசுவாசி வேஷம் போட்டபோதே இவருதான் மிகப்பெரிய பிராடு  என்று விளங்கி இருக்கவேண்டும் ...இதய தெய்வத்துக்கு அந்த அளவு நல்ல புத்தி இருக்குமா என்ன?


போடியில், ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 26-ம் தேதி 68 ஜோடிகளுக்குத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த விழா அழைப்பிதழில் தலைமை ஓ.பி.எஸ் என்று போடப்பட்டிருந்தது. ஆனால், விழா நடந்தபோது அவர் முக்கியப் பொறுப்புகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்டு இருந்தார்.
அவரின் இடத்தில் இருந்து அனைத்து வேலைகளிலும் முன்னிறுத்தப்பட்டார், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ-வான தங்க தமிழ்ச்செல்வன். அந்த நிமிடங்களில் ஓ.பி.எஸ் முகம் வாடிப்போய் இருந்தது. தங்க தமிழ்ச்செல்வனை நன்றி உரையை சொல்லச் சொல்லி இருக்கிறார்கள். இரண்டு மணி நேரம் நடக்க வேண்டிய திருமண நிகழ்ச்சி, 15 நிமிடங்களில் நடந்து முடிந்தது. சென்னை திரும்புவதற்கு மதுரையில் இருந்து ஓ.பி.எஸ்-ஸுக்கு விமான டிக்கெட் போடப்பட்டு இருந்தது. ஆனால், உடனடியாக அதை ரத்து செய்துவிட்டு, ரயிலில் சென்னை திரும்பினார்.

தூங்குவது, கார்டனில் ஜெயலலிதாவை சந்திப்பது ஆகிய நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் வீடு, கோயில் என அனைத்து இடங்களிலும் பன்னீருடன் வலம் வந்தவர்களைத்தான் ஜெயலலிதா தூக்கியடித்துள்ளார். என்ன நடந்தது என்று விசாரித்தோம்.
ஆக்டோபஸ் குடும்ப அரசியல்!

சசிகலாவின் குடும்ப உறுப்பினர்கள், அவரின் சொந்த பந்தங்கள் என்று மன்னார்குடி வகையாறாக்கள் அ.தி.மு.க-வில் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்தனர். இதனால் கட்சிக்கும், ஆட்சிக்கும் பெரும் கெட்ட பெயர் ஏற்பட்டது. சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு, பின்பு திரும்பவும் ஜெயலலிதா அவரைச் சேர்த்துக்கொண்டார். இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் மன்னார்குடி குடும்பம் அடக்கி வாசித்து வருகிறது.

ஆனால், இப்போது இன்னொரு மன்னார்குடி குடும்பமாக ஆட்டம் போடுவது ஓ.பி.எஸ் குடும்பம்தான் என்று கட்சிக்குள் பேசிக்கொள்கிறார்கள். ஆட்சியில் ஓ.பி.எஸ்-ஸுக்கு இரண்டாவது இடம் என்பதால், அந்தச் செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு, அவரது குடும்பத்தினர், சம்பந்தி குடும்பத்தினர், சொந்தபந்த வகையறாக்கள் என பல்வேறு சக்திகள் தமிழகம் முழுவதும் வலம் வந்தார்கள். பொதுப்பணித் துறை ஒப்பந்தம், பணியிட மாற்றம், நெடுஞ்சாலை ஒப்பந்தம் என்று அனைத்திலும் தலையீடு செய்துள்ளார்கள். அண்மைக்காலமாக, சட்டமன்றத் தேர்தலில் சீட் வாங்கித் தருவதாகச் சொல்லி ஓ.பி.எஸ் குடும்ப உறுப்பினர்கள் பண வசூலில் இறங்கியிருக் கிறார்கள். இதில், எல்லைப்பட்டி முருகன், அசோக், ஆகியோர் முன்னிலையில் இருந்ததாக கார்டனுக்குப் புகார் போயிருக்கிறது.

அடக்கம், பணிவு ஆகியவற்றால் அம்மாவின் பார்வையில் ஓ.பி.எஸ் இருந்ததால், மற்ற அமைச்சர்களும் ஓ.பி.எஸ் சொல்வதைக் கேட்டு நடந்துள்ளனர். முதல்வராக இருந்தபோது பன்னீர் இரண்டு முக்கியமான ஃபைல்களில் கையெழுத்துப் போட்டு இருக்கிறார். அதில் ஒன்று, தேனி மாவட்டத்தில் நடக்கும் ஏலக்காய் வியாபாரம் சம்பந்தமானது. ஏலக்காய் விற்பனைக்கு ஐந்து சதவிகிதமாக இருந்த வரியை, இரண்டு சதவிகிதமாக மாற்றி அந்தக் கோப்பில் கையெழுத்துப் போட்டு இருக்கிறார். இதனால், பல கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. வரி குறைப்பு செய்வதற்காக ஏலக்காய் விவசாய சங்கத் தலைவர் ஒருவர்,  பார்த்தார் என்று சொல்கிறார்கள். இதேபோல, இன்னொரு முக்கியமான ஃபைல் விஷயத்திலும் ஓ.பி.எஸ் மீது ஜெயலலிதா அதிருப்தி அடைந்தாராம்.

மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழகம் முழுதும் இயங்கி வரும் ஒரு டுபாக்கூர் நிதி  நிறுவனத்தை உயர் நீதிமன்றம் முடக்கியது. அந்த நிறுவனத்தை ஓ.பி.எஸ் குடும்பத்தினர் கையில் எடுத்து தற்போது வேறு பெயரில் நடத்தி வருகிறார்கள். மன்னார்குடி உறவினர்கள் முன்பு என்னவெல்லாம் செய்தார்களோ அதையெல்லாம்விட கூடுதலாகவே  ஓ.பி.எஸ் குடும்பத்தினர் செய்து வந்திருப்பது சசிகலா மூலம், பிறந்த நாளுக்கு முதல் நாள் ஜெயலலிதாவிடம் சொல்லப்பட்டிருக்​கிறது. உடனடியாகக் கொந்தளித்த ஜெயலலிதா, ‘தேனியில் தனியாகக் கட்சி நடத்துகிறாரா பன்னீர்செல்வம்?’ என்று கோபமாகக் கேட்டாராம். பிறந்தநாள் கொண்டாடப்படும் வேளையில் நடவடிக்கை வேண்டாம் என்று பொறுமை காத்த முதல்வர், அடுத்த நாளே சாட்டையைச் சுழற்றியிருக்கிறார்.
ரவீந்திரநாத் ராஜ்யம்!

கடந்த தி.மு.க ஆட்சியில் அழகிரி மகன், ஸ்டாலின் மகன் என்று இரண்டு நபர்களும் தமிழ் சினிமா உலகைக் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். தி.மு.க-வின் வீழ்ச்சிக்கு அதுவும் ஒரு காரணமாக அமைந்தது. அதேபாணியை பன்னீரின் மகன் கையில் எடுத்திருக்கிறார். சினிமா தயாரிப்பு, வெளிநாட்டு விநியோகம்  என்று சினிமா துறையை கைவசம் வைத்திருக்கிறார். ஏகப்பட்ட படங்களில் ‘நன்றி திரு ப.ரவீந்திரநாத் குமார்’ என்று டைட்டில் கார்டு போடுவதன் ரகசியம் இதுதான். அதோடு தேனி மாவட்டத்தில் போடி, கம்பத்தில் எம்.எல்.ஏ சீட் கேட்டும் இவர் விருப்பமனுக் கொடுத்து இருக்கிறார். பெரும்பாலும் கட்சியில் சீட் கேட்டு வருபவர்கள் பெரியகுளம், சென்னை ஆகிய இடங்களில் உள்ள ஓ.பி.எஸ் வீடுகளுக்குப் போய் பன்னீரின் காலில் விழுந்து கும்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதையே பன்னீரின் மகன் ரவியும் ஃபாலோ பண்ணுகிறாராம். ரவியைப் பார்க்க வரும் நபர்களைக் காலில் விழ வைக்கும் கொடுமையும் நடந்து வருகிறது. பன்னீரின் தம்பி ஓ.ராஜா, பெரியகுளம் நகர் மன்ற சேர்மனாக இருக்கிறார். இவர், ஏற்கெனவே சர்ச்சையின் நாயகர். தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆறு, குளங்களில் மண் அள்ளுவது, டெண்டர் விவகாரங்களில் தலையிடுவது என்று ஏகத்துக்கும் ஆட்டம் போட்டவரை சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் அடக்கிவைத்தார். இப்போது, மீண்டும் ராஜாவின் ராஜாங்கம் பெரியகுளத்தில் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்து இருக்கிறது.

மலைத்துப்போன உளவுத்துறை!

பன்னீரின் உறவினர்கள், அவரது பினாமிகள், அவருக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்களின் சொத்துப் பட்டியலை எடுத்திருக்கிறது உளவுத்துறை. அதில் கேரளாவில் உள்ள ஏலக்காய் எஸ்டேட்கள், திருப்பூர், கோவையில் இயங்கி வரும் மில்கள், மும்பைக்கு அடிக்கடி பன்னீரின் மகன் ரவி பறந்துபோய் கவனித்து வரும் சொத்துக்களின் விவரங்கள், வட மாநிலம் ஒன்றில் வாங்கிப் போட்டுள்ள மருத்துவக் கல்லூரி என்று பெரிய பட்டியலை சேகரித்த உளவுத்துறை அதிகாரிகள் மலைத்துப்​போயிருக்கிறார்கள். உடனடியாக அதை கார்டனுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் பன்னீரின் அணியிலும், நத்தம் விசுவநாதன் அணியிலும் மேலும் பல களையெடுப்புகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பணிவு, அடக்கம் எல்லாம் நடிப்புத்தான் பாஸ்!

- சண்.சரவணக்குமார்
படங்கள்: வீ.சக்தி அருணகி

கருத்துகள் இல்லை: