வியாழன், 16 அக்டோபர், 2014

ராமநாதபுரம் காவல் நிலைய கொலை: நீதி விசாரணைக்கு முதல்வர் பன்னீர்செல்வம் உத்தரவு!

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் காவல் நிலைய துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, நீதி விசாரணைக்கு முதல்வர் பன்னீர் செல்வம் உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் காவல் நிலைய சப். இன்ஸ்பெக்டரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சையது முகம்மது என்ற வாலிபர் சுட்டுகொல்லப்பட்டார். நீதிபதியின் விசாரணைக்கு பின் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சையது முகம்மதுவின் உடல் நேற்று மாலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின் உடலை செய்யது முகம்மதுவின் உறவினர்களிடம் போலீஸார் ஒப்படைக்க முயன்றனர்.  கொலைவழக்கு பதிவு செய்க ஆனால், சையது முகம்மதுவை சுட்டுகொன்ற போலீஸ் எஸ்.ஐ. காளிதாஸ் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவரை கைது செய்து பணி நீக்கம் செய்ய வேண்டும். பலியான செய்யது முகம்மதுவின் குடும்பத்திற்கு அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து விட்டனர்.
எஸ்.பி. பேச்சுவார்த்தை இது குறித்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் போது, ''நீதிபதியின் விசாரணை அறிக்கையின் அடிப்படையிலேயே மேல் நடவடிக்கை எடுக்க முடியும். அதற்கு சில தினங்கள் ஆகும்" என எஸ்.பி கூறினர். உடலை வாங்க மறுப்பு இதனை ஏற்க மறுத்த செய்யது முகம்மதுவின் உறவினர்கள், நீதிபதி அறிக்கை அளித்த பின் உடலை வாங்கிக்கொள்வதாக கூறி சென்றனர். இதனால், பிரேத பரிசோதனை செய்யபட்ட செய்யது முகம்மதுவின் உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை சவக்கிடங்கிலேயே வைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் உத்தரவு இதனிடையே சுட்டுக்கொல்லப்பட்ட சையது உடலை அரசு மருத்துவமனையிலேயே பாதுகாப்பாக வைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த சகுபர் அலி மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன் இந்த உத்தரவை பிறப்பித்தார். மேலும் சையது கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளார். நீதி விசாரணைக்கு உத்தரவு இது தொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில் 14.10.2014 அன்று எஸ்.பி.பட்டினம் மேலத் தெருவைச் சேர்ந்த சையது முகமது, பழுது நீக்கும் கடையில் விடப்பட்டிருந்த தனது நண்பரின் இரு சக்கர வாகனத்தை திரும்ப கேட்டிருக்கிறார். அப்போது ஏற்பட்ட தகராறு சம்பந்தமாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, உதவி ஆய்வாளர் காளிதாஸ் விசாரணை மேற்கொண்டபோது, சையது முகமது துப்பாக்கியால் சுடப்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இந்தச் சம்பவம் தொடர்பாக உதவி ஆய்வாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து குற்றவியல் நீதிமன்ற நடுவர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த சையது முகமது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: