செவ்வாய், 3 நவம்பர், 2015

EVKS இளங்கோவன் : கவிஞர் தங்கபாலுவின் இன்றைய சொத்துக்கள் எப்படி வந்தது? கணக்கு வெளியிட...

கடந்த சனிக்கிழமை டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார்கள். அதனைத் தொடர்ந்து ப.சிதம்பரம் தலைமையில் கே.வி.தங்கபாலு, வந்தவாசி கிருஷ்ணசாமி, கே.எஸ்.அழகிரி, குமரி அனந்தன், வசந்தகுமார், கோபிநாத், வள்ளல் பெருமான், முருகானந்தன், கோபி, ஐ.என்.டி.யு.சி. தலைவர் காளன், ஆர்.தாமோதரன் ஆகியோர் திங்கள்கிழமை டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பு குறித்து தங்கபாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதற்கு தற்போது உகந்த சூழல் இல்லை. தகுந்த சூழலை ஏற்படுத்துவதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் தலைமைக்கு ஒரு மாற்றம் வேண்டும். அதற்கு ஒரு தகுதியான, ஒழுக்கமான, நம்பிக்கையான, காங்கிரஸ் தலைமைக்கு விசுவாசம் கொண்ட, காங்கிரஸ் தொண்டர்களை அரவணைக்கிற ஒருவர் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
இந்தநிலையில் டெல்லியில் இன்று சோனியாவை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்தித்தார். தங்கபாலு குற்றச்சாட்டு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அவர்கள் புகார்கள் சொன்னார்களா இல்லையா என்று எனக்கு தெரியாது. அவர்கள் கட்சித் தலைவர் சோனியாவை சந்தித்தார்கள்.
இதில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் இன்றும் தங்களை காங்கிரஸ்காரர்கள் என்று சொல்லிக்கொல்கிறார்கள்.
என்னை பொறுத்தவரை நான் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கின்றேன். எனக்கு பதில் யாரையாவது மேலிடம் நியமிக்க முடிவு செய்தால் அதனை நான் ஏற்றுக்கொள்வேன். இதற்கு மேலிடத்திற்கு உரிமை உள்ளது.

நான் தலைவர் ஆன மறுநாளே இவர்கள் டெல்லி செல்வார்கள் என்று எதிர்பார்த்தேன். ஒரு வருடம் கழித்து வந்திருக்கிறார்கள்.
நான் வேலை செய்யவில்லை என்று சொல்வதை என்னால் ஏற்றக்கொள்ள முடியாது. இந்த ஒரு வருட காலத்தில் என்ன வேலை நடந்திருக்கிறது. கட்சிப் பணிகள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடந்தது தொண்டர்களுக்கு தெரியும்.
கவிஞர் தங்கபாலு என்ற பெயரோடு அரசியலுக்கு வந்தவர். இன்றைக்கு ஒரு பொறியியல் கல்லூரி, ஆத்தூருக்கு பக்கத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நிலம், அதேபோல் தருமபுரி, கிருஷ்ணகிரியில் கிரானைட் சுரங்கங்கள், அதேபோல் கேரளாவில் மிகப்பெரிய எஸ்டேட், தங்கவேலு என்ற பெயரில் பொறியியல் கல்லூரி சென்னையில் வைத்துள்ளார். இவைகள் எல்லாம் கவிஞர் கண்ணதாசனைப்போல் பாட்டெழுதி சம்பாதித்ததா அல்லது கதை வசனம் எழுதி சம்பாதித்ததா அல்லது உழைத்து சம்பாதித்ததா என்பதை அவர் கணக்கு வெளியிட வேண்டும் என்றார் nakkheeran.com

கருத்துகள் இல்லை: