திங்கள், 18 ஜனவரி, 2016

கலைஞர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜார்..அவதூறு வழக்கு..

தன் மீது தொடுக்கப்பட்டுள்ள அவதூறு வழக்கில் விளக்கம் அளிக்க திமுக
தலைவர் மு கருணாநிதி இன்று திங்கள்கிழமை நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். தமிழக முதல்வரும் அஇஅதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெ ஜெயலலிதா கருணாநிதி மீது தொடுத்துள்ள அவதூறு வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அதில் கருணாநிதி நேரில் வந்து ஆஜரானார். அப்போது இந்த வழக்கின் விசாரணையை வரும் மார்ச் மாதம் 10 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இன்றைய நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த கருணாநிதி, அவதூறு வழக்குகளைத் தொடர்ந்து தொடுக்கும் தமிழக அரசின் போக்கு சரியானது அல்ல என இந்திய உச்சநீதிமன்றமே கூறியுள்ளதாக தெரிவித்தார். "இதை விட கூடுதலாக நான் கருத்து கூறத் தேவையில்லை" என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் தேதி விகடன் இதழ், முரசொலி மற்றும் கருணாநிதி மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார்.
நவம்பர் 25 ஆம் தேதியிட்ட விகடன் இதழில், 'என்ன செய்தார் ஜெயலலிதா' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியானது.
அதைத்தொடர்ந்து அந்த கட்டுரையில் தமிழக அரசுக்கும், முதலமைச்சர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியாகியுள்ளது என்றும் இதனை வெளியிட்ட ஆனந்த விகடன் ஆசிரியர், பதிப்பாளர் ஆகியோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஒரு வழக்கு தொடரப்பட்டது.
இரண்டாவதாக, இந்தக் கட்டுரையின் விவரங்களைத் முரசொலியில் வெளியாகும் "கலைஞர் பதில்" என்கிற பகுதியில் வெளியிட்டதற்காக திமுக தலைவர் மு கருணாநிதி மீதும், அந்த கேள்வி - பதில் பகுதியில் இடம்பெற்ற விவரங்கள சரிபார்க்காமல் வெளியிட்ட முரசொலி இதழின் ஆசிரியர் செல்வம் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஒரு வழக்கும் தனியாக தாக்கல் செய்யப்பட்டது.
முன்னதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு தொடர்பான விசாரணையின்போது இந்திய உச்சநீதிமன்றம், தமிழக அரசு இதுபோன்ற அவதூறு வழக்குகளை அதிகம் தொடர்வதற்கான காரணம் என்ன என்று கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் தேதியன்று கேள்வி எழுப்பியது.
மேலும் அரசாங்கத்தை விமர்சனம் செய்வது எதிர்க்கட்சிகளின் கடமை தான் என்றும், இதுபோன்ற விமர்சனங்களுக்கு எதிராகக் கூட அவதூறு வழக்கு தொடர வேண்டிய அவசியம் ஏன் உண்டானது என்பது உள்ளிட்ட கேள்விகளும் நீதிமன்றத்தால் அப்போது எழுப்பப்பட்டிருந்தன.
இந்த பின்னணியில் அதே போன்றதொரு அவதூறு வழக்கில் திமுக தலைவர் மு கருணாநிதி இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜாரானது முக்கியத்துவம் பெற்றுள்ளது. bbc.tamil.com

கருத்துகள் இல்லை: