வெள்ளி, 6 நவம்பர், 2015

நீதிபதி சிவப்பா மீது கொடூர தாக்குதல் ...ஜெயலலிதாவின் 7 முன் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து ஜெயா சிறை செல்ல......

மைசூர்: ஜெயலலிதா மீதான கலர் டி.வி. ஊழல் வழக்கை விசாரித்துத் தீர்ப்பளித்த ஓய்வு பெற்ற நீதிபதி சிவப்பா, மர்ம நபர்களால் தாக்கப்பட்டு மைசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம், பட்டசோமனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற நீதிபதி சிவப்பா. 1991ல் பெங்களூர் உயர் நீதிமன்றத்திலும், 1994ல் சென்னை உயர் நீதிமன்றத்திலும் நீதிபதியாகப் பணியாற்றியவராகும். சிவப்பா, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது 1996ம் ஆண்டு, ஜெயலலிதாவுக்கு எதிரான கலர் டி.வி. ஊழல் வழக்கில், அவரது 7 முன் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்தார். இதனால் ஜெயலலிதா சிறை செல்ல வேண்டியதாயிற்று.
அந்த ஆண்டுதான் ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த வழக்கை சுப்பிரமணியன் சுவாமி தொடுத்தார். இதை எதிர்த்து ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறியிருந்தனர்.
மனுவை விசாரித்த சிவப்பா, அரசியல் காழ்ப்பு உணர்ச்சியோடு தன் மீது பொய் வழக்குகள் போட்டிருப்பதாக ஜெயலலிதா தரப்பில் கூறப்பட்ட வாதத்தை ஏற்க முடியாது. வழக்கை தனிநபர் விசாரிக்க ஆணையிட்டது தவறு. லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் மூலம் விசாரிக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தார்.
தாக்குதல் இப்படி ஆட்சியில் இருப்பவர்களுக்கே எதிராக பல தீர்ப்புகளையும், உத்தரவுகளையும் வழங்கி நேர்மையான நீதிபதியாக விளங்கியவர் சிவப்பா. ஓய்வுபெற்று சொந்த ஊரிலுள்ள அவரை தற்போது சில ரவுடிகள் தாக்கியுள்ளனர். அவர் மைசூரிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார்வருகிறார்.
மனைவி மீதும் தாக்குதல் இதுகுறித்து சிவப்பா கூறுகையில், "அக்டோபர் 25ம் தேதி இரவு நானும், என் மனைவி விஜயலட்சுமியும் மாடியில் தூங்கிக்கொண்டிருந்தோம். நள்ளிரவு 12.30 மணி அளவில், வீட்டின் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே வந்த சில மர்ம நபர்கள், என்னையும், என் மனைவியையும் அடித்து உதைத்தனர். வீட்டில் இருந்த 350 கிராம் தங்க நகைகளையும், ரூ.1.40 லட்சத்தையும் எடுத்துக்கொண்ட பிறகு என் அலுவலகத்துக்கு இழுத்துச்சென்று அங்கிருந்த ஆவணங்களைக் கிழித்துப்போட்டனர்.
நீ எத்தனை பேருக்கு தீர்ப்பு சொல்லி உள்ளே தள்ளியிருக்கிறாய், உனக்கு இதுதான்டா தீர்ப்பு என்று அவர்கள் மிரட்டினர். இவ்வாறு சிவப்பா தெரிவித்தார். அடித்து, உதைத்து, மிரட்டிய நபர்கள் கன்னடம், ஹிந்தி மட்டுமின்றி, தமிழிலும் பேசியுள்ளனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பு எழுதியுள்ளேன். எந்த வழக்கையும் தனிப்பட்ட முறையில் பார்த்தது இல்லை. எனவே, யார் மீதும் சந்தேகம் இல்லை. காவல் துறைதான் அதைக் கண்டுபிடிக்க வேண்டும்" என்றுள்ளார் சிவப்பா. இவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கர்நாடக வக்கீல்கள் அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்
கர்நாடக ஹைகோர்ட் உத்தரவையடுத்து, சிவப்பாவுக்கு கடந்த காலங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்ததாம். ஆனால், சித்தராமையா ஆட்சிக்கு வந்ததும் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதைத் தெரிந்துகொண்டுதான் மர்ம நபர்கள் சிவப்பாவை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Read more at: //tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: