புதன், 9 மார்ச், 2016

தமிழக பாஜக கோஷ்டி மோதல்.....கதை கந்தல்....

தினமலர்.com : மத்தியில் ஆட்சி பொறுப்பு; எட்டு மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பு என, ஆட்சி அதிகாரங்கள் பல இருந்தும் என்ன பிரயோஜனம்? விஜயகாந்த் என்ற தனி மனிதனிடம் கேவலப்பட்டல்லவா கிடக்கிறது கட்சி?' என, தமிழக பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்தின் முன் நின்று, புலம்பிக் கொண்டிருந்தார், நீண்டகால, பா.ஜ., உறுப்பினர் ஒருவர்.கட்சியின் உள்விவகாரங்களை நன்கு அறிந்த அவரை ஓரங்கட்டி விசாரித்ததில், தமிழக பா.ஜ.,வின் கோஷ்டி கானங்களை நார் நாராக கிழித்து தொங்க விட்டார். ஆஹா  அருமை  அருமை அருமை ...இன்னும் கொஞ்ச நாள் பொறுங்க  ஆளாளுக்கு பப்ப்ளிக்கவே போட்டு குடுப்பாய்ங்க ....அவங்க குவாலிபிகேசன் கொஞ்சமா நஞ்சமா? ...ஆளாளுக்கு கரகம் ஆடிடமாட்டாய்ங்க?  



அவர் கூறியதாவது:தேசியம் குறித்து ஆரம்ப காலம் தொட்டு, எனக்கு அலாதி பிரியம் உண்டு. அந்த ஆர்வத்தில் தான், திராவிட பாரம்பரியத்தில் வந்த என் குடும்ப உறுப்பினர்களின் எரிச்சலையும் பொருட்படுத்தாமல், பா.ஜ.,வில் இணைந்தேன்.'திராவிட மண்ணில், தேசிய கட்சிகளால் என்ன சாதித்து விட முடியும்?' என, என்னை பார்க்கும்போதெல்லாம் ஏகடியம் பேசும் நண்பர்கள் மத்தியில் தான், நிதானத்தோடும்,தீர்க்கத்தோடும், பா.ஜ., பாதையில் பயணித்தேன். பத்து ஆண்டுகளுக்கு முன் நான் இந்த முடிவை எடுத்திருந்தாலும், அடுத்தடுத்து இந்தியா முழுமைக்கும் நடந்த மாற்றங்களால், தமிழகத்திலும், பா.ஜ., எப்படியும் துளிர் விடும் என்ற நம்பிக்கை விதையை நானே, என்னுள் விதைத்துக் கொண்டேன்.

குஜராத்தில் மோடி தலைமையிலான ஆட்சி அதிகாரம் நடக்க ஆரம்பித்தது. அவர், அந்த மாநிலத்தை எல்லா நிலைகளிலும் மாற்றி, உயர்த்தி காட்டினார். அந்த மாற்றம் இந்தியா முழுமைக்கும் விரைவிலேயே கட்டாயம் வரும் என்ற நம்பிக்கை, என்னுள் ஆழமாக பதிந்தது.எல்லா மாநிலங்களும் கட்சியின் தலைவர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடியின் எண்ணங்களை நிறைவேற்றி, ஆட்சி அதிகாரத்தை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்க, தமிழகம் மட்டும், ஒரே பாய்ச்சலில், 100 அடி முன் போய், அடுத்த பாய்ச்சலில், 200 அடி பின்னுக்கு வந்துவிட்டது; காரணம், கோஷ்டி கானம்.தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன்,
வானதி சீனிவாசன், கேசவ விநாயகம், இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், ஆர்.கே.ராகவன், மோகன்ராஜுலு,எச்.ராஜா என கட்சியில் நிறைய தலைவர்கள் உள்ளனர்; ஆனால், இவர்கள் தான் கட்சிக்கே பிரச்னை.எல்லாருமே மோடியை விட, கூடுதலாக, தாங்கள் தகுதி படைத்துக் கொண்டு விட்டதாக நினைத்துக் கொள்கின்றனர். ஒன்றும் இல்லாவிட்டாலும், மத்தியில் இருக்கும் ஆட்சியை வைத்து, நாலு காசாவது சம்பாதிக்கலாம் என, கட்சி பக்கம் ஆர்வமாக ஓடோடி வந்த சினிமா நட்சத்திரங்கள் கூட, 'ஐயையோ... தெரியாத்தனமா முடிவெடுத்துட்டோமோ' என, அஞ்சி ஒதுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கட்சியின் தலைவரை பார்க்க வேண்டும் என்றால், இன்னொரு தலைவர் கோபித்துக் கொள்வார் என, பயந்து, போகக் கூடாத இடத்துக்கு சென்று, பார்க்க கூடாதவரை பார்த்ததைப் போல, பதுங்கி பம்மும் நிலை, ஒவ்வொரு தொண்டனுக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த கோஷ்டி பூசல், கூட்டணி அமைக்கும் விஷயத்திலும் அப்பட்டமாக தெரிய ஆரம்பித்துள்ளது தான், உச்சகட்ட வேதனை. இங்கிருக்கும் தலைவர்கள் கூட்டணிக்காக, தனித்தனியாக விஜயகாந்தை,'டீல்' செய்து ஓய்ந்துவிட்ட நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், சென்னை வந்து, யாருக்கும் தெரியாமல் சந்தித்து விட்டு செல்கிறார்.அவருக்கு பக்க துணையாக இருந்து, எல்லாமே செய்து முடித்த கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர், இந்த விஷயத்தை கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கூடசொல்லவில்லை. சென்னைக்கு, பிரகாஷ் ஜாவடேகர் வந்தது குறித்து, திருப்பதியில் இருந்த தமிழிசையிடம் கேட்டால், அப்படியொரு நிகழ்வு குறித்து, எதுவும் தெரியாதவராக, எதை எதையோ சொல்கிறார். இந்த விஷயம், கட்சியின் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் தெரியவில்லை. இவர்களுக்கே, தெரியாத போது, மற்றவர்களுக்கு கட்சியில் நடப்பது குறித்து என்ன தெரியும்? இப்படி யாருக்கும் தெரியாமல், ரகசியமாகவே எல்லா காரியங்களும் நடப்பது ஏன் என்று, கட்சித் தலைவர்களிடம் கேட்டு விட்டேன்.இந்த நிலையில் தான் கட்சியின், மையக்குழு எனப்படும், 'கோர் கமிட்டி'யில் உள்ளவர்கள் பங்கேற்ற கூட்டம், சில நாட்களுக்கு முன், இரவு நேரத்தில் நடந்தது. அதில், பேசிய பலரும் ஆளாளுக்கு ஒரு கருத்தை முன்மொழிந்தனர்.

பிரதானமாக பேசிய, பொன்.ராதாகிருஷ்ணன், 'இப்படியெல்லாம் இறங்கிப் போய் விஜயகாந்துடன் கூட்டணி அமைப்பதை விட, தனித்தே போட்டியிடலாம்' என உசுப்பிவிட, அவரது ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாகவும்; எதிர்ப்பாளர்கள் எதிராகவும் கருத்து கூறினர்.
இறுதியில், இக்கூட்டணிக்கு தான் முயற்சி எடுப்பதால், எதிர்க்கின்றனர்என்பதை புரிந்து கொண்ட தமிழிசை, 'கூட்டணி குறித்து எல்லாரும் அமைதியாக இருங்கள்; அமித் ஷாவிடம் பேசி, நான் நல்லபடியாக முடிக்கிறேன்' என, காட்டமாக கூறினார்.

இது, கோஷ்டி பூசலுக்கான, ஒரு விஷயம் தான். இப்படி தினமும் ஆயிரம் விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.'தமிழகத்தில் பா.ஜ., - அ.தி.மு.க.,வுடன் கூட்டணி குறித்து பேசப்பட்டு வருகிறது' என, இல.கணேசன் கூறினால், அதை மறுக்கிறார் தமிழிசை. இவ்வளவு சொன்ன பிறகும், தமிழக பா.ஜ.,வில் கோஷ்டிப்பூசல் இல்லை என, தமிழிசை சொன்னால், நஷ்டம் என்னை போன்றவர்களுக்கு மட்டுமல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
நமது சிறப்பு நிருபர்

கருத்துகள் இல்லை: