புதன், 12 ஆகஸ்ட், 2015

காதல் ஜோடியை சித்ரவதை செய்த 6 பேர் கும்பல்: சில்மிஷம் செய்து பணம் பறிப்பு

கோவை பீளமேடு தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல் (வயது 27). இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அதே மருத்துவமனையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் நர்சாக பணிபுரிந்து வருகிறார். ஒரே மருத்துவமனையில் இருவரும் பணி புரிந்ததால், அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் இருவரும் காதல் வசப்பட்டனர். உண்மை காதலர்களாக இருவரும் அடிக்கடி வலம் வந்தனர். விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தனர். சம்பவத்தன்று காலை சாமுவேல், தனது காதலியுடன் மோட்டார் சைக்கிளில் வால்பாறைக்கு சுற்றுலா சென்றார். பின்னர் அவர்கள் இருவரும் கோவை நீலாம்பூர் எல் அண்டு டி பைபாஸ் ரோட்டில் பட்டணம் பிரிவை கடந்து, நாகமநாயக்கன்பாளையம் ரோட்டில் இரவு 7.30 மணிக்கு வந்து கொண்டு இருந்தனர். அப்போது, சாமுவேலுக்கு செல்போனில் அழைப்பு வந்துள்ளது. இதனால் அவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி செல்போனில் பேசினார். அந்த நேரத்தில் அங்கு வந்த ஒரு வாலிபர் திடீரென்று சாமுவேலின் மோட்டார் சைக்கிள் சாவியை பிடுங்கிக்கொண்டு காட்டுக்குள் ஓடினார்.

உடனே சாமுவேலும் அந்த வாலிபரின் பின்னால் ஓடினார். அவருடன் காதலியும் ஓடியுள்ளார். சிறிது தூரம் சென்றதும் அந்த வாலிபர் நின்று விட்டார். அப்போது அவருடன் 5 வாலிபர்கள் சேர்ந்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் 6 பேரும், சாமுவேல் மற்றும் அவரது காதலியை சினிமா வில்லன்கள் பாணியில் சுற்றி வளைத்தனர்.
இதனால் சாமுவேலும், அவரது காதலியும் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது அவர்களை சுற்றி வளைத்த 6 பேரில் ஒரு வாலிபர், யாரும் இல்லாத காட்டுக்குள் இந்த பெண்ணோட என்ன செய்கிறாய்? ஜாலியாக இருக்கத்தானே அழைத்து வந்தாய்? என்று கேட்டுள்ளனர்.
அதற்கு சாமுவேல், நீங்கள் நினைக்கிறது போல் அல்ல, இவள் எனது வருங்கால மனைவி. தற்போது உயிருக்கு உயிராக காதலித்து வருகிறோம். விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளோம். செல்போன் அழைப்பு வந்ததால், பேசுவதற்காக மோட்டார் சைக்கிளை நிறுத்தினேன் என்று கூறியுள்ளார்.
ஆனால் அந்த 6 பேர் கொண்ட கும்பல் சாமுவேலை சரமாரியாக தாக்கி, நீ மட்டும் வீட்டுக்கு போ. இந்த பெண்ணை நாங்கள் பரிசோதிக்க வேண்டும் என்றனஇதனால் அதிர்ச்சி அடைந்த சாமுவேல், உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன், எங்களை விட்டு விடுங்கள் என்று கெஞ்சியுள்ளார். ஆனால் அவர்கள் விடாமல் சாமுவேலை தாக்கியதால் அவரின் காதலி, சாமுவேலை இறுக்க கட்டிப்பிடித்தபடி ஒன்றும் செய்து விடாதீர்கள் என்று கதறி அழுதார். உடனே அந்த கும்பல், எங்க முன்னாலே ஜாலியா? என்று தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். பின்னர் அவர்கள், இருவரையும் கட்டி பிடிக்க வைத்து விதவிதமாக போட்டோ எடுத்ததோடு, சாமுவேலை முட்டிப்போட வைத்துள்ளனர். அதைத்தொடர்ந்து, சாமுவேலின் கண்முன்னே, அவரது காதலியை அந்த கும்பலை சேர்ந்த 6 பேரும் சில்மிஷம் செய்துள்ளனர். இதனால் சாமுவேல், விட்டு விடுங்கள் என்று மீண்டும் கெஞ்சினார்.
தொடர்ந்து அவர்களை சித்ரவதை செய்த அந்த கும்பல், சாமுவேல் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தையும், அவரது காதலி வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தையும் பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இதனால் சாமுவேல், தனது காதலியை அழைத்துக் கொண்டு கவலையுடன் வந்தார். பின்னர் அவர் தனது காதலியை கோவை ராமநாதபுரத்தில் உள்ள, தங்கும் விடுதியில் விட்டு விட்டு தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த கும்பலை சேர்ந்த ஒரு வாலிபர், மீண்டும் சாமுவேலை செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக திட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த சாமுவேல் கொடுத்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த 6 பேர் கொண்ட கும்பலை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கோவை பட்டணம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (25), தமிழ்அன்பு (24), தினேஷ் (23), வெங்கடேஷ் (25), ராஜ் என்ற ராமராஜன் (24), விக்னேஷ் (25) என்பது தெரியவந்தது. பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-
சம்பவத்தன்று, 6 பேரும் கிரிக்கெட் விளையாட நீலாம்பூர் எல் அண்டு டி பைபாஸ் ரோட்டில் உள்ள ஆனைமலை அம்மன் கோவில் மைதானத்துக்கு சென்றோம். அங்கு நடந்த கிரிக்கெட் போட்டியில் நாங்கள் தோற்று விட்டோம். இதனால் கவலையுடன் டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தோம். பின்னர் வீட்டுக்கு செல்லும் வழியில் சாமுவேல் தனது காதலியுடன் சில்மிஷத்தில் ஈடுபட்டிருப்பதை பார்த்து ஆத்திரத்தில் மிரட்டினோம்.
இதில் பயந்துபோன சாமுவேல் உங்களுக்கு பணம் வேண்டுமானால் தந்து விடுகிறேன் எங்களை விட்டு விடுங்கள் என்று கூறி ரூ.15 ஆயிரம் கொடுத்தார். கிரிக்கெட் போட்டியில் தோற்ற வேதனையில் இருந்து எங்களுக்கு, அந்த தொகை சந்தோஷத்தை அளித்தது.
இதனால் அந்த பணத்தை வாங்கிக்கொண்டு மீண்டும் நண்பர்களுடன் சேர்ந்து மதுக்கடைக்கு சென்று குடித்தோம். தற்போது போலீசில் மாட்டிக் கொண்டோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.  /tamil.webdunia.com

கருத்துகள் இல்லை: