வெள்ளி, 11 மார்ச், 2016

திமுக, அதிமுக வாசலில் காத்து கிடக்கும் ஜாதிகட்சிகள்...

தமிழகத்தில், 10க்கும் மேற்பட்ட ஜாதிக் கட்சிகளின் தலைவர்கள், தங்களுக்கு, 'சீட்' கிடைக்குமா என, அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகளின் கதவை தட்டிக் கொண்டிருக்கின்றனர். காக்க வைத்து கடைசி நேரத்தில், கூட்டணியில் சேர்த்துக் கொண்டால் தான், ஜாதிக் கட்சிகளால் பேரம் பேச முடியாது என, பெரிய கட்சிகள் கருதுவதால், கூட்டணியை உறுதி செய்யாமல், இழுத்தடிக்கின்றனர்.
தமிழகத்தில், ஜாதிக்கு ஒரு கட்சி மட்டுமல்ல; ஒரு ஜாதிக்கு, நான்கைந்து கட்சிகள் கூட இருக்கின்றன.தாராய் நீ தாராய் போகும் இடம் சட்டசபையிலதான்   தாராய்  சீட்டு  தாராய்...
தேர்தல் நேரத்தில், பெரிய கட்சிகளிடம் கூட்டணி பேசி, 'சீட்' பெறுவது மட்டுமே இவர்களது, ஒரே லட்சியம்.தென் மாவட்டங்களில் பிரபலமான, சேதுராமன் தலைமையிலான அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், 2011 சட்டசபை தேர்தலில்,அ.தி.மு.க., கூட்டணியில் சேர்ந்தது. அக்கட்சியின் பொதுச் செயலர் இசக்கிமுத்துக்கு திருச்சுழி தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால், சொந்தக் கட்சியின் 'உள்ளடி' வேலைகளால், அவர் தோல்வி அடைந்தார்.

தற்போது, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தில் இருந்து வெளியேறி, பசும்பொன் மக்கள் கழகம் என்ற கட்சியை, இசக்கிமுத்து துவக்கி உள்ளார். அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து, ஒரு சீட்டுக்காக காத்திருக்கிறார்.அதே நேரத்தில், சேதுராமன் தலைமையிலான கட்சியினர், அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., என, மூன்று தரப்பிலும் கூட்டணி பேச்சு நடத்துகின்றனர். எந்த கட்சி, அதிக இடம் தருகிறதோ, அதில் சேருவதற்கு சேதுராமன் தயாராக உள்ளார்.

நடிகர் கார்த்திக் தலைமையிலான நாடாளும் மக்கள் கட்சி, லோக்சபா தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி அமைத்தது. வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ளதால், அதில்
சேர கார்த்திக் பேச்சு நடத்தி வருகிறார். விஜயகாந்திற்கு தொகுதி பங்கீடு முடிந்த பின், கார்த்திக் கட்சிக்கு, ஒரு தொகுதி ஒதுக்கப்படலாம் என தெரிகிறது.

சந்தானம் தலைமையிலான பார்வர்டு பிளாக் கட்சி, லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வை ஆதரித்தது. தற்போது, தி.மு.க.,வை ஆதரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கதிரவன் எம்.எல்.ஏ., தலைமையிலான பார்வர்டு பிளாக் கட்சி, அ.தி.மு.க., அணியில் நீடிக்கிறது. தென் மாவட்டங்களில், தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு, ஜான் பாண்டியனின் தமிழகமக்கள் முன்னேற்றக் கழகம்; கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிகள் உள்ளன. இரு கட்சிகளும், கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அணியில் இருந்தன. லோக்சபா தேர்தலில், புதிய தமிழகம் மட்டும் வெளியேறி, தி.மு.க., கூட்டணியில் சேர்ந்தது. தென்காசி தொகுதியில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி, குறைந்த ஓட்டுகள்வித்தியாசத்தில் வெற்றியை இழந்தார்.

ராஜ்யசபா எம்.பி., தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஆதரவு அளித்த புதிய தமிழகம், தற்போது சட்டசபை தேர்தலில், தி.மு.க., அழைப்புக்காக காத்திருக்கிறது. ஆனால், அக்கட்சியை அழைக்காமல், தி.மு.க., காலம் தாழ்த்தி வருகிறது. கடைசி நேர பட்டியலில், புதிய தமிழகமும் இருப்பதால், தி.மு.க., முக்கியத்தும் கொடுக்கவில்லை.

இதே நிலைமை தான், ஜான்பாண்டியன் கட்சிக்கும், அ.தி.மு.க., வில் காணப்படுகிறது. ஒரு முறை, அவரை அழைத்து ஜெயலலிதா பேசியதோடு சரி. அதற்கு அப்புறம், கூட்டணியில் அக்கட்சி இருக்கிறதா, இல்லையா என்பதை ஜெயலலிதா அறிவித்தால் தான் தெரியவரும்.-

கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு பெற்ற, கவுண்டர் சமுதாயத்தில், ஒன்று உடைந்து இன்னொன்று என, தற்போது, நான்கு கட்சிகள் உள்ளன. ஆளுங்கட்சி கூட்டணியில் தொடரும், தனியரசுக்கு, ஒரு, 'சீட்' மீண்டும் கிடைக்குமா என்பது தான், அவரது தலைமையிலான கட்சியின் ஒரேஎதிர்பார்ப்பு.அதற்கு போட்டியாக, கொங்கு சமுதாயத்தில் லேட்டஸ்டாக துவக்கப்பட்டுள்ள புதிய கட்சியும், போயஸ் தோட்டத்தின்கதவை தட்டத் துவங்கி உள்ளது. யாருக்கு கதவு திறக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இரு இடங்கள் தந்தனர். இரண்டிலும் தோல்வி அடைந்தது.கடந்த, 2011 சட்டபை தேர்தலிலும், தி.மு.க., கூட்டணியில் >தான், இக்கட்சி போட்டியிட்டது. படுதோல்வி
காரணமாக, தி.மு.க., கூட்டணியை விட்டு வெளியேறியது. தற்போது, மக்கள் நலக் கூட்டணியில் ஐக்கியமாகி உள்ளது. ஆனாலும், அ.தி.மு.க., அழைக்குமானால், முதல் கட்சியாக ஓட்டம் பிடிக்கும் வாய்ப்புஉள்ளது.

ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னணி கழகம், 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க., அணியில் இருந்தது. தற்போது, அ.தி.மு.க., கூட்டணியில், 'சீட்' கேட்டு காத்திருக்கிறது.பா.ஜ.,வை பொறுத்தவரை, முதலியார், உடையார், யாதவர், தேவர், நாடார், தேவேந்திரகுல வேளாளர், கவுண்டர், நாயுடு போன்ற பல ஜாதி சங்க ஆதரவு உண்டு. கூட்டணி விஷயத்தில், அக்கட்சிக்கு தான், 'மவுசு' குறைவு என்பதால், அங்கே முட்டி மோதினால், 'சீட்' கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு, கமலாலயத்தை இவர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

வேல்முருகன் தலைமையிலான தமிழர் வாழ்வுரிமை கட்சி, லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றது. தற்போது, அ.தி.மு.க., கூட்டணியில் நீடிக்க, காத்திருக்கிறது.முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமியின் சமத்துவ மக்கள் படை, எந்த கூட்டணியில் சேருமோ தெரியவில்லை. அதேபோல், கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு அளித்த பூவை ஜெகனின் புரட்சி பாரதம் கட்சி, தற்போது அதே கூட்டணியில் நீடிக்க விரும்புகிறது.

இப்படி, 10க்கும் மேற்பட்ட கட்சி களின் தலைவர்கள், ஒரு சீட் கிடைத் தால் போதும் என, பெரிய கட்சிகளின் கதவை தொடர்ந்து தட்டிக் கொண்டிருக்கின்றனர். கதவு எப்போது திறக்கும் என்பது, அதற்கு பின்னால் இருப்போருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

நமது சிறப்பு நிருபர் -  தினமலர்.com

கருத்துகள் இல்லை: