செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

மாணவர் தற்கொலை! Amet பல்கலை கழக முதல்வரை தேடி போலீஸ். ..இறந்த மாணவனின் கடிதம் விலாவாரியாக....

சென்னை : கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் பகுதியில் அமைந்துள்ள அமெட் கடல் சார் பல்கலைகழகத்தில் சீக்கிய மாணவர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் அவர் தற்கொலை செய்யும் முன் எழுதியதாக ஒரு கடிதம் வெளியாகி இருக்கிறது. அதில், தனது மரணத்துக்கு கல்லூரி முதல்வர்தான் காரணம் என்று கூறப்பட்டு இருப்பதால், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்த ஜே.டி சிங் என்ற மாணவர், சென்னை அமெட் பல்கலைக்கழகத்தில் கடந்த நான்கு வருடங்களாகப் படித்து வந்தார். தனது கல்லூரிப் படிப்பை முடிக்கும் முன்னரே, ஒரு தனியார் கப்பல் நிறுவனத்தில் பணிபுரியத் தேர்வாகி இருந்தார். இந்நிலையில் கடந்த மே மாதம் தனது கல்லூரிப் படிப்பை முடித்த அவருக்கு, இதுவரை மாற்றுச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை.
இது குறித்து தனது கல்லூரி முதல்வர் வேணுகோபாலிடம் அவர் கேட்டபோது, அவர் கல்லூரியில் படித்தபோது நடந்த சில நிகழ்வுகளை மேற்கோள் காட்டி, சான்றிதழ்களை வழங்க மறுத்துவிட்டார். மேலும், சான்றிதழ் வேண்டும் என்றால், சான்றிதழ் கிடைக்கும் வரை தினமும் கல்லூரி வந்து ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒருமுறை கையொப்பம் இட வேண்டும் என்றும் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக தினமும் கல்லூரி வந்து கையொப்பமிட்ட பின்பும், இதுவரை சான்றிதழ்கள் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று இதுகுறித்து முதல்வர் வேணுகோபாலிடம் மீண்டும் கேட்டபோதும், அவர் அதனைக் கொடுக்க மறுத்துள்ளார். இதனால், அந்த மாணவனுக்கும் முதல்வருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்பு மனம் உடைந்த அந்த மாணவர், அன்று மாலை தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், அந்த மாணவர் எழுதியதாக கடிதம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில், ''நான் தற்கொலை செய்துகொள்வதால் என்னை கோழை என்று அழைப்பார்கள். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால், எனது மரணம் வீண் ஆகிவிடக் கூடாது. நான் இறந்துபோனால் அதற்கு முழு காரணம் முதல்வர் திரு.வேணுகோபால் என்று அவர் தெரிந்துகொள்ள வேண்டும். இதற்கு மேலும் மாணவர்களை அவர் துன்புறுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்'' என்று குறிப்பிட்டு இருந்தது. இது மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கியது. ஜே.டி சிங்கின் மரணத்துக்குக் காரணமான பல்கலைக்கழக முதல்வரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, மாணவர்கள் கல்லூரியில் இருந்து சாலையில் சற்று தூரம் பேரணியாகச் சென்றனர். அப்போது கல்லூரி மீது மாணவர்கள் கற்களை வீசி கோபத்தை வெளிப்படுத்தினர். இதற்கிடையே சிங்கின் உடல் சென்னை ராயபேட்டை அரசு மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டு, அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கபட்டது. இந்நிலையில் திங்கள்கிழமை காலை கல்லூரியில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இரங்கல் கூட்டம் முடிந்த பின்னர் 'வேணுகோபால் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக கூறி, மாணவர்கள் அமைதி காக்கவும்' என அறிவுறுத்தப்பட்டது. துக்கம் அனுஷ்டிக்கும் பொருட்டு நேற்று கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கபட்டது. கலைந்து செல்லும் மாணவர்கள் எந்த அசம்பாவித செயல்களிலும் ஈடுபடாமல் தடுக்க, கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. காவலர்களும் கல்லூரி நிர்வாகத்தினரும் மாணவர்களை கலைந்து செல்லுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர். அதனை அடுத்து மாணவர்கள் கலைந்து சென்றார்கள். வேணுகோபால் தலைமறைவாகி உள்ளதாகவும், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கானத்தூர் காவல் நிலைய போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கல்லூரி மாணவர் கல்லூரியின் முதல்வர் செய்த கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கானத்தூர் பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஒருசேர உருவாகி உள்ளது

Read more at: tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: