திங்கள், 10 ஆகஸ்ட், 2015

கடலுக்குள் மூழ்கிய மகளை காப்பாற்ற வந்தவரை தடுத்த தந்தை.ஆண் கைபட்டால் களங்கம் என..துபாய்!

அந்நிய  கடலுக்குள் மூழ்கிகொண்டிருந்த மகளை காப்பாற்ற வந்தவரை தடுத்த தந்தை  அவரிடம் மல்லுக்கடி, கீழே தள்ளிவிட்டு கடலுக்குள் பாய்ந்த பாதுகாப்புப் படையினர் அந்த இளம்பெண்ணை பிணமாகத்தான் மீட்க முடிந்தது
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நடிப்பில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ‘மதுரை வீரன்’ படத்தின் ஆரம்பக் காட்சியில் கதாநாயகிகளில் ஒருவரான பானுமதி ஆற்றில் குளிக்கும்போது பெரும்சுழல் ஒன்றில் சிக்கிக் கொள்வார். மன்னரின் மகளான இளவரசி, பானுமதிக்கு பாதுகாப்பாக உடன்சென்ற தோழிகளும், மதுரை மண்டலத்தின் படைத்தளபதியான பாலையாவும் செய்வதறியாது கைகளை பிசைந்தபடி நின்றிருக்க, ஆற்றுக்குள் பாயும் எம்.ஜி.ஆர், ஆற்றுச்சுழலுக்குள் நீந்தி, பானுமதியை காப்பாற்றி, கரை சேர்ப்பார்.


ஆனால், கதைப்படி, அருந்ததியர் எனப்படும் தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த எம்.ஜி.ஆர்., பானுமதியை காப்பாற்றியது மன்னருக்கு தெரிந்து விட்டால், பானுமதியை அரண்மனையை விட்டே விரட்டி விடுவார்கள் என்று கற்பனையாக கதையை அளந்து விடும் பாலையா, தானே உயிரைப் பணயம் வைத்து, காப்பாற்றியதாக மன்னரிடம் பெருமை பீத்திக் கொள்ள நினைத்து, தனது பாட்டுக்கு பின்பாட்டு பாட வேண்டும் என பானுமதியை மிரட்டுவார்.

இதற்கு, விபரம் அறியாத பானுமதியும் சம்மதிக்க, அரண்மனைக்கு செல்லும் பாலையா, மன்னரிடம் அளந்து விடும் ‘பீலா வசனங்கள்’ இன்றளவும் ரசிகர்கள் காதுகளில் ரீங்காரமிடும் அற்புத வசனங்களாக அமைந்திருந்தன.

இதற்கு ஒப்பான ஒரு சம்பவம் சமீபத்தில் துபாய் நாட்டில் நடந்துள்ளது.

துபாயில் வசிக்கும் ஆசிய இனத்தைச் சேர்ந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர், சமீபத்தில் ரம்மியமான துபாய் கடற்கரையில் மாலைப் பொழுதை கழிக்க விரும்பி, தனது குடும்பத்துடன் பிக்னிக் சென்றிருந்தார்.

கடல் அலைகளுக்கு இடையே குழந்தைகள் நீந்தி விளையாடும் அழகை அவர் தூரத்தில் இருந்து ரசித்துக் கொண்டிருந்தபோது, வேகமாக எழும்பிவந்த ஒரு ராட்சத பேரலை அவரது இருபது வயது மகளை கடலுக்குள் இழுத்துச் சென்றது.

இதை கடற்கரையோரம் ரோந்து சுற்றிக் கொண்டிருந்த துபாய் அரசின் பாதுகாப்பு மற்றும் மீட்புப் படையை சேர்ந்த இரு காவலர்கள் கவனித்து விட்டனர். அந்த இளம்பெண்ணை காப்பாற்ற அவர்கள் விரைந்து சென்றனர். ஆனால், அவர்களை ஆறடிக்கும் மேலே வளர்ந்திருந்த ஆஜானுபாகுவான ஒரு உருவம் தடுத்தது.

தனது மகளின் உடலின்மீது அன்னிய ஆடவர்களின் கரம் பட்டால் அவள் களங்கப்பட்டு விடுவாள் என நம்பிய அந்த தந்தை, மீட்புப் படை வீரர்கள் தங்களது கடமையை செய்ய விடாமல் தடுத்து, அவர்களை இழுத்துப் பிடித்து, தாக்க தொடங்கினார்.

அவரிடம் மல்லுக்கடி, கீழே தள்ளிவிட்டு கடலுக்குள் பாய்ந்த பாதுகாப்புப் படையினர் அந்த இளம்பெண்ணை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. எனது வாழ்நாளில் இதுபோன்ற ஒரு கோராமையை நான் பார்த்ததே இல்லை என துபாய் போலீஸ் துறையின் லெப்டினண்ட் ஜெனரல் அகமது புர்க்கிபா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்  மாலைமலர்.com 

கருத்துகள் இல்லை: