புதன், 9 மார்ச், 2016

திமுக-தேமுதிக கூட்டணி உறுதி - தேமுதிகவுக்கு 55 தொகுதிகள்...11 தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு....

சென்னை: தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலை ஒட்டி திமுகவுடன் தேமுதிக கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டது எனவும், வருகின்ற 11 ஆம் தேதியன்று கருணாநிதி,விஜயகாந்த் சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழக சட்டசபைக்கு 15 ஆவது முறையாக மே மாதம் 16 ஆதேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம் பெறுவது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. டெல்லியில் இருந்து வந்த முன்னாள் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத், தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்தித்துவிட்டு கூட்டணியை உறுதி செய்து சென்றார். இந்நிலையில், தேமுதிகவையும் உள்ளிழுக்க தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன், தே.மு.தி.க இளைஞரணி செயலாளர் எல்.கே. சுதீஷை சந்தித்து முதற்கட்ட பேச்சு வார்த்தையை தொடர்ந்தார். அதில் முன்னேற்றம் ஏற்படவே அடுத்து பிரேமலதாவுடன் பேச்சுவார்த்தை நடந்தது.


அப்போது கூட்டணிக்கு வர பல நிபந்தனைகளை பிரேமலதா விதித்ததாக தெரிகிறது. ஒரு சில நிபந்தனைகளை தவிர, எல்லா நிபந்தனைகளையும் தி.மு.க. தரப்பு ஏற்றுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து, தி.மு.க. கூட்டணிக்கு வர தே.மு.தி.க தரப்பில் இருந்து பச்சை கொடி காட்டப்பட்டுள்ளது. தி.மு.க மற்றும் தே.மு.தி.க இடையேயான கூட்டணி உடன்பாடு நேற்று முன்தினம் உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் நேற்று பேட்டியளித்த தி.மு.க தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க.வுடனான கூட்டணி பேச்சுவார்த்தை குறித்த கேள்விக்கு பதில் அளித்தபோது, ‘‘பழம் கனிந்து கொண்டிருக்கிறது. பாலில் எப்போது விழும் என்று இன்னும் முடிவாகவில்லை. கூட்டணி முடிவாவதில் இழுபறி எதுவும் கிடையாது. அதற்கு மேல் இப்போது எதுவும் சொல்வதற்கு இல்லை'' என்று கூறினார்.

இந்த மறைமுகமான பதிலால் தி.மு.க உடனான கூட்டணியை உறுதி செய்வதற்காக11 ஆம் தேதி தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்திப்பார் என தெரிகிறது. அன்றைய தினம் தி.மு.க மற்றும் தே.மு.தி.க இடையேயான கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.
மேலும், தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.கவுக்கு 55 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டுறவு சங்க தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் 25 சதவீதம் இடம் வழங்கப்படுகிறது. ராஜ்யசபாவில் ஒரு இடம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் பங்கு என்ற கோரிக்கையையும் தே.மு.தி.க வைத்துள்ளது. ஆனால், இதுவரை அதுகுறித்து மட்டும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more/tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: