புதன், 9 ஏப்ரல், 2014

சொத்துக்குவிப்பு வழக்கை இழுத்தடிப்பதா?: ஜெ., சசிகலா மீது நீதிபதி காட்டம்


பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்தடிக்கும் வகையில் செயல்படுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா தரப்புக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தை மேற்கோள் காட்டி உச்சநீதிமன்றத்தில் பெற்ற 3 வார தடைஉத்தரவு நகலை நீதிபதியிடம் கொடுத்தார். இதை ஏற்று கொண்ட நீதிபதி குன்ஹா இறுதி வாதத்துக்குரிய தடைநகலை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். சொத்துக்குவிப்பு வழக்குக்கு இறுதி வாதத்துக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் லெக்ஸ் மற்றும் மெடோ நிறுவனங்கள் தொடர்பான வழக்கை விசாரிக்க நீதிபதி குன்ஹா உத்தரவு பிறப்பித்தார். ஆனால் இதனை ஏற்க மறுத்த சசிகலா தரப்பு வழக்கறிஞர் லெக்ஸ் நிறுவன வழக்கில் சாட்சியங்களை அழைத்து வரவில்லை என்று கூறினார். இதற்கு நீதிபதி விளக்கம் கேட்ட போது சசிகலா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்த பதிலில் அவர் அதிருப்தி அடைந்தார். அத்துடன் இந்த வழக்கை இழுத்தடிக்கும் நோக்கத்திலேயே செயல்படுவதாகவும் சாடினார். இந்த வழக்கை எவ்வாறு நடத்துவது என்று என லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: