திங்கள், 7 ஏப்ரல், 2014

தினமணி' ஆசிரியர்: தன்னார்வ அமைப்புகளால்தான் நாட்டின் வளர்ச்சி சாத்தியம்

லஷ்மன் ஸ்ருதி இசைக் குழு நடத்திய லஷ்மன் ஸ்ருதி இசைக் குழு நடத்திய "இன்னிசைத் தமிழ்' இசை நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கிய, தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதனுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் யுவசக்தி அமைப்பின் உறுப்பினர் அகிலா. உடன் (இடமிருந்து) அமைப்பின் உறுப்பினர் ஐஸ்வர்யா, நிறுவனர் ஸ்ரீதர், லஷ்மன் ஸ்ருதி இசைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் லஷ்மன். "யுவசக்தி' போன்ற தன்னார்வ அமைப்புகளால்தான் நாட்டின் வளர்ச்சி சாத்தியம் என தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் கூறினார்.

யுவசக்தி தன்னார்வ அமைப்புக்கு நிதி திரட்டுவதற்காக, இன்னிசைத் தமிழ் எனும் திரை இசைப் பாடல்கள் நிகழ்ச்சி, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. லஷ்மன் ஸ்ருதி இசைக்குழு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் பேசியதாவது:
நிறைய பணம் சம்பாதித்து அதன் மூலம் உல்லாச வாழ்க்கை வாழத்தான் படிப்பு என்ற கருத்தாக்கம் இன்று காற்றைப் போல் எங்கும் வியாபித்துள்ளது. தவறான இந்தச் சமூகப் போக்கை மாற்றும் நோக்கில் யுவசக்தி அமைப்பு செயல்பட்டு வருகிறது.
வீதிதோறும் இதுபோன்ற அமைப்புகள் அவசியம் தேவை. ஏனெனில், யுவசக்தி போன்ற தன்னார்வ அமைப்புகளின் சேவையால் தான் நம் நாடு, சமூகம் காப்பாற்றப்படும். நாட்டின் வளர்ச்சியும் சாத்தியமாகும்.
எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என நம் சமூகம் கெட்டுப்போய் கிடந்தாலும், எல்லாம் கெட்டுப்போய்விடவில்லை எனச் சொல்வதற்கு, பிரதமர் அலுவலகத்தில் தொடங்கி ஊழல்கள் எங்கு நடந்தாலும் அவற்றை வெளிக்கொணர, தவறுகளை இடித்துரைக்க, பாதை தவறி செல்லாத சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
நாம், தமிழர்கள் என்று சொல்லிக் கொள்வதற்கு அடையாளமாக பெற்ற குழந்தைகள் தங்களை மம்மி, டாடி என்று அழைக்க வேண்டுமென எதிர்பார்க்காமல், அம்மா, அப்பா என அழைப்பதை பெற்றோர் உறுதிசெய்தாலே போதும். தமிழும் காப்பாற்றப்படும், தமிழினமும் காப்பாற்றப்படும்.
அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா என்று ஒவ்வொரு உறவுக்கும் ஒரு பெயர் தந்து பெருமைப்படுத்துவது நமது இந்திய மரபில் மட்டுமே காணப்படும் சிறப்பு. அதை விட்டுவிட்டு, யாரைப் பார்த்தாலும் அங்கிள், ஆன்ட்டி என்று அழைக்கும் போக்குக்கும் நாம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
இளைஞர்களுக்கு நல்வழிக்காட்டும் யுவசக்தி அமைப்பு, தமிழ் உணர்வையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பது எனது வேண்டுகோள். சாமான்யர்களுக்கும் நல்ல தமிழ்ப் பாடல்களைக் கொண்டுச் செல்லும் லஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவுக்கு எனது வாழ்த்துக்கள் என்றார் அவர்.
திரைப்பட இயக்குநர் வசந்த்: தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக தமிழ் மொழி குறித்த அனைத்துத் தகவல்களும் இணையதளம் வாயிலாக இன்று நம் விரல் நுனியில் வந்துவிட்டது.
நமக்குத்தான் அவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வர வேண்டும். இசையின் தாக்கத்தால் இன்றைய சினிமா பாடல்களில், அவற்றின் சொல், பொருள், ஓசை நயம் சற்று குறைந்திருக்கலாம். ஆனால் எல்லா காலங்களிலும் நல்ல சினிமா பாடல்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன என்றார் அவர்.
நிகழ்ச்சியில் யுவசக்தி அமைப்பின் "விழிப்புக்குப் பின் விடியல்' எனும் கவிதைத் தொகுப்பை திரைப்பட நடிகை ரோகிணி வெளியிட்டார்.
முன்னதாக, பல்வேறு காலக்கட்டங்களில் வெளியாகி, காலத்தை வென்று நிற்கும் தமிழ்த் திரைப்பட பாடல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்ட பாடல்களை சத்யன், வேல்முருகன், சாய்சரண் உள்ளிட்ட திரைப்பட பின்னணிப் பாடகர்கள் மற்றும் லஷ்மன் ஸ்ருதி இசைக் குழுவினர் பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர் dinamani.com

கருத்துகள் இல்லை: