செவ்வாய், 30 டிசம்பர், 2014

திக்விஜய் சிங் : மத சுதந்திர சட்டம் நாட்டுக்கு மிக அவசியம்.மதமாற்ற தடை தேவையில்லை

போபால்: நாட்டிற்கு தற்போது தேவைப்படுவது மத சுதந்திர சட்டம் தானே ஒழிய மதமாற்ற தடை சட்டம் அல்ல என  காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு பதிலடி கொடுத்துள்ளார்.உத்தரபிரதேசம், குஜராத், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அண்மைக்காலமாக நடைபெற்று வரும் மதமாற்ற சம்பவங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. இதுகுறித்து பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரையே ஸ்தம்பிக்கச் செய்தனர். இந்த சூழலில் மதமாற்ற தடைச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என ஆர்எஸ்எஸ், விஎச்பி உள்ளிட்ட இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்று உத்தரபிரதேசம் லக்னோவில் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரவேண்டும்.


இந்த விஷயத்தில் எதிர்கட்சிகள் அனைத்தும் ஒத்த கருத்துடன் ஒத்துழைக்க முன்வர வேண்டும் என்றார். ராஜ்நாத் சிங்கின் இந்த பேச்சு பல்வேறு தரப்பிலும் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் போபாலில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், கட்டாய மதமாற்றத்தையும், அதற்காக தூண்டுவதையும் நான் எதிர்க்கிறேன். ஆனால் அதே நேரத்தில் வருகிற 2060ல் இந்துக்களை விட மற்றொரு தரப்பினரின் மக்கள் தொகை அதிகரித்து விடும் என்று வகுப்புவாத பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பொய்யான பிரசாரம் ஒரு சில அமைப்புகளால் நாடு முழுவதும் செய்யப்பட்டு வருகிறது.

தாய் மதத்திற்கு திரும்புதல் என்ற ஒரு சில இந்து அமைப்புகள் நடத்தி வரும் நிகழ்ச்சிகள்தான் தற்போது நாடு முழுவதும் சர்ச்சைகள் ஏற்படுவதற்கு காரணமாகியுள்ளன. மிகச் சிறந்த நிர்வாகி என்று பாராட்டப்படும் நமது பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் வாய் திறக்காமல் மவுனம் சாதித்து வருகிறார். ஆர்எஸ்எஸ், விஎச்பி போன்ற அமைப்புகளை கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலமாகவே அவரது அரசியல் எதிர்காலம் உள்ளது. தற்போது நாட்டிற்கு தேவை மத சுதந்திர சட்டம் தானே ஒழிய, மதமாற்ற தடைச் சட்டம் அல்ல என்றார். - See more tamilmurasu.org

கருத்துகள் இல்லை: