வியாழன், 21 ஜனவரி, 2016

நத்தம் விஸ்வநாதன் : தமிழ்நாட்டில் மதுவிலக்கு சாத்தியமில்லை

தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்துவது சாத்தியமில்லை என்று தமிழக
சட்டப்பேரவையில் மதுவிலக்குத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்திருக்கிறார். மதுவிலக்கினால் ஏற்படும் வருவாய் இழப்பை மத்திய அரசு வழங்கினால், உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்றும் அவர் கூறியிருக்கிறார். "மதுவிலக்கு சாத்தியமில்லை" -தமிழ்நாடு அமைச்சர் தமிழ்நாட்டில் முழுமையாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென தேமுதிகவின் சட்டமன்ற உறுப்பினர் பார்த்தசாரதி கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த மதுவிலக்குத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், மதுவிலக்கை அமல்படுத்தும் சூழல் தற்போது தமிழகத்தில் இல்லை என்று தெரிவித்தார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை மேற்கோள்காட்டிப் பேசிய அமைச்சர், கொழுந்து விட்டு எரியும் நெருப்பு வளையத்திற்கிடையே கொளுத்தப்படாத கற்பூரமாக தமிழகம் இருப்பதால், இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தினால்தான் இங்கும் அமல்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் மட்டும் அமல்படுத்தினால், கள்ளச்சாரயம் பெருகுவதோடு தமிழகத்தின் வருவாய் பிற மாநிலங்களுக்குப் போய்விடும் என்றும் நத்தம் விஸ்வநாதன் கூறினார். மதுவிலக்கை அமல்படுத்தினால், மாநிலத்திற்கு ஏற்படும் இழப்பை மத்திய அரசு ஈடு செய்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியபோது, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் இருக்கிறதா என்று கேள்வியெழுப்பிய நத்தம் விஸ்வநாதன், மாநிலத்துக்கு மாநிலம் மாறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்டுகளுக்கு மதுவிலக்குக் குறித்துப் பேச தார்மிக உரிமை இல்லை என்று குறிப்பிட்டார்.

இதற்கிடையில் ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுத்ததற்காக திமுக, காங்கிரஸ் கட்சிகளும் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து உறுதி அளிக்காததால் கம்யூனிஸ்ட், பாமக, புதிய தமிழகம் கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்துவதற்கும் தமிழக முதலமைச்சர் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டார். bbc.tamil.com

கருத்துகள் இல்லை: